Tuesday 6 August 2013

நிலவென்று சொல்லாதே. . .



நிலவென்று சொல்கிறார்கள்
என்னை நிலவென்று சொல்கிறார்கள்
எனக்கு விருப்பமில்லாப் பெயர் அது
இரவல் ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருப்பது
எப்படி நானாக முடியும்

நான்
எனது சொற்களால் ஆனவள்
எனது விரல்களிருந்து கசிவது
என் இரத்தம்
அது
என் முதுகுத்தண்டில் உற்பத்தியாகி
உலகெங்கும் பரவுவது

நான் பெண்
நிலவல்ல
நான்
உயிர்ப்புடனிருப்பவள்
நிலவல்ல
ஆயிரம் ஆயிரம் சூரியன்களைப் பெற்றேடுக்கும் பெண்
நிலவல்ல

நிலவு
அது ஒரு போலி
மாதர்
கண்களைக் கட்டும்
ஒளித்தீற்று
மேலும் அது ஒரு சூன்யம்

என்றென்றும்
பெண் நிலவாயிருக்க விரும்பவே மாட்டாள்
அவள்
சூரியன்களைப் பிரசவிப்பவள் .

No comments: