Saturday 14 February 2015

அக நானூற்றுப் பாடல்களில் கற்பிக்கும்முறை



நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் 12-02-2015 அன்று வாசித்த கட்டுரை :


மனிதன் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்த மொழியைப்  பயன்படுத்துகிறான். ஒரு மொழியின் உருவாக்கம் என்பது மனித பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையதாகும். அந்தமொழி தன்னுடைய சரியான வடிவத்தை அடைவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கும். . ஆதிகால வேட்டைச்சமூகத்தின் மொழியாக பல்வேறுவிதமான சைகைகளும் ஓசைகளும் இருந்திருக்கின்றன. ஓசையின் வேறுபாடுகள் வினைசார்ந்த வெவ்வேறு  அர்த்தங்களைத் தருவதாக இருந்திருக்கக்கூடும். மெல்லமெல்ல ஓசைகள் ஒவ்வொன்றும் செய்வினையின் ஒழுங்கில் அமைந்து தனித்த அர்த்தம் பெற்றிருக்கும். இந்தவகையான ஓசையின் அர்த்தமானது ஒரு பொருளைச் சுட்டுவதாகவோ அல்லது செயலைச் சுட்டுவதாகவோ உருவாகியிருக்கும். அதன்பின் ஓசையுடன் சைகையும் இணைந்து கூடுதலான பொருள் பொதிந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். இவையிரண்டும் தவிர ஆதிச்சமூகத்தினர் தங்களுடைய கருத்தை சித்திரங்கள் வழியாகவும் வெளிப்படு்த்தினர். அவ்வகையான சித்திரங்கள் மனிதமன உணர்வுகளின் அடித்தளத்திலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக உருவானவை. சித்திரவடிவம் தன்னுடைய முழுமையான ஒழுங்கைப் பெறுவதற்கு முன்பாகவே அவற்றிற்கு ஓர் அர்த்தத்தளம் உருவாக்கப்பட்டிருக்கும். ஓசையும், சைகையும், சித்திரமும் ஒன்றோடொன்று தன்னியல்பில் இணைந்து  மெல்லமெல்ல மொழியும் எழுத்தும் உருப்பெற்றிருக்க வேண்டும். மனித வரலாற்றில் மொழியின் உருவாக்கமென்பது ஏடறியா காலத்திற்கு முந்தையது.

   ஓசையெழுப்புதல் மூலம் கருத்துகளைத் தெரியப்படுத்தியதுபோல கடின உழைப்பின் போது வேலையின் பளு தெரியாமல் இருப்பதற்காக சத்தமிட்டுக்கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி சப்தமிடுதல் என்பது ஒருவகையான இசைமையோடு வெளிப்படத் தொடங்கியது. இன்றைய காலத்திலும் கடுமையான உழைப்பின்போது சத்தமெழுப்பி, ஒன்றுபட்டுக் கத்துவதையும், இசைமையாக சப்தமெழுப்புவதையும் கேட்கமுடிகிறது. இவ்வாறு ஓசையின் தாளலயம் ஒழுங்குபடுத்தப்பட்டு இசையாகப் பரிணமித்து, மொழியின் வளர்ச்சியில் பாடல் வடிவமாக வெளிப்பட்டிருக்கும். பாடலின் மூலமாகக் கருத்துக்களைத் தெரியப்படுத்தும் வழக்கம் படிப்படியாக அறிவுருவாக்கச் செயலாக மாற்றம் பெற்று, அடுத்தகட்டத்திற்கு அல்லது அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும்.

    காலந்தோறுமான மனித எத்தனங்கள் அனைத்தும் வழிவழியாகக் கடத்தப்பட்டிருக்கிறது என்பதை தன்னிச்சையான செயலாக மட்டுமே கொள்வதென்பது இயலாது. கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும் மனித வாழ்வின் பெரும்பகுதியாக இருந்ததாலேயே இது நிகழ்ந்திருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு அசைவிலிருந்தும், அசைவின்மையிலிருந்தும் மனிதன் கற்றுக்கொள்கிறான். அறிவைப் பெறுவது கற்றலின் முதல் நிலையாகும்.  ஒழுங்கையும்நடைமுறை உண்மைகளையும் வாழ்வின் உன்னதங்களையும் கற்றுக்கொள்வது அடுத்தடுத்த படிநிலைகளில் அமையும்.

    ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் கற்றுக்கொள்வது முதலில் பெற்றோரிடமிருந்துதான். அவர்களது செயல்களை உற்றுக் கவனித்துத்தான் மொழியையும் கலாச்சாரத்தையும் இன்ன பிற அறிவை பெற்றுக் கொள்கின்றன. வளர்ச்சிப்போக்கில் தாம் கற்றதை தன் வாழ்வில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் செயலாகும். தாய்தந்தைபிள்ளைகள் என்கிற உறவுகளுக்கிடையில் பரஸ்பரம் கற்றுக்கொடுத்தலும், கற்றலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு  விவசாயி தன் வேளாண்  அறிவை தன்னுடைய மூதாதையினரிடமிருந்து பெற்று, தன்னுடைய அறிதலின்மூலம் மேலும் வளப்படுத்துகிறான். தாய் தந்தையர் கற்றுத்தருவது வாழ்வி்ன் முழுமையை எய்துவதற்கு போதாத நிலையில்தான் ஆசிரியரைக் கொண்டு கல்வியைப் பெற்றுக்கொள்கிற நிலை ஏற்படுகிறது. இலக்கியங்கள் இதனை வெளிப்படுத்துகின்றன.

  சங்ககாலத்தில் கல்வி கற்கும் பண்பு ஒரு கலாச்சாரமாக வடிவம் பெற்றிருந்ததை சங்கப்பாடல்கள் தருகின்றன. தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியர் அவரது ஆசானின் தலைமையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என பனம்பாரனார் குறிப்பிடுகிறார். “முந்நு நூல்கண்டு முறைப்பட எண்ணி” என்ற பாயிரத்தின் வரி தொல்காப்பியர் முறைப்படி கல்வி பயின்று நூல்களைக் கற்றத்திறத்தை வெளிப்படுத்துகிறது.

  அக்காலத்துச் சமூக மக்களிடம் ஐம்பெருங்குழுக்கள் தத்தம் தொழிலைச் சிறப்புறச் செய்தன என்பதை கனகசபைபிள்ளை எடுத்துக்காட்டுகிறார் அவர்களில் குருமார் என்போரும் இருந்தனர். அந்தணர்கள் கல்வியைக் கற்போராகவும் கற்றுக்கொள்வோராகவும் இருந்ததை சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. ‘ஓதல் அந்தணர் வேதம் பாட’(மது.655) என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. ‘கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்’ (புறம்.361) என்றும்கேள்வி அந்தணர் அருங்கடல் இறுத்த வேள்வி’ (பெரும்.315) என்றும் அவர்கள் கல்வி கேள்விகளிலும் வேதம் முதலியவற்றைக் கற்றுக் கொண்டு வேள்வி முதலியவற்றைச் செய்தனர் எனவும் குறிப்பிடுகின்றன. மேலும் ஆசிரியர் என்போர் கல்வி கற்றுக் கொடுக்கும் அளப்பரிய பணியைச் செய்தனர் என்றும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

தொல்லாணை நல்லாசிரியர்
புணர்க்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் “(மது.761) என்று மெய்யுணர்ந்த ஆசிரியர்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும் பல நூற்களைக் கற்றுணர்ந்து அதன்படி பிறருடன் உண்மை கண்டுணர்தல் பொருட்டு வாதம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும் ,
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த உருகெழ கொடியும்” (பட்.169)
எனவும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
ஆசிரியருக்குத் தம் கைப்பொருளைக் கொடுத்து கல்வி கற்றதனைப் பற்றி
கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணும் விச்சைக்கண்” (கலி.149) என்ற கலித்தொகைப் பாடல் வரியும், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் என்கிற அரசன் எழுதிய "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!”(புறம்:183) புறநானூறு பாடல்வரியும் குறிப்பிடுகிறது. வறிய நிலையிலும் கல்வி கற்பதை மேன்மையாகக் கருதியதை,
அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெரும்செம் மலனே“ (குறு.33)
என்ற பாடல் இரந்து உண்ணும் வறிய நிலையில் இருந்த போதிலும் வேற்றூர் சென்று கல்வி கற்க முனைந்த இளம் மாணவரைப்பற்றிக் குறிப்பிடுகிறது. இவ்வாறு சங்க இலக்கிய காலமானது கல்விக்கு மேன்மையான இடத்தை அளித்திருந்தது.சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்று சங்க இலக்கியத்தில் பொன்முடியார் கூறுவதும் கல்வியில் உயர்ந்தவனாக்குதல் என்ற பொருளில்தான். எனவே சங்கச்சமூகம் கற்பித்தலுக்கு முதன்மையான இடம் தந்துள்ளது என்பதை அறியலாம்.

    இவ்வடிப்படையில் அகநானூற்றுப்பாடல்களில் கற்பித்தல் என்ற பண்பு அமைந்துள்ள  பாங்கைப்பற்றி அறிய முனைவது இக்கட்டுரையின் நோக்கமாகும். அகநானூறு சங்க அகக்கவிதையின் நெடுவெண்பாட்டு என்றும் கூறலாம் . நெடுந்தொகை என்று கூறுவதற்கு ஒப்பான நூலாகும். கற்பித்தல் என்பதை அறிய வைத்தல் என்ற பொருளிலே கொள்வது மரபாகும். அறியாமையிலிருக்கும் மாந்தருக்கு உரிய அறிவைத் தருதல் என்பதாகக் கொள்ளலாம். அகநானூற்றுப் பாடல்களைக் கற்கத் தொடங்கும் பொழுதே கற்பித்தல் என்பது தானே நிகழ்கிறது அதாவது பாடல்களின் கூற்றுக்கள் வாயிலாக உணர்வு வெளிப்பாட்டினை உணரத் தொடங்கியவுடன் அந்த உணர்வுகளைப் பயிற்றுவிக்கும் கற்பித்தல் தானே நிகழ்கிறது. பிரிதல்” என்ற உரிப்பொருளில் கல்விக்காகப் பிரிதல் என்பதும் முக்கியமானது. கற்பித்தல் என்ற செயல்பாடு ஓர் பண்பாட்டு நிகழ்வாக, அனுபவமாக அகநாநூற்றில் காணப்படுகிறது.

   கிளி விளி பயிற்றும்“ (அகம்.12) என்ற வரியில் பயிற்றும் என்ற சொல் அக்காலத்து பயிற்றுப் பண்பினை வெளிப்படுத்துவதாகும். கிளிகள் தினை கொய்வதற்குத் தன் இனத்தை அழைக்கும் எனப் பொருளாகிறது. கிளி பிறிதொரு கிளியை தினை கொய்ய அழைத்தலை பயிற்றுதல் எனக் கொள்கின்றனர். அது அறிவித்தல் என்பதாகவும் காணப்படுகிறது. தினைப்புனம் காக்கும் பெண்களின் குரலை கிளியின் குரலுக்கு ஒப்ப இருப்பதாகக்கருதி ‘கூறுவதுகூறும்’ பயிற்றுமுறையின் ஒரு கிளி மற்றகிளிகளை அழைத்ததாக இப்பாடல் அமைந்துள்ளது. பயில்தல், பயிற்றுதல் என்பன புலமை மரபில் இருந்து உருவானவை. எனவே ஒருவர் சொல்ல மற்றவர் அதனைத் திரும்பச் சொல்கிற செவிவழி கல்விமுறைதான் ஆதி கற்பித்தல் செயல்பாடாக இருந்தது.

“திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி” (அகம்.32) என்ற பாடல்வரிகளில் மன்னனைப்போல தோற்றம் கொண்ட ஒருவன் அந்தத்தோற்றத்திற்கு மாறாக இரந்து வாழும் நிலையில் உள்ளவனைப்போல “பணிவான மொழியில் பலமுறை கூறி” தலைவியின் காதலைப் பெறுவதற்கு  தலைவன் முனைகிறான். தலைவியின் தோற்றம் கண்டு ஈர்ப்படைந்த தலைவன் தன் விருப்பத்தை ஒற்றைமுகமாக்கி வலியுறுத்துகிறான். “பயிற்றி” என்பது ‘மனதை ஒருமுகப்படுத்தி அது நிறைவேற பலமுறை கூறி வற்புறுத்தல்’ என்கிற பொருளில் இந்தப்பாடலில் அமைந்துள்ளது.

குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை ” (அகம்.13) என்ற பாடல் வரியில் காட்டில் பள்ளங்களில் வீழ்த்திப் பிடித்த பழகாத யானையைப் பயிற்றுவிக்கும் பாகன் அதற்கான உரிய மொழியில் தொழிலைப் பயிற்றுவிக்கிறான். யானைக்கு அதற்கான  மொழியின் மூலம் உணர்த்தும் பண்பில்  கற்பித்தல் என்பது தொழிலாக வெளிப்படுகிறது. அது போலவே குதிரையைப்பற்றி அறிந்த தேர்ப்பாகனை “நூல்அறி வலவ” (அகம்.114) என்று குறிக்கிறது குதிரை பற்றிய நுணுக்கங்களை அறிதல் என்பது அனுபவத்தில் கிடைக்கும் அறிவாகும். “நூல் அறி வலவ” எனக் குறிப்பதால் அது கற்பித்தல் என்ற செயல்பாட்டினை குறித்து அதனோடு தொடர்புடைய அறிதல் என்று கொள்ளலாம். குதிரையின் மனதை முறையாக அறிந்து அதனை தன்னுடைய குறிப்பின்படி  இயக்க அறிந்துள்ள தேர்ப்பாகனின் அறிவை ஒப்பிடுகின்ற பான்மை இதில் வெளிப்படுகிறது. குதிரையின் மனதை அறிந்துகொள்கிற நூல் வடமொழியில் அசுவ இருதய நூல் என்பர். குதிரையை வாகனமாக்கிக்கொள்வது வழக்கமானபோது அதனுடைய இயல்புகளைக்கணித்து செயல்படுவது தொழிற்படு கல்வியானது.


களிறு சுவைத் திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும்“ (அகம்.257) என்ற பாடல் வரிகளில்களிறானது யாமரத்தின் கிளைகளை முறித்து நீர் வருமாறு நாரினைச் சுவைத்துப் போட்ட சக்கையான சிதைந்த மரப்பட்டைகளை கல்வி அறிவு இல்லாத உப்பு விற்கும் உமணர்கள் தீமூட்டும் சுள்ளிகளாக பயன்படுத்துவர் என்கிறது. இங்கே கல்வி அறிவு இல்லாதவர்கள் என்ற குறிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்கள் தொழில் சார்ந்த அறிவைப் பெற்றிருப்பார்கள் என்ற போதிலும் அவர்கள் உரிய நூல் கல்வியைப் பெறாதவர்கள் என்ற பொருள்பட குறிக்கப்படுகின்றனர்.

விழையா உள்ளம் விழையும் ஆயினும் ,
என்றும் , கேட்டவை தோட்டிஅக மீட்டு , ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர்த் தெரியுங் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் , இன்ன
பொய்யோடு மிடைந்தவை தோன்நின்
மெய்யாண்டு உளதோ , இவ்வுலகத் தானே ?” (அகம்.286)   
என்ற பாடல் கல்வி கற்றார் தம் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் வலிமையுடையோர் வெளிப்படுத்துகிறது . இயல்பாகவே தீயனவற்றை விரும்பாத உள்ளமானது சிலநேரங்களில் அவற்றை விரும்பினாலும் கற்றறிந்தார் கூறக்கேட்ட நூற்பொருள்களை அங்குசமாகக் கொண்டு தங்கள் ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்வர்.  அறத்தையும் பொருளையும் கற்றுணர்ந்த பெரியோர் தீநெறி விலக்கி நன்னெறியில் கவனம் செலுத்தும் தன்மையுடையவர். “அறியன செய்யும் நும் போன்ற பெரியோர் எம்மிடம் பொய்யுடன் கூடிய புகழ்மொழி கூறினால் மெய் என்பது இவ்வுலகத்தில் எங்குளதோ , நான் அறியேன்” என தோழி தலைவனிடம் கூறுகிறாள். ‘தலைவன் கல்வி கற்றவன், அவன் கூறிய சொல்லே பொய்த்துப்போனால் நான் என்ன செய்வேன்’ என தலைவி கூறுவதன்மூலம் கல்வியில் சிறந்த பெரியோர் யாவரையும்விட மிகப்பெரியோர் என்று இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

    தலைவன் ஒருவன் செய்யத்தகாத செயல் ஒன்றினை செய்யத்துணியும்போது அவனுடைய குழந்தையின் களங்கமற்றபார்வை தடுத்துவிடும் என்கிறது ஒரு பாடல். தலைவன் ஒருவன் புதியதாக ஒரு பரத்தை ஒருத்தியை வதுவை கொள்ள விரும்பி மலர்மாலை அணிந்து மணக்கோலத்துடன் தன்னுடைய தெருவைக் கடக்கிறான். அவன் ஏறிச்சென்ற தேரின் குதிரை சப்தம் கேட்டு வெளியில் வந்த தன்னுடைய குழந்தையைக் கண்டு தேரைவிட்டு இறங்கி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டில் விட்டு மீண்டும் கிளம்ப முயல்கிறான். குழந்தை அவனை விட மறுத்து அழவே, மனம் மாறி தன் வீட்டிலேயே இருந்துவிடுகிறான். தலைவி இந்தக்காட்சியை தோழியிடம் சொல்வதுபோல அமைந்துள்ள இந்தப்பாடல், பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்வாயே ஆகுதல் வாய்த்தனம் ” (அகம் 66 ) இந்த வரி சான்றோர் கூறுகிற  பழமொழி உண்மையாகிறது என்பதைக் கூறுகிறது.

    இன்னா இசைய பூசல் பயிற்றலின்” (அகம்.52) என்ற வரியில் பயிற்றல் என்ற சொல் அடுத்தடுத்து கூறுதல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. குறமகளிர் வேங்கை மரத்தின் பூவைப் பறிக்க புலிபுலி ஓசையிட வேங்கை மரம் தானே தாழ்ந்து பூக் கொய்யக் கொடுக்கும் என்பது மலைவாழ் மக்களின் நம்பிக்கை. அதாவது தொடர்ந்தும் அடுத்தடுத்தும் சொல்வதன் வழியாக ஊரறியச் சொல்கிற செயலை வெளிப்படுத்துகிறது . தலைவன் தலைவியைக் களவில் தொடர்ந்து சந்திப்பதை தவிர்க்க அலர் ஏற்பட்டதை தலைவனுக்குத் தெரிவிக்க தோழி புலிபுலி என ஓசையிடுவதாகவும் கொள்ளலாம் . இது   ஒருவருக்கு ஒரு கருத்தை தெளிவிப்பதற்கு தொடர்ந்து கூறுதல் என்கிற வகையில் பயிற்றல் என்கிற சொல் இடம்பெற்றுள்ளது . அதேபோல ”உயா விளி பயிற்றும்யா உயர்நனந்தலை” (அகம்  19) பயிற்றும் எனபது இடைவிடாது என்கிற பொருளில் வருகிறது. உயர்ந்த யா மரங்களில் தங்கியிருக்கும் பருந்து இடைவிடாது துன்பக்குரல் எழுப்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு பாடலில், தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவன் அவளைப்பற்றி “மழலை இன் சொல் பயிற்றும் “ (அகம்-34) மழலை போன்ற இனிய சொற்களினால் பலகாலும் பயிற்றுவிக்கும் தலைவி என்கிறான்.  இந்தப்பாடல் வரிகளின் மூலம் ‘பயிற்றுதல்’ என்கிற சொல் ஒரு கருத்தை திரும்பத்திரும்ப சொல்லி பிறர் மனதில் பதிய வைப்பதாக பொருள்கொள்ள முடிகிறது.


    பரதவர் பாய் விரித்து மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லாது சேரியில் தங்கியிருந்தபோதும்சேரிப்பக்கத்துக் கழிகளில் சுறா முதலிய கொடிய மீன்கள் செருக்கித் திரிந்தபோதும் பெண்கள் பழி தூற்றியபோதும் எதற்கும் அஞ்சாது தலைவன் தலைவியைக் காண அடுத்தடுத்து வருகிறான். தொடர் செய்கையில் ஈடுபடும் தலைவனை பயின்று வரும் மன்னே”(அகம்.50) என்று குறிப்பிடுகிறது. அதுபோல் “இன்சொல் நன் பல பயிற்றும்“ (அகம்.74) என்ற வரி தலைவன் வந்துவிடுவான்ஆற்றியிரு என்கிற பொருளில் இடம்பெறுகிறது . அதாவது இனிய சொல்லை கேட்டு அதை கடைபிடித்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பயிற்றல்பயின்று என்பன தொடர்ச்சியாக எடுத்துரைத்தல் என்பது வாழ்வியல் கூறாக இருந்ததை பாடல்வரிகள் தெளிவிக்கின்றன.
                     
அருஞ்சுரம் அறிய அல்ல ; வார்கோல்
திருந்துஇழைப் பணைத்தோள், தேன்நாறு கதுப்பின்
குவளை உண்கண்; இவளோடு செலற்கு என
நெஞ்சுவாய் அவிழ்த்தனர் காதலர்
அம்சில் ஓதி ஆயிழை- நமக்கே ” (அகம்.129) என்ற வரிகளில் கடத்தற்கரிய பாலைநிலத்தில் பொருள்வயின் பிரிந்து செல்கிற தலைவன் தன்னுடைய தலைவிக்குக் தன் கருத்தை கூறி விளங்க வைத்தலைக் குறிக்கிறது. ஓதி என்று கூறுவதால் இது விளங்க வைத்தல் என்பதோடு கற்பித்தல் என்ற செயலை பொருள்படுத்தி அமைகிறது. "அம்சில் ஓதி "என்பது கூந்தலை நீவி காதோடு ஓதிச் சொல்லுதல் என்றும் எடுத்துக்கொள்ளலாம். 

   அக நானூற்றுப் பாடல்களில் வருகிற பயிற்றல் , ஓதல்மொழி என்கிற சொற்களை அதன் பயன்பாட்டு வகைமைகளை ஆராயும்பொழுது சமூகத்தின் செயல்பாடுகளில் அந்தகாலத்தில் புழக்கத்தில் இருந்த சொல்லாடல்களைப் பயன்படுத்தப்பட்டிருப்பது அறியமுடியும். இவ்வாறான பயன்பாட்டுச்சொற்களைக் கொண்டு அகநானூறை அணுகும் பொழுது கற்பித்தல் என்பது வாழ்வியல் முறையாக பரவலாக்கப் பட்டிருப்பதாகக் கொள்ளலாம். .

      பெண்களும் இளமையில் அறியவேண்டியவைகளை கற்றறிந்து  அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை சிறு முதுக்குறைவி” (அகம்-17) என்கிற சொற்றொடர் சிறிய வயதிலேயே புகழ்மிக்க பெரிய அறிவினைப் பெற்றவளாக தன் மகள் இருக்கிறாள் என்கிற செவிலி கூற்று வழியாக உணரமுடிகிறது.  


    இவைதவிர , அக இலக்கியங்கள் தோன்றிய காரணங்களை அறியவும் பின்வருகிற தலைமுறைக்கு  அக இலக்கியத்தின் பங்கு என்னவாக இருக்கமுடியும் என்பதை  ஆய்வதாகவும் கருத்தில் கொண்டு அகநானூற்றுப் பாடல்களை கற்கத் தொடங்கினால் இவை தன்னளவில் நின்று ஐந்து நிலங்களின் இயல்புகள்ஒழுக்கங்கள் போன்றவற்றை சிறந்த உவமைகளுடன் தெளிவுறுத்துகிறது .அக உணர்வுகளை கொண்ட பாடல்களாக இருந்தபோதிலும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளையும் சங்க அரசமரபினர் பற்றிய செய்திகளையும் அறிய முடிகிறது . பாணர்கள்அவர்கள் ஆண்ட நாடுகள் ,  சங்ககால ஊராட்சி முறை , சமயம் , தமிழரின் திருமணமுறைகள் , சங்ககால மக்களிடம் புழக்கத்தில் இருந்த புராணக் கதைகள் பற்றியும் பாடல்களே சான்றாக நின்று நமக்குக் கற்பிக்கிறது.

    தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,” (அகம்-349) நடுவுநிலை தவறாத துலாக்கோல் போன்ற குற்றமற்ற சொல்லை  உடைய நன்னன் என்கிற மன்னனைப்பற்றி குறிப்பு வருகிறது . இதனைப்போலவே இத்தொகுப்பு நூலுள் அகுதைஅதியமான் நெடுமான் அஞ்சிஆதிமந்தி, கரிகால்வளவன்தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்அண்டர் மகளிர்அத்தி (சேரன் சேனாதிபதி)அதிகன்ஆட்டன் அத்திஆதன் எழினிஆரியப் பொருநன்ஆரியர்ஆஅய் அண்டிரன்இருங்கோ வேண்மான்இளங்கோசர்இளம் பெருஞ் சென்னிஉதியஞ் சேரல் ஆகியோரும் இன்னும் பலரும் குறிப்பிடப்பெற்றுள்ளனர்.

முரண் மிகு வடுகர் முன்னுறமோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு” (அகம்-281) என்ற பாடல்வரிகளின் மூலமாக சந்திரகுப்த மோரியரின் தென்னகப்படையெடுப்புக்கு வடுகர் உதவினர் என்ற வரலாற்றுச்செய்தியையும் அறியமுடிகின்றது.

       சங்க காலத்தில் கடவுள் வழிபாடு மதம் என்கிற பெயரால் குறிப்பிடப்படவில்லை . முருகு , முருகன் என்கிற சொற்கள் சங்கப்பாடல்களில் பயின்று வந்துள்ளன. அக இலக்கியங்கள் முருகனை காதல் கடவுளாகவும்  புற இலக்கியங்கள் போர்க்கடவுளாகவும் வைத்துப் பார்த்தன. முருகனைக் குறித்து ஆடிப்பாடுகிற வெறியாட்டமும் குரவையாட்டமும் இருந்தன
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி “ (அகம் 1: 3)
என்றும்,
“ சூர் மருங்கறுத்த சடவை நெடுவேள் சினமிகு முருகன் “ (அகம் 59:10)
என்பது போன்ற பாடல்வரிகள் உள்ளன . அக இலக்கிய தலைவனை பாடும் இடங்களில் முருகனை வைத்து பேசும் இடங்கள் இருக்கின்றன.

நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும்கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள்கொள்துவரை ஆகியன குறிஞ்சிமுல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமைவரகுதிணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல்கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல்மீன்பிடித்தல்உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவுகொல்வேலைதச்சு வேலைகருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல்சங்கறுத்தல்கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும்இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. உற்பத்திப்பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் ‘சாத்து’ என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகுஅரிசிஇஞ்சிஏலம்மஞ்சள்இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம்அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியாஎகிப்துஉரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்குமயில்யானைத்தந்தம்முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன என்பனவற்றையும் குறிப்புக்களாக அறியமுடிகிறது .
 ‘சுள்ளி அம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
வளம் கெழு முசிறி “ (அகம்- 149)
என யவனர்களின் கடல் வாணிபம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. .

கட்டிடக்கலையில் சிறப்புப் பெற்றிருந்தமையும் வீடுகள் கோட்டைகள் நேர்த்தியாக வடிவமைகக்ப்பட்டிருந்தமையும் அகநானூற்றுப் பாடல்களின் மூலம் அறியமுடிகிறது . இதன் மூலம் சங்க கால மக்களின் கட்டிடக்கலை சார்ந்த அறிவு நமக்கு புலப்படுகிறது .
“ மகர நெற்றி வான்தோய்ப் புரிசைச்
சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில்
புகாஅர் நன்னாட் டதுவே “ (அகம் 181: 20-22)

    சமூகச் செயல்பாட்டின் மையமான குடும்ப அமைப்பின் தொடக்கமான ஒரு திருமணக்காட்சி அகநாற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
“ உச்சிக் குடத்தர்புத்து அகல் மண்டையர்,
 பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
கற்பினின் வழாஅநற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை”  (அகம் 86)
மணம் செய்து வைக்கும் முதிய மங்கள மகளிர் நிறைநீரோடு குடத்தைத்  தங்கள் தலையில் வைத்து மண்டை எனப்படுகிற புதிய மண்பானையை கைகளில் ஏந்தி ஒன்று கூடுவர் . மங்கலச்சடங்கு நிகழ்வுக்கு முன்னே தரவேண்டியது, பின்னே தரவேண்டியது என அனைத்தையும் முறையாக எடுத்துத் தந்தனர் . “அம்மாடிபெண்ணேசொல் திறம்பாமல் எல்லார்க்கும் உதவி செய்துகொண்டவன் விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்பவளாய் இரு என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலேநீரைச் சொரிந்துஈரப்பூவிதழ்களையும்நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்கள்அதோடு கல்யாணம் முடிகிறது. மஞ்சள் நீர் ஆடுவதும்பூநெல் சொரிவதும்வாழ்த்துவதும் தான்அகநானூற்றின்படிமண்ணுதல் என்று சொல்லப்படும் மணம் ஆகிறது. உளுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவான வெந்த பொங்கலோடு பெருஞ்சோற்றுத் திரளை உண்பது என்பது திருமண வீட்டின் வழக்கமாக இருந்தது . வரிசையாக கால்களை நட்டு குளிர்ந்த பெரிய பந்தல் அமைப்பதும் பந்தலில் மணல் கொட்டி பரப்பி மனையில் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டு அலங்கரித்த மரபு இருந்தது அறிய முடிகிறது.

     சங்க இலக்கியங்களிலேயே அகநானூற்றில்தான் முதலிரவு நிகழ்வு இலக்கிய நயத்துடன் காட்டப்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் ஒரு கோட்டோவியமாகவே இது இடம்பெற்றுள்ளது.
முருங்காக் கலிங்கம்முழுவதும் வளைஇ;
பெரும் புழுக்குற்ற  நின் பிறைநுதல்;பொறி வியர்
உறு வளி ஆற்றச்சிறு வரை திற’ என” (அகம் 136) இந்தப்பாடலில் திருமணம் முடிந்தபின் புதுமண மக்கள் தனித்து விடப்படுகின்றனர். தலைவி நாண மிகுதியால் முகம் புதைத்து நிற்கின்றாள். தலைவன் விருப்பமுடன் அவள் முகத்தை மூடிய கைகளை விலக்கிவிடத் தொடுகின்றான். தலைவனின் முதல் தீண்டலில் தலைவியின் நாணம் அச்சமாக மாறிப் பெருமூச்சாக மிகுந்துவிடுகின்றது. தலைவியின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைவன்அவளின் அச்ச உணர்வினைப் போக்கும்விதமாக, “நின் மனத்தில் நினைப்பதை அஞ்சாமல் கூறு“ என்று தணிந்த குரலில் இனிமையாகப் பேசுகின்றான். தலைவனின் மென்மையான சிரிப்பும் அருகில் அமர வைத்துபேசத்தூண்டியதுமான அணுகுமுறையும் தலைவின் அச்சத்தை நீக்குகின்றன. தலைவியின் மனத்தில் தோன்றிய மகிழ்ச்சி அவளின் முகத்தில் வெளிப்படுகின்றது என்ற செய்தி நயத்துடன் கூறப்பட்டுள்ளது.


இசையையும் கூத்தையும் வகைப்படுத்தி வாழ்ந்த சங்கமரபையும்  அறியமுடிகிறது. இசையின் இனிமையில் மயங்கி கேட்கும் ஒலியெல்லாம் ‘பண்’ போன்று இருப்பதாகக் கூறுகின்றனர். தேரில் கட்டப்பட்ட மணி ஒலிக்கும் ஓசை அவர்களுக்கு இளி என்னும் சுரம் போலத் தோன்றியதாகக் குறிப்பிடுவதை  “இளி தேர் தீம்குரல் இசைக்கும் அத்தம் “ (அகம்:33 ) என்ற அடிகள் புலப்படுத்துகிறது. சங்க காலத்தில் நடனம் கூத்து எனப்பட்டது. கூத்தரும்விறலியரும் கூத்தாடினர். கூத்து மன்னர்களாலும் பொது மக்களாலும் மிகவும் விரும்பப்பட்டு வந்தது. மன்னர்களும், வள்ளல்களும் கூத்தாடுபவரை ஆதரித்துக் கூத்துக் கலையை வளர்த்தனர்  என்பதை பல்வேறு பாடல்களின் வழியே அறிய முடிகிறது.
.
சங்ககாலத்துச் சூழலில் தொகுக்கப்படாத வாழ்வியல் சார்ந்த கல்விமுறையை கற்றுத் தேர்ந்தவர்களாக விவசாயம், வாணிபம் அழகியல்இசை , கூத்து ,தொழில்கள் என பலதுறையிலும் அறிவுடையோராகவும் வழிவழியாக அதனை அடுத்த தலைமுறையினருக்குக் கற்பிக்கிறவராகவும் இருந்தனர் என்பதற்கு அவர்தம் வாழ்வைப்பேசும் பாடல்கள் சான்றுகளாக அமைகின்றன. வேத பாடம் படித்தல் அந்தணர்க்கு கடமையாக இருந்தது. ஓதல், வேட்டல் ஆகிய தொழில்களை அவர்கள் செய்தனர் என்பதை அறியும்போதே பிற மக்கள் வாழ்வியல் கல்வியில் சிறந்து விளங்கினர் என்பதும் அறியமுடிகிறது.

   சங்ககால சமூகத்தினருக்கு  இலக்கியம், கலை, சமூகவாணிபம், வரலாறு, பண்பாடு ஆகிய பல துறைகளில். இருந்த அறிவை தொடர்ந்து பயிற்றுதல் மூலம் நிகழ்த்தினர் என்கிற சமூக அறிவை அகநானூற்றின் நானூறு பாடல்களும் தன்னளவில் நின்று இன்றைக்கும் கற்பித்தலை நிகழ்த்துகிறது.

%