Friday 31 May 2013

நாட்டியமாடும் நாள். . .



வழக்கத்திற்கு மாறாக
அதிகாலையில் எழுந்து கொண்டாள்
அந்தச் சிறுமி

பள்ளி நாட்களின் சோம்பலிலிருந்து
நாட்டியமாடப் போகிற நாள்

குளிர்ந்த நீரில் குளித்து
நீள் கூந்தலை உலர்த்தினாள்
ஒப்பனைகள் ஒவ்வொன்றாய்
நடந்து முடிந்தன
நீள் விழிகளை விரித்து மையிட்டுக்கொண்டாள்
உதடுகளில் சாயம் பூசிக்கொண்டாள்
இறுதியாக
நாட்டிய உடையினை அணிந்து கொண்டாள்

தன் முன்னிருக்கும் உலகிலிருந்து
வெளியேறி
தன்னுள் இயங்கும் உலகிற்குள் நடந்து செல்கிறாள்

ஆடை மாற்றுவதென்பது
மனதினை மாற்றுவது என்று
அறியாத சிறுமியவள்

நடந்து செல்கிறாள்
மனதிற்குள்ளும்
தாளகதியின் சப்தத்திற்குள்ளும்.

No comments: