Friday 25 October 2013

திசை வழிப் பரவும் நிர்வாணம் :



அதனினும்
குறுகிய வாழ்வில்
மிகக் குறுகிய கால சிநேகிதங்களில்
 

இயலும் வழியிலெல்லாம் அன்பை இறைஞ்சுகிறோம்
இயலும் போதெல்லாம் அன்பை வெளிப்படுத்துகிறோம்
இயலும் யாவரிடமும் அன்பில் இணங்குகிறோம்
உச்சத்தில் விகாரமாக காயப்படுத்துகிறோம்

மூச்சடக்கி சுமக்கும்
கல்வாரியின் செந்நிற பாடுகள்
இழைத்து மெருகேற்றப் படாத சிலுவையின்
திசைவழி பரவும்
அன்பின் நிர்வாணம்

அங்கிருந்து
மரணத்தை எதிர்நோக்க
குறுவாள்
விஷம் தோய்ந்த அம்பு
எதுவும் வேண்டாம்
ஒரு முத்தம் போதும்
அல்லது
ஒரு சொல்
*
Courtesy : Painting -Stella Stella Im Hultberg

Wednesday 23 October 2013

மாயமொழி . . .



ஆயிரம் ஆயிரம் சொற்களை வாசித்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரம் சொற்களை எழுத ஆசை

ஆயிரம் ஆயிரம் துரோகங்களைச் சந்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரம் துரோகங்களைச் செய்ய ஆசை

ஆயிரம் ஆயிரம் பொறாமைகளைப் பார்த்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரமாய் பொறாமைப்பட ஆசை

ஆயிரம் ஆயிரம் மரணங்களைப் பார்த்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரமாய் சாக ஆசை

ஆயிரம் ஆயிரம் நல்லவர்களைப் பார்த்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரம் நல்லவளாய் மாற ஆசை

ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் பெற்றவர்களைப் பார்க்கவேயில்லை
ஆயிரம் ஆயிரமாய் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை
அந்தக் குழந்தைகள்
அன்பின் மொழியால்
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் எழுதுவார்கள்.

அடிவானத்தில் கசியும் அன்பு :


அருகில்
மிக அருகில்
சுவாசத்தினும் நெருக்கமாக
மூச்சுக் காற்றின் கதகதப்பு

ஒத்திசைவில்
கிளர்ந்தெழும் நெருப்பு
கண்களில்
வானத்தின் தாரகைகள் ஒளிர்கின்றன

மகுடியசைவில் இயைந்திருக்கும்
நாகமென மயங்கியிருக்க
மிளிரும் பனித்துளி
வனப்பு மிகு அதிகாலையின் வரவை
முன்னறிவித்தது

மிதந்து செல்லும் மேகங்கள்
பச்சை மலைத் தொடரில்
நீலமாய் குவிய

அடி வானத்திற்கு அப்பால் கசியும் அன்பில்
பள்ளத்தாக்கில் பூக்கும் பூக்கள்
தன் ஒளியை வாரியிறைக்கும்
*
Courtesy : Paintings - Andrei Belichenko

நிலைத்திருத்தல் . . .



பெண்களின் இயக்கம் எப்போதுமே ஆண்கள் சார்ந்தது
தன்னை இயக்கியாக ஒப்புக்கொடுத்து விடுகிறாள்

அடுக்களையில் நுழையும் மந்திரம் அறிந்து கொள்கிறாள்
வெளியே வரத் தெரியாது
தன்னுள்ளே ஏந்திய பிள்ளையைப்
பெற்று வளர்க்கத் தெரிந்து கொள்கிறாள்
விட்டு விலகத் தெரியாது

தன்னை அலங்கரிக்கத் தெரிந்து கொள்கிறாள்
தனக்கெனத் தெரியாது
உடுத்தி நிற்கத் தேர்ந்து கொள்கிறாள்
கலையத் தெரியாது
நிலம் சாயத் தெரியும்
எழுந்து நிற்க அவளுக்கு வாய்க்கவே வாய்க்காது

ஒரு பெண் தன்னை முழுமை செய்தல் எதுவெனில்
தனக்கென இயங்குதலும்
தான் மறந்து அசையாது நிலைப்பதுவும்

உண்மையில்
இயங்குதலின் உச்சம் நிலைத்திருத்தலே .

நன்றி - காலச்சுவடு




காலச்சுவடு -அக்டோபர் இதழில் என்னுடைய கவிதைகள் வெளியாயுள்ளன .

நன்றி - காலச்சுவடு Kalachuvadu Pathippagam நன்றி- ஓவியம் Rohini Mani

இணை :



சிவந்த விரல் கொண்டு பாதி முகம் மூடுகிறேன்
நாணிக் கண் புதைக்கிறேன்
நிமிர்ந்த முலையினுக்கு செங்குழம்பிட்டு நிற்கிறேன்
அவன் வரும் வேளையில்

அதிகாலைத் துயில் எழுகிறான்
அடர்ந்த கானகம் செல்ல ஆயத்தம் ஆகிறான்

விடைபெறுகிறான் வேட்டைக்கென

ஒருகண் என்மீதும்
இன்னொருகண் புரவியின் மீதும்

காதலைத் தவிர்த்து
காதலுக்காக என்னை விட்டு அகலுகிறான்

அவன் வரும் வரையில்
நான் பூச்சூடவில்லை
நீராடவும் இல்லை
உணவும் மறந்து நிற்கிறேன்
காலை மாலை நள்ளிரவெனக்
காத்து நிற்கிறேன்
சொல்லிச் சென்ற நாளுக்காக

திரும்புகிறான்

நான் வெண்ணிற உடை உடுத்தி வரவேற்கிறேன்
அவனைப் பொறுத்துக் கொள்கிறேன்
முன்பொருநாள்
நான் சிவப்புநிற உடையில் இருந்தபோது

என்னைவிட்டு அகன்றதையும் சேர்த்தே .

மலர்தல்:



அதிகாலையில்
சூரியன் பட்ட முதல் பூ
எதுவாக இருக்கும்

வெயில் பொதுவான ஒன்றுதான்
என நினைத்திருந்தேன்

இளஞ்சூடு பாவும் காலை
சுட்டெரிக்கும் உச்சி
மாலை வெம்மை இதமென
மாறிக் கொண்டேயிருக்கும் வெயிலை
முத்தமிட வரவேற்கிறேன்

மின்மினிப்பூச்சிகளை சூடி
இரவு
ஒரு பறவையென பறக்கக் காத்திருக்கிறது
எனக்குத் தெரியாமல்

சூரியகாந்திகள் தோட்டத்திலிருந்து
நூறு பறவைகளாய்
வானத்தில் பறக்கத் துவங்க
இரவில் மலரும் பூக்கள்
இதழ் விரிக்கத் துவங்குகின்றன

பகலும் இல்லாத
இரவும் இல்லாத
காலத்தில் மலரும்
முதல் பூவென மலர்கின்றன
அவள் நிலத்தில் அது.

கண்களுக்குள் ஒளிரும் வானம்:





கண்கள் மூடிக் கிடக்கிறாள்
 

உடல் முழுதும் கண்கள் விழித்து
இமைகளின் விளிம்பு
நீர்க்கோர்த்து
கசியத் துவங்கி
நீண்ட நேரமாகி விட்டது

திறப்புகளை அறிந்தவரே
நீர்க்கால்களின் தடம் அறிந்து
அருந்த வல்லவர்

தனிமையில் உச்சம் அடைந்திருக்கிற இந்த சுருதி
ஒரு சிறு மௌனம்
ஒரு பெரும் காலத்தின் துவக்கம்

இவ்வாறு இருக்கையில்
குழந்தைமையை
மீட்டெடுக்கிறது அழைப்பு

இப்பொழுது
அவளின்
மூடிய இமைகளுக்குள் ஒளிர்கிறது நீலவானம்.

Courtesy : Painting -Anuraag Fulay

வேறு ஒரு உண்மைக்கு நகரும் மழை :




வானிலை அறிக்கை சொல்வது பொதுவாகப் பொய்க்காது
இன்று மழை வரும் என்று எதிர்பார்த்தேன்

மழை பொழிந்தது
வேறு நிலத்தில்

அதிகாலையின் வானிலை சற்று மாறிப் போய் விட்டதாக
பின்னால் அறிந்தேன்

உண்மையில் இருந்து வேறு ஒரு உண்மைக்கு நகர்வது
அத்தனை எளிதல்ல
மேலும் ஒரு தனித்து நீளும் இரவு

கனவுகள் விதைக்கும் நிலம் :




பெயர் அற்றுப் போனவள் நான்

நிலமென என்னைச்  சொல்கிறேன்
என் நிலத்தில் புல் பூண்டுகள் முளைக்கின்றன
செடி கொடிகள் தழைக்கின்றன
மரங்கள் வளர்ந்து வான் தொடுகின்றன

அவற்றுக்காக
நான் செய்வது ஒன்றுமே இல்லை
காய்த்து
வெடிப்புற்றுக் கசிந்த விதைகளை
என்னுள் ஏந்திக் கொள்கிறேன்
என்பதைத் தவிரவும்
என் சொற்கள் நிலமாய் அமைதி காக்கின்றன
பொறுத்திருக்கின்றன 


ஆழ் பிளவில்
புதையுண்ட விதைகளும்
காயங்களும்
குருதியில் நனைந்தூறி உப்பலாகின்றன
பின்பு
முளைவிடுகிற 
தளிர் பசுமையில் புதைவுறுகின்றன
வடுக்கள்

பின்னும்
வான் தாண்டும் கனவுகளைக்
கிளை பரப்புகிறேன் .




மனதில் வளரும் தாவரம் :



பசுமை மினுங்குகிற சந்தன மரக்கன்று
இன்று அதிகாலை
கண்ணில் பட்ட முதல் தாவரம்
அருகே சற்று ஆழ்ந்த கரும்சிவப்பு செஞ்சந்தனம்
இலையசைந்து தன் இருப்பைக் காட்டியது

பாதுகாப்பாக நடுவதற்கு நிலமின்றி
இரண்டு ஆண்டுகளாக
தொட்டியில் வளர்ந்து கொண்டிருக்கின்ற
இரண்டு தாவரங்களையும்
இந்த மழைக்காலத்திலேனும்
உரிய நிலத்தில் சேர்த்து விட நினைக்கிறேன்

தன் போக்கில் வளரும் தாவரங்களை
பத்திரப்படுத்த நினைத்து
மனதில் வளர்த்தபடி இருக்கிறேன் .

பறவைகளுக்காக விதைப்பவன் :




அவன் தானியங்களை உற்பத்தி செய்பவன்
சேகரிப்பவன்
விதைக்கவும் அறுவடை செய்யவும்
நிலத்தைத் தேர்ந்திருந்தான்

தானியங்களை பலநூறு மடங்காகாய் பெருகப் பண்ண
அந்த நிலத்தோடு உடன்படிக்கை செய்துகொண்டான்
மழையென பொழியுமவன்
வருவோர் போவோருக்கெல்லாம்
முதிர்தானியத்தின் உணவையே பரிமாறினான்
மேலும்
அவன் விதைப்பது
பெயர் தெரியாத சின்னஞ்சிறு பறவைகளுக்காகவும் தான் .