Sunday 25 August 2013

ஓவியத்தினுள் புல்வெளி ...


பறவைகளின் குரல் கேட்கும் முன்பாகவே எழுந்து விடுகிற
அவளின் அதிகாலை சூரியன்
மகள் வரைகிற ஓவியத்தில் நெருப்புக்கோளமென
உயிர்ப்பெற்று விடுகிறது

பசித்த ஆட்டுக்குட்டியின் மிரண்ட கண்களைப் போல
மேய்ச்சலுக்கான புல்வெளி தேடி அவள் நடக்கையில்

வீட்டிலிருக்கும் மகள்
பாதையும் ஆடுகளும்
பஞ்சுப் பொதியென வரையத் துவங்கியிருப்பாள்

அயர்ந்து சலிப்புற்று அவள் அலைகையில்
சூரியன்
அஸ்தமனம் காண்பதில்லை

ஒவ்வொரு இரவும்
வீடு திரும்புகிற அவள்
மேய்ச்சல் முடிந்து வீடு திரும்புகிற ஆட்டுக் குட்டிகளை
வரைந்தபடி களைத்துறங்கும் மகளைக் காண்கிறாள் .

நன்றி : செம்மலர்

No comments: