Tuesday 6 August 2013

உன்னுடன் வரும் எனது பொழுது . . .


நம்மை
மழை நனைந்த பொழுது
இன்னும்
நீர்த்திவலைகளாக
மனதில் படிந்திருக்கிறது

புத்தக அடுக்குகளிலிருந்து
தலை நீட்டித் தெரியும்
நான்காய் மடிந்த காகிதம்
முழுமையாய் சொல்கிறது
உனது துயரங்களை

விம்மியடங்கும் ஓசைகள்
மெலிதாய் எழுகின்றன

கடிதம்
புத்தகத்தினுள் வைக்கப்பட்டவுடன்
மழை தொடங்கிவிட்டது

இங்கு
வேறு யாருமில்லை
புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட
எனது விரல்களில்
மழைத்துளி பட்டுத் தெறிக்கிறது
மழை நனைத்துக் கொண்டிருக்கிறது
மரங்களை
செடிகளை
பூக்களை
பறவைகளை
கூடவே
உன்னையும்
உன்னுடன் வரும் எனது அன்பையும்

நீ
கொண்டு செல்கிறாய்
நம்மை நனைத்த மழையையும்
அந்த பொழுதையும் .

Courtesy : Painting -Anna Razumovskaya

No comments: