Sunday 25 August 2013

காலம் பறித்த கசப்புச் சுவை . . .



விரிந்து கிடக்கும் கரிசல் நிலத்தில்
தனித்து நின்றிருக்கும்
அந்தப் பெண்ணைப் பார்த்தேன்

வெயிலின் அக்கினியை ருசித்துக் குடிப்பவள் அவள்
உலர்ந்த கசப்பை பசுமையாக கொண்டிருப்பவள்
கோடி நட்சத்திரங்களை தன் தலையில் சூடி
நின்றிருக்கிறாள்

கல்பகோடி ஆண்டுகளின் நிழலை
அவள் தாங்கியிருக்கிறாள் என்பதால்
அவளை நான் விரும்பிச் சேர்கிறேன்

என் பருவம்
காலங்களுடன் நகர்ந்து கொண்டிருக்க
என் பால்யப்ராயம் துவங்கி
அவள் அப்படியே இருக்கிறாள்
காலத்தையும் பருவங்களையும் கடந்தவளாக

ஒரு
கையசைவில்
உயிர்க்காற்றை எனக்குள் பரிசளித்தவள்
மழை மின்னல் காற்று மேகம் என
யாவும் அவள் சொல்லில் கட்டப்பட்டிருந்தன

யாரென்று அறியாமலேயே
எல்லோரையும் குணப்படுத்தியதால்
மஞ்சள் பூசி
அலங்காரம் செய்யப்பட்டவள்

காக்கைகளுக்கும் குருவிகளுக்கும் கூட அடைக்கலம் தந்து
தன்னை விருத்தி செய்து கொண்டிருந்தாள்
பின்னாளில்
யார் யாருடைய மற்றும் என்னுடைய அலட்சியத்தினால்
நிலம் நகர்த்தி எடுத்துச் செல்லப்பட்டாள்

கசப்பின் சிறு தேவதை
இன்று
தனக்கு உரிய
கரிசல் மண் பறிக்கப்பட்டு விட்ட
தன் பெருந் துயரம் சொல்லி
கையசைக்கிறாள்

மஞ்சள் முகமும்
கசப்பு சுவையும் இழந்து
காற்றிலசைய தனித்து நிற்கிறேன் நான் .

Courtesy : paintings - Shuchi Krishnan

No comments: