Sunday 18 August 2013

ரகசியத்தின் சப்தம் . . .



புங்கை மரத்தினுள் ரகசியமென ஒளிந்திருக்கிறது
ஒரு பறவையின் குரல்
அதன் சப்தம் என் செவிகளுக்கு வந்தடைய
சற்று காலமெடுக்கலாம்

கண்டு பிடிக்க முடியாத ரகசியம்
காதலை
தன் குரலாகக் கொண்டிருக்கிறது

காதலை
அர்த்தப் படுத்தும்
வார்த்தைகளின் சூட்சுமம்
அவன் அறிந்ததே

காதலை
எனக்குள் வைத்துவிட்டுச் சென்றவனைத்
தேடுவதே
இந்தப் பயண ரகசியமாக இருக்கிறது

அவன் காதல்
சிப்பியின் ஓடு திறந்து ஒளிரும்
முத்துப் போன்றதாக இருக்கிறது

இருளில் ஒளிர்பவனைத் தேடியலைகையில்
ஒற்றைப்
பறவையின் கூக்குரல்
மனத்தைக் கரைக்கிறது

புங்கை மரத்தடியில்
மேகம் மறைத்த நிலவொளியில்
சிப்பியிலிருந்து எடுத்த முத்தெனத்
தனித்து நிற்கிறேன்
இருளும் ஒளியும் படர்ந்திருக்கும் நிலத்தில்

No comments: