Friday 31 May 2013

தருணம்…



கிளர்ந்தெழும் நினைவுகளின்
சுழலில் சுழல்கிறது மனம்

நதியில் நீந்தும் மீன்களைப் போல
நினைவுகளில் பயணிக்கிறது
ஒரு சொல்

அருகாமை நறுமணம்
உணவுப் பொருட்கள்
உடைகளின் வண்ணங்கள் என
ஏதாவது ஒன்றிலிருந்து
ஊற்றுப் போல நினைவுகள் உருக்கொள்கிறது

குளத்துத் தாமரைக் கொடிகளில்
சிக்கி மிதப்பது போலவும்
சுழித்து ஓடும் நீரில்
வந்தடையும் சிறுதுரும்பெனவும்
நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள்

தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென
அத்தருணங்கள் மாறிமாறி
வெவ்வேறு காலவெளிகளில் ஓடுகிறது
முழுதாய் விடுபடத் துடிக்கிறது

உன் நினைவு
தாமரை இலை மேல்
படர்கிறது

நீரின்
ஒரு பூவைப் பறித்துக்கொண்டு திரும்புகிறேன்
கூடவே
நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும் .

No comments: