Wednesday 28 August 2013

அறிதல் . . .



மஞ்சள் ஒளி படர்ந்த
என்
நிலத்தில்

விதைத்த உனதன்பு
வேர்களால்
என்னைச் சுற்றுகிறது

என்
ப்ரியங்களில் இருந்து
துளிர்க்கும் உன் கிளைகளில்
அடையும் பறவைகள்

சுதந்திரத்தின்
இசையை இசைக்கும் போது
அறிவதில்லை

தியாகத்தின் மொழியை .

மழைக்கால கோலம் . . .


ஒரு அதிகாலைப்பொழுதில்
பெண்கள் கோலமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
அது
அடர்மழைபொழியும் காலமாகவும் இருந்தது

முன்பொரு அதிகாலை
அவள்
அப்போதுதான் கோலமிட்டு திரும்பியிருக்க
மழைபொழிந்து கலைத்துக் கொண்டிருந்தது

இருள் விலகியிராத அந்தப் பொழுதில்
வேலையாய்ச் சென்றவன்
இன்னமும்
திரும்பியிருக்கவில்லை

வரைந்த கோலங்களைக் கலைப்பதும்
கலைந்து கிடக்கும் புள்ளிகளை இணைப்பதுமான
விளையாட்டில்

அவனுடனிருந்த அதிகாலை
ரகசியங்கள்
அவள் மனத்திலிருந்து வெளியேறி
வண்ணப்பொடியில் சேகரமாகிறது

பெரும்மழை கலைத்திடாத
வண்ணங்களை
சுமந்து கொண்டிருக்கிறது கோலம்.
Courtesy: Luana Sacchetti

Sunday 25 August 2013

செடியில் பூத்திருக்கும் கண்ணன் . . .



பருத்தி வெண்மையாய்
வெடிக்கும்
அது
இளமையாய் இருக்கும் பொழுது
சுவைத்து சுவைத்து உண்பார்கள்
அதைத் தாண்டி வெண்மையாய் வெடிக்கும்

அந்தப் பருத்தி
திரௌபதிக்கு எவ்வாறு சேலையாக மாறியது

கண்ணன் எங்கு செல்வான்
அவளுக்கு ஆடைகளைச் கொடுக்க

மேகம் போல் தொங்கிய பருத்தி
எவ்வாறு நூலாக மாறியது என்பதையும்
அது எவ்வாறு ஆடையாக மாறியது என்பதையும்
மேலும்
அது எவ்வாறு திரௌபதியின் மானத்தைக்
காப்பாற்றியது என்பதையும்
கண்ணனே அறிவான்

மேலும்
கண்ணனைத் தேடிக் கொண்டிருப்பது
அவள் ஒருத்தி மட்டும் அல்ல என்பதையும்.
Courtesy : Painting -Luana Sacchetti

காலம் பறித்த கசப்புச் சுவை . . .



விரிந்து கிடக்கும் கரிசல் நிலத்தில்
தனித்து நின்றிருக்கும்
அந்தப் பெண்ணைப் பார்த்தேன்

வெயிலின் அக்கினியை ருசித்துக் குடிப்பவள் அவள்
உலர்ந்த கசப்பை பசுமையாக கொண்டிருப்பவள்
கோடி நட்சத்திரங்களை தன் தலையில் சூடி
நின்றிருக்கிறாள்

கல்பகோடி ஆண்டுகளின் நிழலை
அவள் தாங்கியிருக்கிறாள் என்பதால்
அவளை நான் விரும்பிச் சேர்கிறேன்

என் பருவம்
காலங்களுடன் நகர்ந்து கொண்டிருக்க
என் பால்யப்ராயம் துவங்கி
அவள் அப்படியே இருக்கிறாள்
காலத்தையும் பருவங்களையும் கடந்தவளாக

ஒரு
கையசைவில்
உயிர்க்காற்றை எனக்குள் பரிசளித்தவள்
மழை மின்னல் காற்று மேகம் என
யாவும் அவள் சொல்லில் கட்டப்பட்டிருந்தன

யாரென்று அறியாமலேயே
எல்லோரையும் குணப்படுத்தியதால்
மஞ்சள் பூசி
அலங்காரம் செய்யப்பட்டவள்

காக்கைகளுக்கும் குருவிகளுக்கும் கூட அடைக்கலம் தந்து
தன்னை விருத்தி செய்து கொண்டிருந்தாள்
பின்னாளில்
யார் யாருடைய மற்றும் என்னுடைய அலட்சியத்தினால்
நிலம் நகர்த்தி எடுத்துச் செல்லப்பட்டாள்

கசப்பின் சிறு தேவதை
இன்று
தனக்கு உரிய
கரிசல் மண் பறிக்கப்பட்டு விட்ட
தன் பெருந் துயரம் சொல்லி
கையசைக்கிறாள்

மஞ்சள் முகமும்
கசப்பு சுவையும் இழந்து
காற்றிலசைய தனித்து நிற்கிறேன் நான் .

Courtesy : paintings - Shuchi Krishnan

ஓவியத்தினுள் புல்வெளி ...


பறவைகளின் குரல் கேட்கும் முன்பாகவே எழுந்து விடுகிற
அவளின் அதிகாலை சூரியன்
மகள் வரைகிற ஓவியத்தில் நெருப்புக்கோளமென
உயிர்ப்பெற்று விடுகிறது

பசித்த ஆட்டுக்குட்டியின் மிரண்ட கண்களைப் போல
மேய்ச்சலுக்கான புல்வெளி தேடி அவள் நடக்கையில்

வீட்டிலிருக்கும் மகள்
பாதையும் ஆடுகளும்
பஞ்சுப் பொதியென வரையத் துவங்கியிருப்பாள்

அயர்ந்து சலிப்புற்று அவள் அலைகையில்
சூரியன்
அஸ்தமனம் காண்பதில்லை

ஒவ்வொரு இரவும்
வீடு திரும்புகிற அவள்
மேய்ச்சல் முடிந்து வீடு திரும்புகிற ஆட்டுக் குட்டிகளை
வரைந்தபடி களைத்துறங்கும் மகளைக் காண்கிறாள் .

நன்றி : செம்மலர்

Wednesday 21 August 2013

காட்டுத் தீ. . .



காடுகளை அறிந்தது
மரங்களாக
நீரூற்றுக்களாக
விலங்குகளாக
மேடுபள்ளங்களாக
என்றாலும்
காடுகள் புதிர்களால் நிரம்பியது
 

காடுகளுக்குப் பாதைகள் இல்லை
நெருப்புக்கும்கூட

தீ
நகர்வதற்கான ஒரு பாதை
இந்த நிலத்தில்
இந்த வானத்தில் இல்லை

பாதைகள் நேராகச் செல்லும்
வளைந்து வளைந்து செல்லும்
சட்டென்று இடது புறமாகவோ
பட்டென்று வலது புறமாகவோ
அல்லது
திரும்பிச் செல்வது போலவோ

பாதைகளின் பாதை இருக்கின்றன

ஒருபோதும்
இவ்விதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல
நெருப்பென்னும் தீ

அது பரவி அழிக்கிறது
கசடுகளை
ஒவ்வாதவைகளை
தீமைகளை
இன்னும் பலவற்றை
அன்பையும் காமத்தையும் தவிர.

Tuesday 20 August 2013

அன்பிலான சொல். . .




உனக்கான
சொல்லைத் தேர்ந்தெடுத்து விட்டேன்

தீர்ந்து போகவே முடியாதது அச்சொல்

பகலும்
இரவும்
இரவின் இடைவெளிகளிலும்
நிரம்பித் ததும்பும்
உன் நினைவுகளினால்
உயிர் பெறுகிறது
அந்தச் சொல்

பேசிப்பேசி
பேச மொழியற்ற தருணங்களில்
என் உலகிலிருந்து
ஒரு பூவைப் பறிப்பது போல
அந்த சொல்லை
எடுத்து வைத்துள்ளேன்
உன்முன்

பூவின் வாசமென
உருமாறி நிரம்புகிறது நம்மிடையே

அச் சொல்லை
நீ கேட்பாயெனில்
ஆதியிலே
அச்சொல்லிருந்தது

அந்தசொல்
நானாக
உயிர்பெற்றிருக்கிறேன் என
உணர்வாய்

அன்று
அது
நம்மை அழைத்துச் செல்லும்
அன்பினால்
பூக்கள் பூக்கும் தேசத்திற்கு .

Sunday 18 August 2013

ரகசியத்தின் சப்தம் . . .



புங்கை மரத்தினுள் ரகசியமென ஒளிந்திருக்கிறது
ஒரு பறவையின் குரல்
அதன் சப்தம் என் செவிகளுக்கு வந்தடைய
சற்று காலமெடுக்கலாம்

கண்டு பிடிக்க முடியாத ரகசியம்
காதலை
தன் குரலாகக் கொண்டிருக்கிறது

காதலை
அர்த்தப் படுத்தும்
வார்த்தைகளின் சூட்சுமம்
அவன் அறிந்ததே

காதலை
எனக்குள் வைத்துவிட்டுச் சென்றவனைத்
தேடுவதே
இந்தப் பயண ரகசியமாக இருக்கிறது

அவன் காதல்
சிப்பியின் ஓடு திறந்து ஒளிரும்
முத்துப் போன்றதாக இருக்கிறது

இருளில் ஒளிர்பவனைத் தேடியலைகையில்
ஒற்றைப்
பறவையின் கூக்குரல்
மனத்தைக் கரைக்கிறது

புங்கை மரத்தடியில்
மேகம் மறைத்த நிலவொளியில்
சிப்பியிலிருந்து எடுத்த முத்தெனத்
தனித்து நிற்கிறேன்
இருளும் ஒளியும் படர்ந்திருக்கும் நிலத்தில்

Saturday 17 August 2013

இதற்குமுன்






இதற்கு முன்
இவ்விதமாக யாரையேனும்
ஆக்கிரமித்திருந்தேனா

ஒரு  புயலைப்  போல
யாவற்றையும்  புரட்டிப்போடும்
அன்பைப்  பொழிந்திருந்தேனா

இத்தனை  பிரியங்களை  சொற்களாக்கி
உனக்குப்  பரிசாக  தருவேனா

உன் பிரிவை
வாழ்வின்  துயரமான  தருணமெனக்
கருதித்   தவிப்பேனா

நம் சந்திப்பை
காலத்தின்  மிகப்பெரிய  அதிர்ஷ்டம்
என்று  சொல்லி  மகிழ்வேனா 

உண்மையில் 
 உனது  பிரிவும்  சந்திப்பும்
என்னுள்  நிகழ்ந்திருக்கிறதா

Friday 16 August 2013

சுழற்சி . . .


பச்சைப் புல்வெளியின் மேல்
மிதக்கின்ற நீலவானத்தில் பறந்து செல்கிறது
பஞ்சுப் பொதிகள்

பஞ்சுப் பொதிகளில் இருந்து கசிகின்றன
அன்பின் துளிகள்
 

பச்சைவெளியின் ரகசியங்களை
சுமந்து செல்கின்ற பொதிகள்
நிலத்தின் வழியாக
கடலைச் சேர்கின்றன

பறவைகள்
பறக்கின்ற வானம்
நிலத்தில் அடங்குகிறது

அன்பின் நிலம். . .

கடல்
நிலம்
காடு
மலை
பாலை என
எங்கும் காணோம்
நமதன்பின் வெளியை

ஒரே ஒரு முறை
என்னைப் பார்
நமக்கான நட்சத்திரத்தை
உன் விழிகளில் இருந்து
உருவாக்குகிறேன்.

திசை விலகிய காலம் . . .



சூரியனின் சுழற்சிப்பாதை
அந்தக் கணத்திலிருந்து
திசை விலகத் துவங்கியிருந்தது

அதற்கு முந்தைய என் கணங்களில்
முன் வாசலில்
ஒளிக்கற்றைகள் விழும் பொழுதில்
ஊர் மந்தையிலிருந்து
அடிவாரம் நோக்கிப் புறப்படும்
பசுக்களின் குளம்படிகள்
தெருவில் கேட்கத் துவங்கியிருக்கும்

ஏறு வெயிலென
வாசல் தாண்டி
சூரியன் முற்றம் நிரப்புகையில்
சில்லுக்கருப்பட்டி பணியார வாசத்தில்
வீடு நிறைந்திருக்கும்

முற்றத்தில் நிழல் பரப்பி
பின்கட்டுதாண்டி சோம்பலாக நகரும் சூரியனை
விரட்டிப் பிடிக்க
பள்ளி முடிந்து திரும்பும் சிறுமிகள் துரத்திச் செல்வார்கள்

மஞ்சள் வெயில் மயக்கும்
ஒரு மாலையில்
பள்ளி முடிந்து வீடு திரும்பி
கிணற்றடியில் பருவமெய்தினேன்

என் காலம்
ரகசியமென மிதக்கத் துவங்கியது
அந்த கணத்திலிருந்து

பின்
ஒருபோதும் மீட்டெடுக்க இயலாத
அந்த நாட்களின் நினைவுகள்
அதிகாலையில்
மலைமுகட்டுச் சூரியனாக
சிவந்து ஒளிர்கிறது

காலத்தின் நகர்தலில் என்னை ஒப்புக் கொடுத்து
என் தினங்களைக் கடந்து கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
உச்சி வெயில்
எப்போதும் துரத்துகிறது
சூரியக் கனவுகளிலிருந்து .

மனப் பறவை . . .


நம்மைச்
சூழ்ந்திருக்கும் பனி விலகி
நிகழ்கின்ற சந்திப்பில்
உன்னை
எதிர்கொண்டு அணைப்பதற்காகவே
தேங்கிக் கிடக்கின்ற
அந்தரங்கத்தின் முத்தம்
நீண்டதொரு கடல் பயணமொன்றில்

இளைப்பாறச்
சிறு நிலம் தேடும்
பறவையைப் போல் தவிக்கின்றது .

Tuesday 13 August 2013

நிறம் கலைகிற மழைவானம்





மழை  துவங்கிய நாளின்   
இரவில்
அவனுக்கென  காத்திருக்கிறாள்
நீர்க்கரையில்
வாழும் புறாக்களின் கண்களை உடையவள்  அவள் 

இடி மின்னல் காற்று
புயல் குளிர்
என்கிற விசித்தர ஆயுதங்களை
தன் உடலில் தரித்திருப்பவன்  அவன்

வருகிறான்
ஆண்டாண்டுகளாக
மரக்கலனில் ஊறிப் புளித்துச் சுவையேறிய
அந்த பானத்தைத் 
தன் கண்களில் ஏந்தியபடி

கருப்புத்திராட்சையின்
திரவ வாசமும்
மரக்கலனின் பச்சை வாசமும்
அவனில் பரவியிருக்க
மழைக்காற்று
பார்வையின்  வழியே
குளிரை உணர்த்தத்  துவங்கியிருந்தது

நிலம் நோக்கி
அம்பென தெறித்து விழும் மின்னலில்
ஒளிர்கிறது
நேர்ந்துகொண்டவளின் உள்ளம்

ஒளிர்தலில் உணர்கிறாள்
அவனது ஆயுதங்கள் ஒவ்வொன்றாக
உதிர்ந்து கொண்டிருப்பதை

பொங்கிப் பெருகி
மிதக்கத் துவங்குகிறாள்
அவளது நிலத்திற்கும்
அவனது வானத்திற்கும் இடைப்பட்ட
அவன் உலகில்.

Monday 12 August 2013

ஊடகங்களில் திருநங்கைகள் :



மதுரையில் 2 நாள் நடைப்பெற்ற திருநங்கையர் முப்பெரும் விழாவின் 2ம் நாள் நிகழ்வில் ஊடகங்களில் திருநங்கைகள் பற்றி என்னுடைய பதிவு :

திரு நங்கைகள், அரவாணிகள் என்று இன்று அறியப்படுகிற அல்லது அழைக்கப்படுகிறவர்களை நான் என் வாழ்வில் எந்த வயதில் முதன்முதலாக அறிந்து கொண்டேன், அல்லது எங்கே பார்த்தேன், அப்பொழுது எவ்விதம் உணர்ந்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

மனதில் பதிந்திருக்கும் திரைப்படக்காட்சி ஒன்றின் வழியேதான் நான் திரு நங்கைகளை நினைவு கூறுகிறேன்."கூவாத கோழி கூவுற வேளை, ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே..." என்று கோரஸ் பாடல் பாடியபடி கைதட்டி கும்மி கொட்டிய தோற்றமே நினைவில் உள்ளது.

திரைப்படத்தில் வட்டமடித்து கும்மி கொட்டிய அவைகள் யார், வித்தியாசமாக இருக்கிறார்களே என்கிற கவனம் ஏற்பட்டது. திரைப்படத்தின் கமர்ஷியல் வெற்றிக்கு பயன்படுத்திய உத்திப்பாடல் அது என்று அறியாத அந்தப்பருவத்தில் அந்த பாடல் வரிகளில் ஈர்ப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு பள்ளிப்பருவத்தில் விளையாட்டு வேளையிலோ வகுப்புப் பிரிப்பதற்கோ வரிசை எண் சொல்லும்பொழுது 1,2,3,..9 சொல்லும் வகுப்புத் தோழியைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிப்பது என்பதுதான் நான் அறிந்த 9 பற்றிய நையாண்டி தொனி. அடுத்ததாக கனகாம்பரப் பூ சூடிக்கொள்ளுதல், இடுப்பை ஒடித்து ஒடித்து நடப்பது, கன்னத்தில் இடித்துச் செல்வது என்பது அரவாணிகள் உடல் மொழி என சித்தரிக்கப்பட்டது தமிழ் சினிமா கலாச்சாரத்தில்தான்.

கிராமப்புறத்தையோ நகரத்தின் வாழ்வையோ அறியாத பால்யம் என்னுடையது . மக்கள் புழக்கம் குறைந்த மலைப்பிரதேசங்களில் நான் திருநங்கைகள் பற்றி அறிந்ததாக நினைவில் இல்லை . மேலும் இன்று போல மனதில் தோன்றும் எல்லாக் கேள்விகளையும் பெரியவர்களிடம் கேட்டு விட இயலாது . மனதில் எழும் சந்தேகம் பற்றி படித்தும் தெரிந்து கொள்ள இயலாத காலம் அது .
 

நர்த்தகி நடராஜ் பற்றி பத்திரிக்கையொன்றில் படித்தபோது தான் திருநங்கைகள் பற்றிய என் புரிதல் துவங்கியது. எனக்கு நாட்டியம் பிடிக்கும். பள்ளி நாட்களில் பரதம் பயின்ற பெண் என்கிற காரணத்தால் நர்த்தகி நடராஜ் மீது இயல்பாகவே ஈர்ப்பு வந்தது. பின்பு திருநங்கைகள் பற்றி தேடிப் படிக்கலானேன். திருநங்கை ரேவதி பற்றி கல்கி சுப்பிரமணியன் பற்றி,பாரதிகண்ணம்மா பற்றி, ப்ரியாபாபு பற்றி, மற்றும் லிவிங் ஸ்மைல் வித்யா பற்றியும் அறிந்து கொண்டேன்.

இங்கே,
சக்கிலியன் இன்ன வேலை செய்ய வேண்டும், செட்டியார் இன்ன வேலை செய்ய வேண்டும்,
நாயக்கர் இன்ன வேலை செய்ய வேண்டும், கள்ளர் இன்ன வேலை செய்ய வேண்டும்
என வேலை அடிப்படையிலேயே அறியப்பட்ட சாதி அமைப்பு மேல், கீழ் என சாதி அடிப்படையில் மனிதம் பகுக்கப்பட்டது.
வண்ணான் குடும்பத்துல பொறந்துட்டு படிக்க வந்துட்டாளா?
என்கிற அவமானப்படுத்தும் கேள்விகளைச் சுமந்து கல்வி கற்க வேண்டிய நிலை. இவ்வாறு சாதி கட்டமைப்பை உடைத்து பள்ளிகூடம் வருவதற்கே எத்தனை சமூக எதிர்ப்பைத் தாண்டி வரவேண்டியதாகி இருந்தது; இன்னும் இருக்கிறது.

அதேபோல பொம்பளயா பொறந்துட்டு இதச் செய்யலாமா, வேகமா நடக்கலாமா, படிக்கலாமா, நிறைய சாப்பிடலாமா, சத்தமா சிரிக்கலாமா... அப்படியான இவ்வளவையும் உடைத்து இந்தப் பெண்கள் தான் வெளியே வந்துவிட்டார்களா என்ன?

பெண்கள் செய்யும் வேலை இது இது என்று ஒதுக்கப்பட்ட இந்த சமூகத்தில் ஆண்கள் வாசல் தெளித்து பெருக்கிக் கோலம் போடுதல், சமையல் செய்தல் அவமானம், சாப்பிட்ட தட்டை எடுத்து வைத்தல், பாத்திரம் கழுவுதல் பெருத்த அவமானம் என்று இப்படி கற்பிதம் செய்யப்பட்டுள்ளது.

காதல் என்கிற சொல்லே பெரிய அசிங்கம், சாதிக் கட்டமைப்பை உடைத்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல் ஒன்றும் அத்தனை எளிதில்லை என்பது இன்று வரை நாம் அறிந்துகொண்டிருக்கிறோம்.

ஆண் அடையாளம், பெண் அடியாளம் முழுமையாக உள்ளவர்கள்தான் என்றபோதிலும் தலித்கள், பெண்கள், உடல் ஊனமுற்றோர்கள் இன்றளவும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் . இவர்கள் தங்களை நிரூபிக்க கூடுதலாய் உழைக்க வேண்டியிருக்கிறது. 


இந்நிலையில் மரபு ரீதியான இனப்பெருக்கத்தின் அடிப்படைத் தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே திருநங்கைகள் தங்களுக்கென ஒரு சமூகத்தை, ஒரு குடும்ப அமைப்பை, சடங்கு முறையை வாய்மொழி மரபுவழியே பேணி வருகிறார்கள்.

பல்வேறு மதம், மொழி, இனம், சாதி அமைப்பு கொண்ட இந்திய நாட்டில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் கலாச்சாரச் சடங்குகளின் முறைப்படுத்தலுக்கும் அரவாணிகள் தங்களைக் கட்டமைத்துக்கொள்ளுதற்கும் வேறுபாடு உள்ளது.

ஒரு சாதி, ஒரு மொழி, ஒரு நிலம் என்று இருந்தாலும் உட்பிரிவுகளின் கலாச்சாரத்தை புரிந்துகொள்வது சிரமம். அப்படியிருக்கையில் வேறுவேறு சாதி, வேறுவேறு இனம், வேறுவேறு மொழி மற்றும் வேறு பாலில் பிறந்து,மாற்று பாலின மன ஈர்ப்பு காரணமாக உடல் அமைப்பும் மாற்றம் பெற்றுள்ள திரு நங்கைகள் தங்களைக் கட்டமைத்து வளர்ந்து வந்துள்ளது எனபது அத்தனை எளிதான செயல்பாடு அல்ல .

அரவாணிகள் தினம் கொண்டாடப்படவும், அவர்களுக்கு குடும்ப அட்டை, அடையாள அட்டை பெறுவதற்கும், இடை நின்ற கல்வி பெறுவதற்கும், திரு நங்கைகள் நடந்து வந்த பாதை என்பது அவமானங்களும் வலிகளும் நிறைந்தது. தற்கால ஊடகங்களின் வழியாக தொடர்ந்து லிவிங் ஸ்மைல் வித்யா, ப்ரியாபாபு, பாரதிகண்ணம்மா, கல்கி சுப்பிரமணியன், நர்த்தகி நடராஜ் மற்றும் பலர் தங்கள் இருப்பை உலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்..இதன்மூலமே இந்த குறைந்தபட்ச அங்கீகாரம் கூட கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

என் மகள் காவியாவின் வகுப்புத் தோழிகளுடன் நேற்று திரு நங்கைகள் குறித்து உரையாடினேன். திரு நங்கைகள் பற்றி தெரியுமா?", இது நான். "தெரியும் ஆன்ட்டி , ஒம்போது " இது அஃப்ரிதா. அவள் இதை சொன்ன அடுத்த கணமே, ஏய் அஃப்ரிதா அப்படி சொல்லக்கூடாது, தப்பு என கண்டிப்பு நிறைந்த குரலில் புனிதா கூறினாள். நான் திரு நங்கைகள் பற்றி என் பால்யத்தில் அறிந்ததற்கும், என் மகள் அறிந்து வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது எனில் அது ஊடகங்களின் மூலமே சாத்தியமாயிற்று. இது சிறிய மாற்றமே எனினும் கவனிக்கத்தகுந்தது என்று நினைக்கிறேன். அடுத்து அவர்களிடம் நான் முன் வைத்த கேள்வி, திரு நங்கைகளைப் பார்த்தவுடன் என்ன நினைப்பீர்கள்? ஒருத்தி பாவம் என்றாள், இன்னொருத்தி பயம் என்றாள். திருநங்கைகள் பாவப்படவோ, பயப்படவோ வேண்டியவர்கள் அல்ல, அன்பு செய்யப்பட வேண்டியவர்கள் என்றேன் நான்.

மூளை வளர்ச்சி இல்லாமல் பிறந்த குழந்தைகளை 25, 30 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் சகிப்புத்தன்மையுடன் தாங்கிப் பராமரிக்கும் பெற்றோர்கள், ஒரு பாலில் பிறந்து மறுபால் ஏற்றுக்கொண்ட தங்கள் பிள்ளைகளைப் புறக்கணிப்பது எத்தனைக் கொடுமையான இருபுறமும் உளவியல் சிக்கல் மிகுந்த செயல்பாடு .

குடும்பத்தின் புறக்கணிப்பு காரணமாக தாழ்வுமனப்பான்மை, குற்ற உணர்வு இதனால் கல்வி தடைபடுதல் ஏற்படுகிறது. விளைவாக வேலைவாய்ப்பின்மை. பசியிலும் மனப்பிறல்விலும் பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல் போன்றவைகளினால் துயர்மிகுந்த வாழ்வை மேற்கொள்கிறார்கள் . சமயத்தில் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுகிறார்கள்.இதனால் உளவியல் அடிப்படையிலான கடும் மனநெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை முடிவெடுக்கிறார்கள் .

இந்த காற்றில் எத்தனை லட்சம் உயிர்கள் வாழ்கின்றன, இந்த நீரில் எத்தனை லட்சம் உயிர்கள் வாழ்கின்றன, இந்த நிலத்தில் எத்தனை லட்சம் உயிர்கள் வாழ்கின்றன. இவர்கள் வாழ இடமில்லையா?

திருநங்கை ஸ்வப்னா , திருநங்கை ரீமா போன்றோர் மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிற தேர்வு எழுத இயலாமல் போனது, திரு நங்கை பாரதிகண்ணம்மா அரசியலில் அங்கீகாரம் பெறப் போராடுவது இவற்றிற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
நன்றி .