Friday 31 May 2013

பறவையின் குரல்...


அலைபேசியில் குரல்களாய்
அடைகின்ற
பறவைகள்
முகம் திருப்பிப் பறக்கின்றன
தொலைவிடம் நோக்கி

ஏதுமறியாத
சிட்டுக்குருவியின் இதயத்தில்
படர்ந்திருக்கிறது
மின்பதற்றம்

பேசிக்கொண்டிருந்தோம்
பேசிக்கொண்டிருக்கிறோம்
பறவைகள் பற்றியும்

காதலும்
வெறுப்பும்
பிரிவும்
காமமும்
கட்டளைகளுமென
முகம்கொண்ட வார்த்தைகள்
மின் வார்த்தைகளாகின்றன

ஒருவரிடமிருந்து
ஒருவருக்கு
பின்னும்
பலருக்கும்

வெளியில்
மிதந்து கலைகிறது

சிட்டுக்குருவிகள்
அமர்ந்து பேசவியலாத
ஆகாயத்தில்
சிவப்பு வண்ணம்
படர்ந்திருக்கிறது.

No comments: