Thursday 29 September 2016
பெண் –
உடல் , மனம் , மொழி :
சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..
28. பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்..
ஒரு பெண் இயக்குகிறாள்:
வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன
தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழ,
திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி;
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர்மிகுபு
நம்வயிற் புரிந்த கொள்கை
அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.”
முல்லை நிலகாட்சியில் விரிகிறது இந்தப்பாடல். மழைக்காலம் தொடங்கும் பொழுது வினைமுடித்துத் திரும்புவேன் எனக்கூறி தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். வினையும் நிறைவாக முடிந்தது. மழைக்காலமும் தொடங்கியது. தலைவியைக் காண்கிற வேட்கை தலைவனிடம் மிகுந்திருக்கிறது. தேர்ப்பாகனிடம் “தேரினை விரைந்து செலுத்துக” என்று கூறுகிறான்.
சங்கத்
தலைவியைப் போலவே நவீனப்பெண்ணும் திரும்புகிறவன் கவிதைகளோடு வரக்கூடும் என
எதிர்பார்க்கிறாள். காத்திருக்கிறாள். வான்திறந்து பெய்த மழையில் தெள்ளிய நீர் வானவில்லைப்
பிடித்துவைத்திருப்பது போன்ற காத்திருப்பில் இருக்குமவள் தனக்குள் கனவுகளையும்
கற்பனைகளையும் நிரப்பிக் கொள்கிறாள். நவீன வாழ்வின்
தலைவன், “ஒரு கல் கொண்டு அவளுடைய கனவுகளைக் கலைக்கிறானா அல்லது கவிதைகள் கொண்டு அவளை நிரப்புகிறானா” என்கிற பதற்றம் இன்றைய பெண்ணிடம் இருக்கிறது.
அவன் எப்படியிருப்பினும் பெண் காத்திருப்பவளாக இருக்கிறாள். ஆனால், அவன் பிரிந்து சென்றிருக்கும் காலங்களிலும்
இவள் விருப்பத்தில்தான் அவன் இயங்கிக் கொண்டிருப்பதாக நினைக்கிறாள். அவன் மீது தான் கொண்டிருக்கும் பிரியத்தை உணர்ந்து கொண்டிருப்பான் என்பதாக
நம்புகிறாள்.
“ஊர்மதி வலவ! தேரே
சீர்மிகுபு...”
“பொருளீட்டுதலின்
நிமித்தமோ போரின் பொருட்டோ வினைமேற் செல்ல வேண்டியது ஒரு ஆணின் கடமையாகவும்,
அச்சமயத்தில் அவனைப் பிரிந்து இல்லத்தில் ஆற்றியிருப்பது பெண்ணின் அறமாகவும்
சங்ககாலத்தில் வரையறுக்கப் பட்டிருந்தது. தலைவியைப் பிரிந்து அவ்வாறான செயலை
முன்னின்று முடித்தவன் வெகுதொலைவிலிருக்கும் தனது வசிப்பிடத்தை வேகமாகச் சென்றடைய
எண்ணுகிறான். அவனைச் சுமந்து விரைகிற வாகனம் மிக மெதுவாக ஊர்வதாக சலிப்புறும் அவன்
மனமோ ஒலியைக் காட்டிலும் வேகமாக முன்னகர்ந்து கொண்டிருக்கும்.”
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக வரலாற்றை மாற்றியமைக்கக்
கண்டுபிடித்த பலவற்றுள் ‘சக்கரத்திற்கு’ முதன்மையான இடமுண்டு. ஏனெனில் மனிதர்களின்
வாழ்க்கை முறையை அவர்களின் காலகதியை அசாதாரணமான முறையில் அது
மாற்றியமைத்துவிட்டது. இன்று ஒரு வெளியின்
பொருட்டு நாம் வெகுதூரமும், மிக விரைவாகவும் பயணிப்பதை சக்கரம் பொருத்திய
வாகனங்கள் ஏதுவாக்கிவிடுகின்றன. ஒரு வாகனத்தை ஓட்டும்போதோ அல்லது அதில் பயணிக்கும்
போதோ அதனையொட்டியே மனமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் நடந்து
செல்கையில் கிடைக்கிற அனுபவம் அலாதியானது. நடைப்பொழுதில்
மனதின் பயணம் என்பது பலமடங்கு வேகமாகவும்
அதேசமயம் நிதானமாகவும் இருக்கும். எங்கிருந்து எங்கு செல்கிறது
என்று கணிக்கமுடியாதபடி தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டிருக்கும்.
வயதை முன்னிட்டு காலை, மாலைப் பொழுதுகளில்
நடையினைப் பயிற்சியாக மேற்கொள்பவர்களுக்கும், பணியின்
காரணமாக நடந்து செல்ல நேர்பவர்களுக்கும், இரவுநேரக் காவலில்
ஈடுபட்டிருப்போர் நடந்து கொண்டேயிருப்பதற்கும் இடையிலான வாழ்வியல் வேறுபாட்டினையொட்டி
மனதின் பயணமும் வேறுபடுகிறது. காலமும் சூழலும் மனதின்
வேகத்தை முடிவு செய்கிறது.
கல்கியின் “பொன்னியின் செல்வன்”
நாவலில் ஒரு இடத்தில், ‘வந்தியதேவனும்,
இளைய பிராட்டியும் பேசியதை ஒட்டுக்கேட்ட ஆழ்வார்க்கடியான்
பழையாறையிலிருந்து அன்றைய தினமே புறப்பட்டான். வாயுவேக மனோ
வேகமாகத் தென்திசை நோக்கிச் சென்றான்’ என்று வரும். இதுபோல ஓரிடத்தில் அல்ல அக்கதை
முழுக்கவே, “வாயுவேக மனோவேகம்” என்கிற
சொற்றொடரை பல்வேறு இடங்களில் காணமுடியும். இதுமட்டுமல்ல, அக்காலகட்டத்தில்
எழுதப்பட்ட பல்வேறு சரித்திரக்கதைகளில், குதிரையை வேகமாகச்
செலுத்துகிற காட்சிகளில் பெரும்பாலும் “வாயுவேக மனோவேகம்” பற்றிக்
குறிப்பிடப்பட்டிருக்கும். குதிரைகள் என்றாலே அதனுடைய
வேகம்தான் நினைவுக்குவரும். அவை கவாயுவேகத்தில் சென்றன, காற்றைக்
கிழித்துக்கொண்டு சென்றன என்றெல்லாம் எழுதுவதன் வழியாக வாசிப்பவர் மனதில் குதிரைகளின்
வேகத்தை பலமடங்கு அதிகமாக்கிவிட முடிந்திருக்கிறது.
“காற்றை மனதோடு எதற்காக
ஒப்பிடவேண்டும், காற்று ஓரிடத்தில் நிற்காமல் அலைவதால்” என மிக எளிமையாக ஒரு விளக்கம்
சொல்லிவிடலாம். பகவத்கீதையில் அர்ஜுனன், “காற்று மாதிரி இந்த
மனசு கிடந்து பறக்கிறதே, காற்றைப் பிடித்து அடக்க இயலாதது
போலவே மனசையும் அடக்கமுடியவில்லை” என்கிறான். காற்றைப்போல
மனம் அலைந்து கொண்டிருப்பதுதான் மனதின் இயல்பாக இருக்கமுடியும். கீதையில் குறிப்பிடுகிற ‘தீபம் போல
ஒளிர்கிற யோகியின் மனம்’ கூட காற்றின் மெல்லிய அலைவுக்குள் அசைந்து கொண்டுதானிருக்கிறது.
கம்பராமாயணத்தில், இராமனின் வேகம், இலக்குமனின் வேகம், அனுமனின் வேகம் பற்றி குறிப்பிடுகிற பல பாடல்களில் “வாயுவேகம்”
பயன்படுத்தப்பட்டுள்ளது. “சொல் ஒக்கும் கடிய
சுடுசரம்” என்று பாலகாண்டத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது.
இராமபாணம் காட்டிலிருந்த தடாகையின் மார்பை ஊடுருவிப் பாய்ந்ததைப்
பற்றி கம்பர் இவ்விதமாகச் சொல்லுகிறார். நல்லோர்களின் சொல்,
மூடர்களிடம் தங்காது வெளியேறிச் செல்வது போல தடாகையை அழிக்க எய்த
இராமனுடைய பாணம் அவளைத் துளைத்து, அவளுள் தங்காது
மிகவேகமாக வெளியேறியதாக கம்பர்
குறிப்பிடுகிறார். முனிவர்களின் சாபம் பலிப்பதாகச்
சொல்லப்படுகிற புராணக்கதைகளில் ஒரு சொல் வினைபுரியும் வேகத்தினை அறிந்து கொள்ள
முடிகிறது. “சொல்” என்பது அத்தனை வேகமா
என்றால் அது மனதின் வேகமென்றே சொல்லலாம்.
சீரான சிந்தனையுடன் சொல்லப்படுகிற சொல், மனதின் ஆழத்தையும்,
அதன் வேகத்தையும் உணர்த்திவிடும்.
சீர்மையுடன்
செயல்படுகிறவனுக்கு இலக்கு இருக்கிறது.
அதனை நோக்கி இயங்குபவன், அப்பொழுது வேறு
எதனையும் நினைப்பதில்லை. பொதுவாக விளையாட்டு வீரர்கள் நூற்றுக்கணக்கில் கேமராக்கள் இருப்பதைப் பற்றியோ, விளையாட்டுத்திடலைச் சுற்றிலும் ஆயிரகணக்கானவர்கள் கைதட்டி ஆரவாரிப்பதைப்
பற்றியோ, தொலைக்காட்சிகளின் வழியாக லட்சக்கணக்கானவர்கள்
தங்களுடைய விளையாட்டைப் பார்க்கிறார்கள் என்பதையோ நினைவில் கொள்வதில்லை. ஓட்டப்பந்தையமோ, துப்பாக்கி சுடுவதோ, நீச்சல் போட்டியோ கலந்துகொள்பவரின்
மனோவேகம் என்பது அப்போதைய அவர்களது இலக்கை நோக்கியே இருக்கும்.
ரியோ
ஒலிம்பிக்ஸில் ‘மைகேல் பெல்ப்ஸ்’ கலந்துகொண்ட நீச்சல் போட்டியைப் பார்க்கும் பொழுது புரளுகிற நீரின் நீலமும் பச்சையுமான
வண்ணங்களில் தெறிக்கிற நீர்த்துளிகளின் வேகத்தில் உடலின் அசாத்தியமான இயக்கத்தை
உணரமுடிந்தது. கால்களில் அலைவும், சுழன்று திரும்பும் வேகமும்
ஒரு அதிவேக இயந்திரத்தை நினைவூட்டியது. தண்ணீரும் தானும் தவிர அங்கே வேறொன்றும்
இல்லை என்பதுபோல நீந்திக் கொண்டிருக்கும் நீச்சல் வீரர்களைப் பார்க்கிறவர்களும்
தங்கள் மனதிற்குள் சுழன்று திரும்பி, நீரைக் கிழித்து அதே வேகத்தில்
இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
இவ்விதமாக, முனைப்புடன் ஈடுபட்ட ஒரு செயலில்
வெற்றியடைந்த ஒருவன் அதை முதலில் யாரிடம் பகிர்ந்துகொள்ள
நினைப்பான்? யாரைத் தேடி அவன் ஓடிவருவான்? அந்த ‘யார்’ என்பது
பெரும்பாலும் மனைவி, சிலபோது அம்மா, சிலபோது
காதலி அல்லது தோழியாக இருக்கும். மிகச் சிறிய பொழுதே அப்பாவோ
நண்பனோ இருப்பார்கள். ரியோ ஒலிம்பிக்ஸில் 18வது முறையாக தங்கம் வென்றவுடன் ‘மைகேல் பெல்ப்ஸ்’
அணைத்து முத்தமிட்டது மனைவியையும் குழந்தையையும்தான். ‘மைகேல் பெல்ப்ஸ்’ தன்னுடைய மனைவியிடம் வெற்றியினைப் பகிர்ந்து
கொண்டது போலவே விளையாட்டு வீரர்கள் பலரும் ஒவ்வொரு விளையாட்டின் இறுதியிலும் செயல்படுவதைக்
காணமுடிகிறது. தன்னுடைய வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் கூட
தனக்கு விருப்பமான பெண்ணிடமே பகிர்ந்து கொள்வதற்கு பெரும்பாலும் ஆண்
விரும்புகிறான்.
வினை என்பது ஆடவரின் செயலாக ஆண்கள்
நெறிப்படுத்தப்பட்டிருக்க அவனை இயக்குபவளாகப் பெண் இருக்கிறாள். வினை ஒன்றினை முடிக்கச்
சென்றவன் சிறப்பாக முடிக்கிறான். முடித்தவுடன் மனைவியிடம்
அல்லது தனக்கு விருப்பமான பெண்ணிடம் பகிர்ந்துகொள்ள நினைக்கிறான். ஆனால் விளையாட்டு வீரர்களின் மனைவிமார்களைப்போல விளையாட்டுத் திடலில்
இல்லாமல் வீட்டில் இருக்கிறாள். அவளிடம் தன்னுடைய வெற்றியைப்
பகிர்ந்துகொள்ள உடனடியாக அவளிருக்கும் இடம் நோக்கி விரைந்து செல்வான்.
வெகுதூரத்திலிருந்து அவளுடைய
இருப்பிடம் நோக்கித் திரும்புகிறவனுக்கு அவன் வருகிற வாகனத்தின் வேகம் மிகமிகக் குறைவாக இருக்கிறதென்றே
தோன்றும். காற்றைவிட
வேகமாக வாகனத்தை விரட்டிச் செல்ல நினைப்பான். அப்போது
அவனுடைய மனமானது ஒலியை விடவும், ஒளியை விடவும் பலமடங்கான
வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். பிரிந்திருந்தவர்கள்
இணைகையில் காலம் அவர்களுக்கு முன்பாக மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருப்பதாக
நினைத்துக் கொள்வார்கள்.
வினை முற்றிய தலைவன்
தேர்ப்பாகற்குச் சொல்லியதாக பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் எழுதிய அகநானூற்றுப்
பாடல்,
“படுமழை பொழிந்த பயம்மிகு
புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்க,
குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப,
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்க,
குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப,
வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன
தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழ,
திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி;
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர்மிகுபு
நம்வயிற் புரிந்த கொள்கை
அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.”
முல்லை நிலகாட்சியில் விரிகிறது இந்தப்பாடல். மழைக்காலம் தொடங்கும் பொழுது வினைமுடித்துத் திரும்புவேன் எனக்கூறி தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். வினையும் நிறைவாக முடிந்தது. மழைக்காலமும் தொடங்கியது. தலைவியைக் காண்கிற வேட்கை தலைவனிடம் மிகுந்திருக்கிறது. தேர்ப்பாகனிடம் “தேரினை விரைந்து செலுத்துக” என்று கூறுகிறான்.
“தேர்ப் பாகனே,
ஒலியுடன் கூடிய பலத்த மழை பொழிகிறது. பயனுள்ள முல்லைநிலத்தின்
ஆழமான பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. அவற்றில்
தங்கியிருக்கும் வாய்ப் பிளந்த தேரைகள் சத்தமிடுகிற ஒலியானது பல வாத்தியங்கள் கலந்த இசையைப்போல வழிநெடுகிலும்
கேட்கிறது.
சிறிய
புதர்களில் இருந்து உதிர்கின்ற நீண்ட காம்புகளைக் கொண்ட பிடவப்பூக்கள் செம்மண்
நிலமெங்கும் உதிர்ந்து அந்த நிலத்தை அழகு செய்கின்றன. மிகுந்த சினமுடைய பாம்பின் படம் மேல்நோக்கியிருப்பது போன்று,
குளிர்ந்த காந்தள் பூவின் மொட்டுக்கள் மணங்கமழுமாறு கட்டவிழ்ந்து
மலர்கின்றன.
முறுக்கிய
கொம்பைக் கொண்ட ஆண்மான், தெளிவான
நீரைக் குடிக்கிறது. பின்னர் தன் மனத்துக்குப் பிடித்த துணை மானுடன் சென்று தங்குகிறது.
இப்படியாக, மழை
இந்தக்காடு முழுவதையும் அழகு செய்திருக்கிறது.
காட்டின்
நடுவேயுள்ள பெரிய பாதையில் வேகமாகக் குதிரைகளை ஓட்டிச் செல்கிறாய் நீ. உன்னுடைய குதிரைகளின்
பிடரி மயிர் அளவாகக் கத்தரிக்கப்பட்டுள்ளது, அவற்றின் கழுத்தில் உள்ள மாலைகள்
கால்வரை தழைந்து தொங்குகின்றன, அந்த
மாலைகளில் உள்ள மணி கம்பீரமாகச் சத்தமிடுகிறது.
பாகனே, தேரை இன்னும் வேகமாக ஓட்டு. அழகிய மாந்தளிர் நிறம்
கொண்டவள் என்னுடைய தலைவி, என்மீது ஆசை வைத்திருக்கும்
அந்தப் பெண்ணை விரைவாக நெருங்குவோம்.”
காதலியிடம் திரும்பவேண்டிய கார்காலம் வந்துவிட்டது. காட்டில் பெய்யும்
மழையும், குளிரும், தண்ணீரில்
கத்துகின்ற தவளைகளும், செம்மண்ணும், அதில்
கிடக்கும் பூக்களும், பாம்பின் படம் போன்று நிமிர்ந்த பிடவம்
பூக்களிலிருந்து காற்றில் மிதக்கும் வாசனையும், இணை
சேர்ந்திருக்கும் மான்கள் என யாவையும் அவனுக்கு அவளை நினைவுபடுத்துகின்றன. மழைக்கால முல்லைநிலக் காட்சியானது அவனுக்கு அவளுடைய உடலையும் அவளுடன்
கூடியிருந்த காலத்தையும் நினைவூட்டுகிறது. எனவே அவன்,
“தன்மீது மிகுந்த விருப்பமுடன் அவளும் அங்கே காத்திருப்பாள்,
அவளை உடனடியாக நெருங்கி இருக்கவேண்டும்.” எனச்
சொல்கிறான்.
தலைவன் கூற்றாக, பெண்பாற்புலவர் ஒருவர்
எழுதியுள்ள இந்தப்பாடல் தலைவியின்
விருப்பத்தையே முன்வைக்கிறது. தலைவன் மீதுள்ள காதலினால், அவனுடைய விருப்பமும்
செயலுமே தன்னுடையதெனக் கருதி அவளே இல்லையென்றாகியிருப்பாள். வினையாற்றும் பொழுது அவனுடைய
கவனம் சிதறாமல் இருப்பதற்கு தலைவிதான்
தூண்டுதல் செய்கிறாள். அவனுடைய வெற்றியை அவளிடமே முதன்முதலாகப் பகிர்ந்துகொள்ள
வேண்டுமென காத்திருக்கிறாள். அவனுடைய செயலில் வெற்றி கண்டவுடன் உடனடியாகத்
தன்னைத்தான் தேடி வரவேண்டும் என்பதை மட்டுமே அவள் விரும்புகிறாள். எனவேதான் சென்ற
காரியத்தை விரைந்து முடித்துவிட்டு வருகிற தலைவனின் பாதையில் எதிர்ப்படுகிற அனைத்தும்
தன்னை நினைவூட்ட வேண்டுமென குறிப்பால் உணர்த்துகிறாள். தலைவன்மீது அன்பு கொண்டுள்ள
தலைவியினுடைய விருப்பமே இங்கே
மனோவேகமாகிறது. அதுவே தலைவனை இயக்கி, தேர்ப்பாகனை விரைந்து செலுத்தச் சொல்கிற பாடலாக மாறியுள்ளது.
நிலமும்,
பொழுதும், காலமும் மாறியுள்ளன.
எனவே மனிதர்களின் வாழ்வியல் செயல்பாடுகளும் மாறுபட்டுள்ளன.
இப்பொழுதும் மழைக்காலம் தொடங்குகிறது. இப்பொழுதும் தலைவன்
பிரிந்திருக்கிறான். எந்தக் கணத்திலும் கதவைத் தட்டிவிட
மாட்டானா என்கிற தவிப்புடைய பெண்ணின் மனதினை வெளிப்படுத்துகிற மு.சத்யாவின் கவிதை,
“கார்மேகம் இறங்கி வந்துவிட்டது
மழை பொழியும் தருணம் இது
பருவங்கள் சந்திக்கும் நாளின்
அந்திப்பொழுது
தொட்டால் போதும் அந்த ரோஜாவை
எல்லா இதழ்களையும் உதிர்த்துவிடும்
வானவில்லைப் பிடித்து வைத்திருக்கிறது
தெள்ளியநீர்
ஒருகல் போதுமானது கலைத்துவிட
உன் காலடியோசை வந்து கதவு தட்டும்
கனவுகளையும் கற்பனைகளையும் கலைத்தபடி
உன்னைப் பிரிந்து பலநாளாகிவிட்டது
எந்த நொடியும் நீ வந்துவிடக்கூடும்
கூடை நிறையக் கவிதைகளைச் சுமந்தபடி.”
இவர் எழுதியதாக அகநாநூறில் ஒரே ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது. (அகம்:
154)
Thursday 15 September 2016
பெண் –
உடல் , மனம் , மொழி :
வெறிபாடிய காமக்கணியார்:
சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 27
ஒரு பெண் அறிந்திருக்கிறாள்:
“நோய்தணி காதலர் வர, ஈண்டு...”
“மகளுடைய அறியாமையை முழுமையாக அறிந்திருப்பவள்
அம்மாதான். மகள் தனது நோய்மைக்கான காரணத்தை வெளிபடுத்த இயலாமல் தவிக்கும்போது, அதை உணர்ந்தவளாக தான் அறிந்த வழிகளில் அம்மா
ஆற்றுப்படுத்த முயலுகிறாள். அம்மா அறிந்த ரகசியத்தை மகள் உணர்ந்து கொள்ளும் தருணம்
வரும்போது, அம்மாவை அவள் வெளியே தேடுவதில்லை. தானே
அம்மாவாகிவிடுகிறாள்.”
____________________________________________________________________________
அது கல்லூரி ஆசிரியர்களுக்கான மொழியியல் பயிற்சி
வகுப்பு. பங்குபெற்றவர்கள் அனைவரும் பெண்கள். திட்டமிட்டபடி
நேர
நிர்ணயத்துடனும் தொழில்முறை
சார்ந்த
நிபுணர்களால் பாடங்கள்
நடத்தப்பட்டன. வழக்கமான
பயிற்சி வகுப்புக்களைப்
போலவே விடுமுறை
நாளொன்றில் மலைப்பிரதேசத்திற்கு
அவர்கள் அனைவரும்
சுற்றுலா சென்றனர்.
அதிகாலையிலேயே தொடங்கிய
பயணத்தில், முதல்
அரைமணிநேரம் யாரும்
யாருடனும் பேசிக்
கொள்ளவில்லை. ஒரு
பெண் எழுந்து,
"என்னப்பா, எல்லோரும்
இவ்வளோ அமைதியா
வருகிறீர்கள்? ஒரு
பாட்டு, ஒரு
ஆட்டம் என
ஒன்றுமில்லாமல் என்ன
ஒரு சுற்றுலா"
என்று கேட்டார்.
அப்போது வேறு
ஒரு பெண், எல்லோரும்
அவங்கவங்க வீட்டுக்கு
'அட்டன்டன்ஸ்' போட்டுட்டு
இருக்கிறோம்' என்றார்.
அலுவல் மொழியான 'அட்டன்டன்ஸ்'
குடும்ப வழக்காக இடம் பெயர்ந்திருந்தது.
செய்கிற பணியிலிருந்து
வீட்டிற்கும், வாழும்
சூழலிலிருந்து பணியிடத்திற்கும் சொற்களைப்
பரிமாற்றிக் கொள்வதுதானே
இயல்பு. அனைவரும்
அவரவர் வீடுகளுக்குப்
பேசி முடித்தவுடன்
'பாட்டுக்குப் பாட்டு'
தொடங்கியது. எழுபது,
எண்பதாவது ஆண்டுகளில் வெளியான பாடல்களைப் பாடியபோது இளையராஜாவே முதல் இடத்தில் இருந்தார்.
தற்கால பாடல்களில்
தனுஷ், விஜய்,
அஜித், சிவகார்த்திகேயன்
என நடிகர்களின்
பெயர்களால் அப்பாடல்கள்
அடையாளப்படுத்தப்பட்டன.
இளையராஜாவின், "நிலா
அது வானத்து
மேலே... ' பாடலுக்கு
எழுந்து பலரும்
ஆடத் தொடங்கினார்கள்.
அதன் பின்பு
கைவசமிருந்த 'பென்டிரைவ்'
ஒன்றிலிருந்த புதிய
பாடல்களை ஒலிபரப்பி,
ஆடல் களைகட்டியது.
ஆட்டத்தில் கலந்து
கொள்ளாதவர்கள் கைகளைத்
தட்டி ஆரவாரம்
செய்தவாறு இருக்க கொண்டாட்டத்துடன்
பயணம் தொடர்ந்தது.
இறுதியாக அவர்கள்
சென்ற இடம்,
கண்களுக்கெட்டிய தூரம்
வரையில் மலையின்
பசுமை, பச்சை
நிறத்தின் மீது
அசைந்தாடும் பஞ்சு
மேகங்கள், எப்போதும் தூறிக்கொண்டிருக்கிற
பூஞ்சாரல் என
நிரம்பியிருந்த
தலைக்காவிரியின் மடியில் இறங்கினார்கள்.
அங்கு வந்திருந்த
பெண்கள் ஒவ்வொருவரும்
குளிர், சாரல் மற்றும் அவ்விடத்தின்
பசுமையென ஒவ்வொன்றையும் உள்வாங்கி உணர்ந்து பரவசமடைந்தனர். உடலின்மேல்
வந்து தவழுகிற
மஞ்சு மேகத்தில்
சிலிர்த்த ஒரு
பெண், “அச்சச்சோ,
நான் பெரிய
தப்புப் பண்ணிட்டேன், இங்க என்
அத்தானோடு
வந்திருக்கணும்." என சத்தமாகக் கூறினார். அவர்
அப்படி வாய்விட்டு
சொன்னவுடன் மற்ற
பெண்களும்
தங்கள் கணவர்களைப்
பற்றி பேசத் தொடங்கினர்.
ஒருவர் , "அடடா, நான்
மட்டும் என்
வீட்டுக்காரரோடு வந்திருந்தால்,
இந்நேரம் அவர்
கைகளுக்குள் என்னுடைய
கையைக் கோர்த்து
கொண்டு மலை
முழுக்கச் சுற்றி
வந்திருப்பேன்" என்று
கூற, அடுத்தவர்,
திருமணம் ஆனவுடன்
கணவரைப் பிரிந்து,
தன்னுடைய முனைவர்
பட்ட ஆய்வுக்காகப்
படிக்கச் சென்று
விட்டதாகவும், கணவரும்
வெளிநாட்டில் பணிபுரியச்
சென்று விட்டதாகவும்,
ஏழு ஆண்டுகள்
கழித்து இப்போதுதான்
இருவரும் ஒன்றாக
வாழ வாய்ப்புக்
கிடைத்திருப்பதாகவும், தற்சமயம்
ஏற்பட்டுள்ள சிறிய
பிரிவைக்கூட தாங்க
முடியவில்லை என்று
கூறினார். பயணத்தின்போது ஆட்டம்,
பாட்டு, கொண்டாட்டம்
என்றிருந்தவர்கள், அதன்
பின்பு அவரவர்களுக்கான
அந்தரங்க நினைவுகளுக்குள்
பயணிக்கத் தொடங்கியிருந்தனர்
.
இவ்விதமாக இப்போது இவர்களது
நினைவுகளை
ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்
கணவன்மார்களுடன் ஒன்றாக
பயணிக்கும் பல்வேறு
தருணங்கள் இனிமையானதாக
மட்டுமே இருந்திருக்கவும்
வாய்ப்பில்லை. ஒருவரோடு
ஒருவர் முகம்திருப்பிக்கொண்டதும்,
சண்டையிட்டுக் கொண்டதுமான
முன்நிகழ்வுகளும் இருந்திருக்கலாம்.
கணவனும் மனைவியும் மட்டுமே
செல்கிற சுற்றுலாக்கள்
ஒரு குறிப்பிட்ட
வயதிற்குப்பிறகு மிகக்குறைவு.
நடுத்தர வயதிலோ, முதிர்காலத்திலோ
அமைகிற பயணங்கள்
குழந்தைகள், உறவினர்களால்
சூழப்பட்டிருக்கும். அப்போதும்கூட
ஒருவரிடம் மற்றவர்
முகம் திருப்பிக்கொள்வதாகவும்,
சற்றுநேரத்தில் சமாதானம்
செய்துகொள்வதாகவும் அவை அமைந்திருக்கும்.
அந்தப் பயணத்தில்,
யாருமறியாத
மிகச்சிறிய உரசலில்
ஒருவரின் உடலிருக்கும்
வெதுவெதுப்பை மற்றவருக்கு
இடம்மாற்றியிருப்பர். கணவனும்
மனைவியும் இணையாகப்
பயணிக்கையில் அவர்களை
வந்தடைகிற பறவைகளின்
குரலில், குரங்குகளின்
தொந்தரவில், பூக்களின்
வாசனையில் தங்களைக்
கரைத்துக் கொள்வார்கள்.
நாடோடியாகத் திரிகிற
துணையற்ற மனிதர்களைக்
கண்டு ஆச்சர்யப்படுவார்கள்.
இளம்காதலர்களுக்குள் தங்களை
அடையாளம் காணுகையில்
இரகசியமாக தங்களது
பார்வையைப் பரிமாறிக் கொள்வார்கள்.
வயோதிகம் அடைந்த
பின்பும் இணையாக
கைப்பற்றி நடக்கிற
தம்பதியர் எவரையேனும்
பார்த்தால் தங்களுடைய
முதுமைக்காலம் இவ்விதமாக
இருக்கவேண்டுமெனச் சொல்வார்கள்.
பல்வேறு இனத்தவரும், பல
வயதினரும் வந்து
செல்கிற சுற்றுலாத்
தளமென்பது நடுவயதில்
இருக்கும் கணவன்,
மனைவிக்கிடையே இளமைக்கும்
முதுமைக்கும் பின்னலிட்டு
அவ்விருவருக்குமிடையே
அந்நியோன்யத்தைக் கொண்டுவந்து
சேர்த்திருக்கும்.
திருமணம் ஆனபின்பு
கணவனைப் பிரிந்து
அம்மா வீட்டிற்குச்
செல்வதற்குக் கூட
பல சமயங்களில் பெண்கள்
பிரியப்படுவதில்லை. நம்முடைய
வழக்கத்தில் பெண்கள் தனித்துச்
செல்கிற சுற்றுலாப்பயணங்கள்
அரிது. அனேகமாக இல்லையென்றே
சொல்லிவிடலாம். தற்காலத்தில் பெண்களின்
பணி சார்ந்த
பயற்சிகளுக்குச் செல்ல
வேண்டிய அவசியமிருப்பதால் மட்டுமே
இதுபோன்ற பயணங்கள்
சாத்தியமாகின்றன. தங்களுடைய
அம்மா, அப்பாவையோ
அல்லது குழந்தைகளையோ
அழைத்து வரவில்லையென
அங்கு வந்திருந்த
பெண்களில் யாரும்
வருந்தவில்லை. கணவனோடு வாராதது பற்றியே பேசிக்
கொண்டிருந்தார்கள்.
நிலமும் காலமும்
சூழலும் எப்பொழுதுமே
மனதிற்குள் மாயம்
நிகழ்த்தியபடியே இருக்கும்.
வீட்டிலிருக்கும் பொழுது
தினந்தோறும் பார்க்கிற
கணவன்தான், அவன்மீது
ஓயாத குறைபடுதல்
மனைவிக்கு எப்போதும்
உண்டு. என்றபோதிலும்
இயற்கையின் செழுமை
கலையாதிருக்கும் நிலவெளிக்குத்
தனித்துப் பயணிக்கும் பெண்கள் தங்கள்
மனதையும் உடலையும்
கணவன் வழியாகவே உணர்ந்து
கொண்டிருப்பார்கள் என்பதை கவிஞர் அனாரின்
கவிதையொன்று பேசுகிறது.
"காலைப்பனியில்
ஈரமணலில்
வெள்ளை மல்லிகைகள்
சொரிந்து கிடக்கின்றன
ஆயத்தி மலையின்
விற்பதற்காகக்
கூவிச் செல்கிறாள்
நெற்றியில் விபூதியும்
வாயில் வெற்றிலையும்
இட்ட கிராமப்பெண்
தேனும் மாட்டுச்சாணமுமாய்
கிறவல் ஒழுங்கையின்
மொச்சை வீச்சம்
மரச்சுள்ளி மிலாறுகளை
தூக்கக்கலக்கத்துடன்
பொறுக்கிக் கட்டுகிறாள்
வயிறுபிதுங்கிய பரட்டைத்
தலைச்சிறுமி
ஓட்டைவிழுந்த கறுப்புக்குடையை
ஒரு கை
விரித்தவண்ணம்
ஆசாக் மறு
கை ஊன்றியபடி
மிடுக்காகப் பார்த்து
நிற்கிறார்
கண்ணாடி போட்ட
வயோதிபர்
ஆட்டுப்பட்டியை இடையன்
பக்குவமாக
மேய்த்துச் செல்கிறான்
அவை ஒரே
நேரத்தில் 'மே'
என்று கத்துகின்றன
'காவுத்
தடியைத்' தூக்கி
முதுகு வளைய
நடந்து
மீன்களின் பெயரைக்
கூவுகிறான் மீன்
வியாபாரி
ஓலைகளால் வேய்ந்த
களிமண் குடில்களின்
முன்
முக்காடு போட்ட
பெண்கள்
காற்றுக்குள்ளிருந்து எதையோ
அள்ளுவதும்
விரல்களுக்கு வெளியே
ஊற்றுவதுமான லாவகங்களோடு
நிறச்சாயமூட்டிய பாய்கள்
பின்னுகிறார்கள்
ஒருவன் சிறிய
மீன்வலையைப் புல்வெளியில்
உலர்த்த
நாலைந்து வெட்டுக்கிளிகள்
சிக்கிக்கொள்கின்றன
பிடிபட்டு வளையில்
திமிரும் உடும்பை
கம்பினில் கட்டி
.. தீயிலிட்டு ....
அதன் வெந்த
இறைச்சியை மலைத்
தேனில் தொட்டு
கணவன்மார்களுக்குப் பரிமாறுகிறாள்
குறத்தி
தும்பிச்சிறகடிக்கும் கண்கள்
விரித்து
இரவுச்சுரங்கத்தின் கறுப்புத்
தங்கமென எழும்
தலைவியை மரியாதை
செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு
இருப்பவளைப்
புணர்ச்சிக்கு அழைத்தவன்
கூறுகின்றான்
'போர்
தேவதையின் கண்களாக
உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலையையே
அச்சுறுத்துகின்றாய்'
அவளது குரல்..
மலைகளில் சிதறி
ஒலிக்கின்றது
'பெண்
உடல் பூண்ட
முழு இயற்கை
நான்'
காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச்
செய்பவன்
இன்றென்னைத் தீண்டலாம்."
வானம் திறந்து
பொழிகிற மழையிலும்,
நிலம்
திரண்டு உயர்ந்திருக்கும்
மலைகளிலும், ஒளிபுகத்
தவித்துத் தோற்கும்
காடுகளிலும், துளிர்த்துப்
பொங்கிப் பெருகிச்
சரிகிற அருவிகளிலும்,
விரிந்து பரவுகிற
நதிகளிலும், ஈரம்
கசிய பூத்திருக்கும்
நிலத்திலும், பரந்து
விரிந்திருக்கிற கடலிலும்,
எழும்பித் திமிறுகிற
அலைகளிலும், உப்புப்படிந்திருக்கும்
காற்றிலும், காட்டில்
உறைந்திருக்கும் சிறுநெருப்பிலும்
பெண் தன்னை
உணர்வதென்பது எல்லோருக்கும்
நிகழ்வது அல்ல.
கடலின் நீலமும்,
வானின் நீலமும்
அவளுக்குள் நீலப்பூ
ஒன்றின் எண்ணிலி
இதழ்களை விரித்து
வாசம் நிகழ்த்தும்.
பஞ்சபூதங்களாகத் தன்னை
உணர்ந்து கொள்கிறவளே 'பெண்
உடல் பூண்ட
முழு இயற்கை
நான்' என்று சொல்வார்.
இவ்விதமாக ஒருத்தி பூத்திருப்பதை உணர்கிறவனாலேயே
அவளைத் தீண்டவும்
முடியும்.
ஒரு பெண்ணின்
மனதை சுலபமாக கைக்கொள்வதென்பது எல்லா ஆண்களாலும்
இயலாது. கணவனே
என்றாலும்கூட எல்லாப்
பொழுதிலும் அவளை நெகிழச் செய்ய
முடியாது. தான்
மலரும் தருணத்தை
அவளே தேர்கிறாள்.
காதலில் பூத்து, அவனுக்கென காத்திருக்கையில் அவனுடைய அண்மை
நிகழாதபோது நோய்மை
அடைகிறாள். அந்தப்
பிணியை அவன் வந்தால்
மட்டுமே தீர்க்க
முடியும்.
கி.மு.
ஏழாம் நூற்றாண்டைச்
சேர்ந்த கிரேக்கப்
பெண்கவிஞர் சாப்போ,
'வட்டார மொழியில்தன்னுணர்ச்சிப்பாடல்களைப்
பாடிய பெண்
கவிஞராக ஹோமருக்கு
இணையாகக் கொண்டாடப்
பட்டவர்.
"கப்பல்களும்,
போர்க்குதிரைகளும், போர்
வீரர்களும் கவர்ச்சியுடையன
என சிலர்
கூறுவார்கள்; ஆனால்
எனக்கோ எல்லாமே
காதல் தான்"
என்று சொல்லும்
சாப்போவின் புகழ்பெற்ற
வரிகள், "காற்றால்
அமைந்த சொற்களைக்
கொண்டு நான்
தொடங்குகிறேன். ஆனால்
அவை செவிக்கு
இனியன"
காதல் என்பது
மூர்க்கமும், பால்வேறுபாடு
அற்றதும் என்பதற்கு
இலக்கியத்தில் முதல்
சொல் எடுத்தவள்
சாப்போ. தன்னுடைய
இடரிலும் தளர்விலும்
அவள் நாடுகிற
காதல் தேவதை
'அப்ரோதிதே'. சாப்போவின்
காதல் மறுதலிக்கப்பட்ட
ஒரு பொழுதில்
,'அப்ரோதிதேவிற்கு( To Aprodite)'என்கிற
கவிதையை அவள் எழுதியிருக்கிறாள்.
"வண்ணங்கள்
பலவும் மிளிரும்
பீடத்தில் எழுந்தருளிய
தேவியே,
“அப்ரோதிதே,ஜூஸின்
குழந்தையே,
குறும்புக்காரியே,
உன்னிடம் நான்
வேண்டுவது இதுதான்,
தலைவியே,
என் உள்ளத்தைக்
கொடுந்துயரினாலும் சித்திரவதையாலும்
உடைத்துவிடாதே."
தன்னுடைய வேண்டுதலை
வெளியிட்டுத் தொடங்கும்
நீண்ட கவிதையின் ஒரு
பகுதி இது.
இதற்கு முன்பாக
எவ்வாறெல்லாம் இவளுடைய
வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன
என காதல்
தேவதையைப் புகழ்ந்து,
நன்றி தெரிவித்து,
தற்சமயம் தனக்கு
ஏற்பட்டுள்ள நலிவை
நீக்கும்படி சாப்போ
வேண்டுகிறாள்.
இறைவனை நோக்கிய
சடங்குகள் மனதின்
ஆழத்திற்குள் மாயாவித்தை
நிகழ்த்துகிறது . கடவுள்
எழுந்து வருவதாகவும்,
தன்னுடைய குரலைக்
கேட்பதாகவும், தன்னுடன்
பேசுவதாகவும் நம்புகிற
அகத்தெழுச்சி நிலையை
பிராத்தனைகள் அடையச்
செய்கின்றன. மாயத்தை
நிகழ்த்துகிற இறைச்சடங்குகள்கூட காதல்
மிகுந்திருக்கும் பெண்ணை
ஆற்றுபடுத்த முடியாமல்
தோல்வியடைகின்றன.
சங்க இலக்கியத்திற்கும்
கிரேக்க இலக்கியத்திற்கும்
நிறைய ஒற்றுமை இருக்கிறது.
நீரோடைகள், ஊற்றுக்கள்,
மரங்கள், பூக்கள்
போன்றவற்றின் மூலம்
மனதின் நுட்பத்தைக்
காட்சிப்படுத்த நம்மைப்
போலவே கிரேக்கர்களுக்கும்
இயன்றிருக்கிறது. மதம் சார்ந்த
கோட்பாடுகள் தீவிரமடையாதிருந்த
காலம் அது.
அக்கால கட்டத்தில்,
கடவுளானவர்கள் காதலர்களை
இணைத்து வைப்பவர்களாகவும்,
இயற்கையின் அங்கமாகவும்
இருந்திருக்கிறார்கள். கடவுளிடத்தே
நம்பிக்கை கொண்டு
நடத்தப்படுகிற
வழிபாட்டு முறைகளால் காதலால் ஏற்படுகிற துயரத்தை ஆற்றுபடுத்த
கிரேக்க இலக்கியமும்
தமிழும் முயலுகின்றன.
“காராட் டுதிரம்துாய்உய் அன்னை களன்இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ!”
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ!”
என்பது முத்தொள்ளாயிரத்தின் வரிகள்.
ஆடுவெட்டி பலி செய்து மகளுக்காக வேண்டுதல் வைப்பதென்பது
சங்ககாலத்தின் முக்கியமான செயலாகும். சங்கப் பாடல்களில்
"வெறியாட்டு" என்றொரு
துறையே இதற்காக அமைந்திருக்கிறது.
தான் விரும்புகிறவரின்
நெஞ்சத்தில் காதலைத்
தூண்ட 'அப்ரோதிதே'வை
வேண்டுவது போல
'வெறியாட்டு' நிகழ்த்தி
தன் மகளின்
நெஞ்சத்தில் பதிந்திருக்கும்
காதலை வெளியே
கொண்டுவர அம்மா
முயலுகிறாள். அம்மாவும்
அந்தப் பருவம்
கடந்து வந்தவள்தான்.
மகளின் உடல்
மாறுபாட்டிற்கும், உள்ளத்தின்
நலிவிற்கும்
எது காரணமாக
இருக்கக்கூடும் என்பதை
உணர்ந்தே இருப்பாள்.
ஆனாலும் அம்மா
அறியாமையில் இருக்கிறவளாகவே
மகள்களால் உணரப்படுகிறாள். இச்சூழலைச் சொல்கிற கவிஞர்
பாலைவன லாந்தரின் சிறிய கவிதையொன்று உள்ளது.
“மகளே..
உனக்கென சொல்வதற்கு
நிறைய இருக்கிறது
சொல்லாமலே
புரிந்து கொள்வாய்
என்ற நம்பிக்கை
தீரும் அந்நாளிற்காக.”
உனக்கென சொல்வதற்கு
நிறைய இருக்கிறது
சொல்லாமலே
புரிந்து கொள்வாய்
என்ற நம்பிக்கை
தீரும் அந்நாளிற்காக.”
தான் கடந்துவந்த
பாதையை மகளும் கடந்துகொண்டிருக்கிறாள் என தாய் உணர்ந்திருக்கிறாள். ஆனால் வாழ்வை
தானே புரிந்துகொள்ளட்டுமென நினைத்து மகளிடம் பகிர்ந்து கொள்ளமாட்டாள். மகள்களுக்கு
தாயைப் பற்றிய புரிதல் எப்பொழுதுமே அவர்கள் அம்மாவாக ஆகும்பொழுதே ஏற்படும். இதனால்
அம்மா என்றால்
அறியாமை என்றும்
அடுத்த தலைமுறைக்
குழந்தைகள் நினைத்துக்
கொள்கிறார்கள். 'உனக்கெல்லாம்
புரியாதும்மா', 'கொஞ்சம்
நீ அமைதியா
இருக்கியாம்மா', 'உனக்கு
ஏம்மா இதெல்லாம்',
'நாங்க வேற
ஜெனரேசன்' போன்ற
சொற்களின் மூலமாக அம்மாக்களைக்
கடந்து செல்கிற
இள மகள்கள் எப்போதுமே
இருக்கிறார்கள். இவற்றை
எல்லாம் எளிதாக
எடுத்துக்கொண்டு, மறுபடியும்
மகளின் நலனுக்கான
பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களையும்
அம்மாக்கள் செய்து
கொண்டிருப்பார்கள்.
அம்மாவின் இம்மாதிரியான
வேண்டுதல்களை நகுதலோடு
கடந்து செல்கிற
மகள் பற்றி
வெறிபாடிய காமக்கணியாரின்
அகநானூற்றுப் பாடல்,
“அணங்குடை நெடுவரை
உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக்
கான்கெழு நாடன்
இது என
அறியா மறுவரற்
பொழுதில்,
'படியோர்த்
தேய்த்த பல்
புகழ்த் தடக்கை
நெடுவேட பேணத்
தணிகுவாள் இவள்'என,
முதுவாய்ப் பெண்டிர்
அதுவாய் கூற,
களம் நன்கு
இழைத்து, கண்ணி
சூட்டி,
வளநகர் சிலம்பப்பாடி,
பலிகொடுத்து,
உருவச் செந்தினைக்
குருதியோடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த
உருக்கெழு நடுநாள்,
ஆரம் நாற,
அருவிடர்த் ததைந்த
சாரற் பல்
பூ வண்டு
படச் சூடி,
களிற்று இரை
தெரீஇய பார்வல்
ஒதுக்கின்
ஒளித்து இயங்கும்
மரபின் வயப்
புலி போல,
நல் மனை
நெடுநகர்க் காவலர்
அறியாமைத்
தன்நசை உள்ளத்து
நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய
முயங்குதொறும் மெய்ம்
மலிந்து,
நக்கனென் அல்லெனோ
யானே எய்த்த
நோய்தணி காதலர்
வர, ஈண்டு
ஏதில் வேலற்கு
உலந்தமை கண்டே
?"
தோழியிடம் தலைவி
சொல்வதாக அமைந்துள்ள பாடல்
இது. விரைவில்
வந்து திருமணம்
செய்து கொள்வதாகச்
சொல்லி, களவில்
கலந்திருந்த தலைவன்
பிரிந்து சென்றிருக்கிறான்.
எனவே அவனைத்
தழுவி மகிழ்ந்திருந்த
தலைவி தனித்திருக்கிறாள்.
களவு உறவின் காரணமாக உடல்
வேறுபட்டு பசலையடைகிறது. மகளின்
நிலையினைக் கண்ட
தாய் வருத்தமடைந்து,
சூரபதுமனை வென்ற
முருகனை வணங்கினால்
மகளின் துன்பம்
தீருமென நினைக்கிறாள்.
வெறியாட்டு நிகழ்த்துகிற
முதுபெண்டிரிடம் கூறுகிறாள்.
நிகழ்வுக்கான களம்
அமைக்கப்பட்டது. வேலினை
ஊன்றினர். கடம்ப
மாலையைச் சூடினர். வேலனின்
புகழ் பாடினர்.
பலிக்கொடையும் வழங்கினர்.
பலிக்குருதியை செந்தினையில்
கலந்து தூவினர்.
முருகன் வெறியாட்டு
நிகழ்ந்து முடிகிறது.
நிகழ்வின் முடிவில்
தலைவி சொல்கிறாள்,
'யானையை வேட்டையாடத்
திட்டமிடும் புலி
பதுங்கிச் செல்வது
போல இரவுப்
பொழுதின் காவலர்கள்
அறியாதவாறு நம்முடைய
வீட்டிற்கு பதுங்கி
வந்த தலைவன்
என்னைத் தழுவிகொண்டான்.
அவனை விரும்புகிற
என்னுடைய விருப்பம்
நிறைவுற என்
இன்னுயிர் குழைய
என்னைத் தழுவி
முயங்கியவன் அவன்.
அவனை நினைத்து
நோயுற்றிருக்கும் என்னுடைய
நிலையை உணராத
அம்மா, முருகனுக்கு
வெறியாட்டு எடுத்த
அவளின் அறியாமையை
எண்ணி நகைக்கிறேன்"
என்று கூறுகிறாள்
.
“அறியப்படாத சுவை”
என்கிற தலைப்பிலுள்ள என்னுடைய
கவிதை ஒன்று, தாய்க்கும்
பருவத்தின் மலர்ச்சியிலுள்ள மகளுக்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசுகிறது.
"அம்மாவிற்கு
நன்றாக சமைக்கத்
தெரியும்
பரிமாறவும் தெரியும்
அம்மாவிற்கு அன்புகாட்டத்
தெரியும்
அவளுக்கு தெரியாததெல்லாம்
வெறுப்பு
அவள் சமைத்துப்
போட்டுக் கொண்டேயிருப்பாள்
அவள் விரல்களில்
எதைத்தான் வைத்திருப்பாள்
எவருக்கும் தெரியாது
ரசம் வைப்பாள்
வித விதமாய்
சாம்பார் வாசனையால்
தெரு மணக்கும்
உணவு வகைகளை
சலிக்காமல் செய்வாள்
உப்புப் போட
அவள் மறந்ததேயில்லை
ஒருவேளை
அது சற்று
கூடியிருந்தாலும் ருசியாகத்தானிருக்கும்
இந்த அம்மாவுக்குத்
தெரியாததெல்லாம் ஒன்றுதான்
அம்மாவின் சமையல்
சுவையாய்
அவனைப் பிடித்திருந்தது
அவனைப் பிடிக்கும்
என்பது நான்
அறியாத சுவை
என்பது அம்மா
அறியாதது
அவள் அறிந்ததும்
நான் அறியாததுதான்."
மகளுடைய அறியாமையை முழுமையாக அறிந்திருப்பவள் அம்மாதான். மகள்
தனது நோய்மைக்கான காரணத்தை வெளிபடுத்த இயலாமல் தவிக்கும்போது,
அதை உணர்ந்தவளாக தான் அறிந்த வழிகளில் அம்மா ஆற்றுப்படுத்த
முயலுகிறாள். அம்மா அறிந்த ரகசியத்தை மகள் உணர்ந்து கொள்ளும் தருணம் வரும்போது,
அம்மாவை அவள் வெளியே தேடுவதில்லை. தானே அம்மாவாகிவிடுகிறாள்.”
அகநானூறு: 22,98, நற்றிணை : 268, புறநானூறு: 271 = மொத்தம் 5.
Subscribe to:
Posts (Atom)