Wednesday 8 March 2017

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..

38. காக்கை பாடினியார் நச்செள்ளையார்:


ஒரு பெண்ணுக்குச் சேதி வருகிறது:

“எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி...”

ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக சகுணம் பார்ப்பது என்பது நம்மிடையே  தொன்றுத் தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். நல்ல காலம், ராகுகாலம், எமகண்டம், வளர்பிறை, தேய்பிறை என நாளும் கோளும் பார்ப்பது தவிர வழியில் எதிர்படும் பறவைகள், மிருகங்கள், மனிதர்களைக் கொண்டு சகுணத்தை அனுமானிப்பது உண்டு. இவ்வாறு நிமித்தம் பார்ப்பதில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பண்பாடு சார்ந்து வேறுபாடு இருக்கிறது. ஓரிடத்தில் கெடுதலின் அம்சமாக கருதி வெறுக்கப்படுவது பிறிதொரு இடத்தில் நன்மையின் நிமித்தமாக வரவேற்கப்படுவதும் உண்டு.
__________________________________________________________________________________

“உறை மூடிய வீணையில்
உயிர் நரம்பொன்றைத்
தட்டி எழுப்ப
மழைக்கால இரவொன்று வரலாம்.
காத்திரு.
கோடையின் கடைசிப் பகல் ஒன்றில்
அதனை உனக்குப் பரிசளிப்பேன்.”

இது தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை. தலைவன், தலைவியின் என்றும் மாறாத அன்பினைப் போலவே அவர்களுக்குள் நிகழுகிற பிரிவென்பதும் காலங்காலமாய் தொடர்ந்திருப்பது. இணைவதும் பிரிவதும் மீண்டும் இணைவதுமாக காலம் நிகழ்த்துகிற ஒருவிதமான மாய விளையாட்டிற்குள் ஆணும் பெண்ணும் யுகயுகமாக தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரிவுக்கான காத்திருப்பென்பது பெண்ணுக்கானது. அது அவளுக்கு மிகுதுயர் தரக்கூடியதாகவும் அதேசமயம் அந்தத் துயரமே அவளறியாத ஏகாந்தத்தில் திளைக்கச் செய்வதாக இருக்கிறது. அவன் எப்போது வருவான் என்பதறியாத நிலையில் அவனுக்காகக் காத்திருப்பதில், காத்திருப்பின் வெளியானது பரந்துபட்டதாக விரியத் தொடங்கியிருக்கும். அவனுக்கு பரிசளிக்கவேண்டி கணந்தோறும் அவளையே சேகரிக்கத் தொடங்கியிருப்பாள். கணங்கள், யுகங்களாகி அவளை வதை செய்யத் தொடங்கியிருக்கும் பொழுதில்கூட அந்தவாதையின் சின்னஞ்சிறிய பகுதியையும் முழுவதாக  ஏற்றுக்கொண்டு அவனுக்கெனக் காத்திருப்பாள். அவளுடைய தவிப்பும் அதுசார்ந்த வலியும் அவளைப் பலவீனப்படுத்துவதுபோலத் தோன்றினாலும் அக்காலகட்டத்தில் அவனுக்குக் கொடுப்பதற்காகவே தன்னை பலப்படுத்திக் கொண்டிருப்பாள். மீண்டும் அவன் வருவான், சந்திப்பு நிகழும், அப்பொழுது கோடையின் காய்ந்த நிலத்தில் அடர்மழையெனப் பொழிய அவனை அனுமதிப்பாள். அதற்காகவே அத்தனைத் துயர்களையும் தாங்கிக் கொண்டிருப்பாள்.

ஒரு பெண் தன்னைத்தான் சமன் செய்துகொள்ள முயன்று, அம்முயற்சியில் தோற்று, பிரிவுக்காலத்தைக் கடந்து கொண்டிருப்பாள். அவளுடைய தவிப்பினை முற்றிலும் பிறரிடம் காட்டிவிடாமல் இருக்க முயலுவாள். இது ஒன்றும் அத்தனை துயரமில்லை என்பதான பிரிவின் ஆரம்பநிலை கடந்தும்  பிரிவுக்காலம் நீட்டிக்கத் தொடங்குகையில் யாரிடமேனும் பகிர்ந்துகொள்ள தவித்திருப்பாள். தோழியோ, உடனிருக்கும் மற்றவரோ முழுவதும் தேற்றிவிட இயலாது என்பதை உணர்ந்தும் அவளுடைய மனமானது புறவெளியில் யாரிடமேனும் அவனைப் பற்றிய சேதியை பகிர்ந்துகொள்ளத் தூண்டும். யாராவது அவனுடைய பெயர் சொன்னாலோ, அவனைப் பற்றிய சேதிகளைச் சொன்னாலோ பரவசமடைவாள். அவனது உடனிருப்பை உணர்த்துகிற விதமான வார்த்தைகளுக்காகக் காத்திருப்பாள். அதனைச் செய்கிற மனிதர்களை, பறவைகளை, சூழலைக் கொண்டு தன்னைச் சமன் செய்துகொள்ள முனைவாள். அந்நிலையினைப் பாடுகிற காக்கை பாடினியார் நச்செள்ளையாரின் குறுந்தொகைப் பாடல், 

திண்தேர் நள்ளி கானத் தண்டர்
பல்ஆ பயந்த நெய்யிற் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.
 “

“காகம் கரைந்தால் விருந்து வரும்” என்பது இன்றளவும் உள்ள எளிய நம்பிக்கை. பசு, பால், நெய் ஆகியவற்றினால் முல்லை நிலம் என்கிற   குறிப்புணர்த்தும் பாடல் இது. தோழி காக்கைக்குச் சோறு வைக்கிறாள். எதற்காக என்பதுதான் இந்தப்பாடலின் பொருள். “வலிய தேரினை உடையவன் கண்டீரக்கோப் பெருநள்ளி. அவனுடைய காட்டில் உள்ள இடையர்களுக்கு பல பசுக்கள் உள்ளன. அவை கொடுத்த நெய்யுடன், தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்ணெல் அரிசியால் ஆக்கிய வெம்மையான சோற்றை ஏழு கலங்களில் இட்டுவைத்து, அவற்றை ஏந்தி காக்கைக்கு அளித்தது, என்னுடைய தோழியின் பெரிய தோள்களை நெகிழச்செய்வதன் மூலம் அவளது  துன்பத்தை நீக்கியதே காரணமாகும். விருந்தினர் வரும்படி கரைதலைச் செய்த காக்கைக்குரிய அப்பலிச் சோறானது சிறிய அளவினதே ஆகும்.” ஏனெனில் தலைவியினுடைய பிரிவுக்கால துன்பம் அத்தனை பெரியதாக இருந்திருக்கிறது. 

தலைவன் இன்னும் வரவில்லை. குறிப்பிட்டுச் சென்ற காலத்தில் திரும்புகிற வழக்கமுடையவன். அவ்விதமாகத் திரும்பவில்லை. பிரிவுக் காலத்தில்  தனக்குள் சொல்லிக்கொள்கிற சமாதானங்களில் வலு இழக்கும் தலைவி தன்னைத்தான் தேற்றிக் கொள்ளவியலாத நிலையினை அடைகிறாள். உடல் மெலிகிறாள், வலிய அவளின் தோள்கள் மெலிகின்றன. உடனிருக்கும் தோழியின் ஆறுதல்கள் எதுவும் எடுபடவில்லை. தன்னுடைய மனதைத் தானே தேற்றிக்கொள்வதும், உடனிருப்போர் ஆற்றுப்படுத்துதலில் தணிந்திருப்பதும் இயலாத பொழுதில் நிமித்தங்கள் பெண்களுக்குத் துணை செய்கின்றன.

மரபைத் தெரிந்து, அதனோடு இயைந்திருக்கவும் தேவைப்படுகிற இடங்களில் அதனை மீறவும் செய்பவை ஞானக்கூத்தனின் கவிதைகள். மரபை நவீனவாழ்வியலில் பொருத்திப் பார்க்கிற கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். “காக்கை” என்கிற இவரது கவிதையில், எந்த கிராமத்திற்குப் போகலாம் என யோசித்தபடியே பறந்த ஒரு காகம், ஒரு கிராமத்து வீட்டின் ஓட்டுக்கூரை மேல் அப்போதுதான் வைக்கப்பட்டிருந்த ஆவிபறக்கும் சோற்றைத் தின்று பார்க்கிறது. அதற்காகவே படையலிட்டிருந்தார்கள் என்பதால் அதனை துரத்துவார் யாருமில்லை. அப்போது வீட்டுக்குள்ளிருந்து  கேட்ட சந்தோஷக் கூச்சலின் அனர்த்தத்திலிருந்து அர்த்தத்தைப் பிரித்துக் கொண்டு அந்தச்சேதியை இன்னொரு கிராமத்தில் நல்லசேதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணிடம் சேர்க்கிறதாக இக்கவிதை அமைந்துள்ளது. ஞானக்கூத்தனின் “காக்கை” கவிதையின் ஒருபகுதி,

“தலையை நிமிர்த்தி உரக்கக் கரைந்தது
வீட்டுக்குள் உள்ளவர் கேட்கும் படிக்கும்
உரத்துக் கரைந்தது மூன்று தடவைகள்.
காக்கை கத்திற்று. காக்கை கத்திற்று
கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு
ஓடி ஒளிகிறாள் ஞானாட்சரி கனவுக்குள்.
சேதி சொன்னக் காக்கையைப் பார்க்கப்
பெண்கள் வானத்தைப் பார்க்கிறார்கள்.
மண்ணில் விழவில்லை காக்கையின் நிழல்.”

எந்தக்காலகட்டத்திலும் இது போன்ற நம்பிக்கைகள் இருந்துகொண்டுதான் இருக்கும் என்பதைச் சொல்வதாக இக்கவிதை அமைந்துள்ளது.

காக்கை கரைவதை கவனித்து விருந்து வருவதை கணிப்பது, குறுக்கே போகும் பூனைக்கு மனத்தடை ஏற்பட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவது, பால்காரர் எதிரே வருவதற்காகக் காத்திருப்பது, நிறைகுடத்துடன் எதிரே வருகிற பெண்ணுக்காக மகிழ்வது, “என்னைப்பார் யோகம் வரும்” என்கிற கழுதைப்படத்தை வாசலில் மாட்டிவைப்பது, வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் பொழுது கால் இடறிவிட்டால் அல்லது தாழ்வாரத்தில் தலை தட்டினால் சற்றுநேரம் அமர்ந்து நீர் அருந்திச் செல்லுதல், நல்லகாரியமாகக் கிளம்பும் பொழுது பக்கத்து வீட்டிலிருக்கும் குறிப்பிட்ட யாரையேனும் பார்ப்பதைத் தவிர்ப்பது, குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நிறத்தில்  உடை உடுத்திக்கொள்வது, கெவுளி கேட்கும் திசை சார்ந்து சில முடிவுகளை எடுப்பது அல்லது ஒத்திவைப்பது என எண்ணற்ற சகுனங்களை அறிந்தும் அறியாமலும் வாழ்நாளில் ஒருமுறையேனும் கடைபிடித்துவிடுகிறோம்.

ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக சகுணம் பார்ப்பது என்பது நம்மிடையே  தொன்றுத்தொட்டு இருந்துவரும் பழக்கமாகும். நல்லகாலம், ராகுகாலம், எமகண்டம், வளர்பிறை, தேய்பிறை என நாளும், கோளும் பார்ப்பது தவிர வழியில் எதிர்படும் பறவைகள், மிருகங்கள், மனிதர்களைக் கொண்டு சகுணத்தை அனுமானிப்பதும் உண்டு. இவ்வாறு நிமித்தம் பார்ப்பதில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பண்பாடு சார்ந்து வேறுபாடு இருக்கிறது. ஓரிடத்தில் கெடுதலின் அம்சமாக கருதி வெறுக்கப்படுவது பிறிதொரு இடத்தில் நன்மையின் நிமித்தமாக வரவேற்கப்படுவதும் உண்டு. உதாரணமாக தமிழ்நாட்டில் திருநங்கைகளை மனிதராகக்கூட மதிக்காமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். வடநாட்டில் மார்வாடிகளும், பனியாக்களும் பிறந்த குழந்தையை அவர்களிடம் கொடுத்து ஆசீர்வதிக்கச் செய்வார்கள்.

அ.முத்துலிங்கத்தின் ராகுகாலம் என்கிற கதையில், ஆப்பிரிக்க நாட்டிற்கு பணிநிமித்தமாகச் செல்கிற ஒரு தம்பதியரிடமிருந்து அந்த நாட்டின் ஓட்டுனர், தமிழ்நாட்டில் கலாச்சாரமாகவே மாறிவிட்ட நல்லநேரம், ராகுகாலம், கந்தசஷ்டி, சைவ உணவு, திருநீறு, புரட்டாசி சனி எல்லாமும் கற்றுக்கொள்கிறான். தம்பதியர் மாற்றலாகிச் சென்றுவிடுகிறார்கள். இவன் வேறு இடத்தில் வேலைக்கு முயற்சி செய்கிறான். ராகுகாலத்தில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டதால் அவன் போகவில்லை என்கிறான். அ.முத்துலிங்கத்தின் கதைகள் வெவ்வேறு நாட்டின் கலாச்சாரச்சூழலில் உள்ள நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் பற்றியும் கலாசாரக்கலப்பின் காரணமாக நிகழ்கிற விநோதங்களையும் பேசுபவை. தன்னுடைய வாழ்வியல் நிலை, சமனுறாத பலசந்தர்ப்பங்களில் கடவுளையும் நிமித்தங்களையும் நம்பத் தொடங்கிவிடுகிற மனம் என்பது எல்லா நிலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. ஒரு நிலத்திலிருந்து வேறு ஒரு நிலத்திற்குப் பரவுகிற பல்வேறு கலாச்சாரங்களில் இம்மாதிரியான விஷயங்களுக்குத்தான் முதலிடம் இருக்கிறது.


துருக்கி நாட்டில், தீமைகளை விலக்குவதற்கான நம்பிக்கையின் அடிப்படையில்  வாசலில் கட்டித் தொங்கவிடுகிற நீலநிறகண் போன்ற பீங்கான் தாயத்து சென்னையின் கடைவீதிகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. துருக்கி தேசத்திற்கும் சென்னைக்கும் உள்ள தூரத்தை இந்த நீலவண்ணத் தாயத்து இல்லாமல் செய்தது போலவே, உசிலம்பட்டியின் உட்கிடைக் கிராமமான அத்திப்பட்டியிலுள்ள மிகச்சிறிய உணவகத்தில் கல்லாவுக்கருகே சீனாவின் சிரிக்கும் புத்தர் சிலையை பார்க்க முடிகிறது. செல்வம் சேருமெனில் எந்த நாட்டின் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. வேறு எதில் கலாச்சாரம் ஒன்றுபடுகிறதோ இல்லையோ சகுனங்களும் அதுசார்ந்த நம்பிக்கைகளும் எந்தநிலத்தைச் சேர்ந்தவருக்கும் பொதுவாகிறது.


பெண்ணின் தனிமை ஏகாந்தமாக விரிந்திருந்த காலத்திலிருந்து இன்றைய காலமானது வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்திருக்கிறது. அப்பொழுது இருந்தது பொற்காலம் என்றோ இப்பொழுது அதுபோல இல்லை என்றோ சொல்வது  நோக்கமில்லை. ஆனால் வெளியே சென்றவன் எப்போது திரும்புவான் எனத்தெரியாத காலத்தில் அவர்களுக்குக் கிடைத்த பரவசம் இப்போது சற்று மட்டுபட்டிருக்கிறது. தொலைத்தொடர்பு சாதனங்கள் எதுவுமற்ற காலத்தில் அவர்களிடமிருந்த பதற்றம் வேறுவிதமானது. மேலும் முன்பைவிடவும் இக்காலத்தில் வெளியே செல்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பதற்றத்தின் அளவு மிகையாகியுள்ளது. இப்போது நிமிடத்திற்கு ஒருமுறை இருவருமே தங்கள் இருப்பை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள்.

ஞானக்கூத்தனின் “காக்கை” என்கிற தலைப்பில் உள்ள மற்றுமொரு கவிதையில் “ஒருமுறை வந்த காக்கை தான் மறுமுறையும் வந்ததா எனவும் தன்னியல்பில் பறந்துகொண்டிருக்கிற காக்கை இப்பொழுது  நவீன உலகத்தைப் பழகிவிட்டதாகவும், காக்கையை யாரும் முழுதாய் பார்த்துவிட முடியாது எனவும் சொல்கிறார். சேதி சொல்வதற்காகப் பறந்து வந்த காக்கை ஒரு வீட்டிலிருந்து சிறிய கரண்டியைத் தூக்கிச் செல்கிறது, பதிலாக வேறு ஒரு வீட்டிலிருந்து பெரிய கரண்டியைப் போடுகிறது. குச்சிகளையும் வைக்கோலையும் தூக்கிப்பறந்த காக்கை இப்போது சிறிய இரும்புக் கம்பிகளைத் தூக்கிக்கொண்டு பறக்கின்றன” என்கிறார். காக்கை மனித வாழ்விடத்திற்கு  மிக நெருக்கமாக வசிக்கிற ஒரு பறவை. இப்பொழுதும் அவ்விதமாகவே இருக்கின்றன. நமக்கான சேதியைச் சொல்வதற்கும் அவை இப்பொழுதும் தயாராக இருக்கலாம். ஆனால் அவற்றின் குரலைக் கேட்கிற இடத்தில் நாம் இல்லை.

எந்த ஒன்றிற்காகவும் அல்லது யார் ஒருவருக்காகவும் காத்திருக்கப் பொறுமையற்ற அவசரத்தை மாநகர போக்குவரத்தில் சமிக்கை மாறுகிற சிறிய கணத்தில் உணரமுடியும். சகுனங்கள் பார்ப்பதை இன்றைக்கு பலவிதங்களில் தீவிரப்படுத்தியிருக்கிற அதே ஆட்கள்தான் காத்திருப்பு கணத்தினை நவீன தொலைத்தொடர்பு கருவிகளின் உதவிகொண்டு  சிதைக்கிறார்கள். செல்பி கலாச்சாரம் பெருகியிருக்கும் இக்காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல் வந்த ஒரு புகைப்படம், வேலையிலிருப்பதாக கணவன் சொல்கிறான், நம்பாத மனைவி செல்பி எடுத்து உடனே அனுப்பச் சொல்கிறாள். அவனும் புகைப்படம் எடுக்கிறான். அந்தக்கணவன் விமானத்தை ஓட்டுகிற பைலட். காற்றில் மிதந்தபடி ஒரு புகைப்படம் எடுக்கிறான். நகைச்சுவையாக அனுப்பப் பட்டிருந்தபோதிலும் அந்த நிலை அவனுக்கு துயரமானது. நிமிடத்திற்கு ஒருமுறை தன்னுடைய இருப்பை மனைவியிடம் நிரூபிக்கத் தடுமாறி, தன்னுடைய சமன் இழந்து அலைபேசியில் சார்ஜ் போய்விட்டது எனப் பொய் சொல்கிற ஆணும், தாளமுடியாமல் அலைபேசியைத் தூக்கியெறிந்துவிட்டு காணாமல் போய்விட்டது எனச் சொல்பவர்களும் இன்றைக்குப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் ஆண், பெண் உறவுக்குள் பதற்றத்தை மிகைப்படுத்தியுள்ளன. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளத் துணியாத கடவுச்சொல் அவர்களுக்கான மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கணவன் யாரோடு பேசுகிறான், அவனுடைய பதிவுகளில் எந்தப் பெண்ணெல்லாம் விருப்பக்குறியிடுகிறார்கள் என ஒரு பெண் ஆராய்ந்து கொண்டிருப்பது போலவே கணவனும் அவனுடைய மனைவியை அவளறியாமல் தொடர்கிறான். மாயவலையால் பின்னப்படுகிற ஒரு உலகத்தினுள் அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் காத்திருப்பதென்பது மனதின் திடத்தைக் கலைக்கும்படியாகவே உள்ளது. பணி நிமித்தமாகச் சென்றவன் திரும்ப வரலாம் அல்லது வராமலேயே போய்விடலாம் என்றிருந்த காலத்தின் தவிப்பு ஒருவகையில் இருவருக்குமான அன்பினை வலுப்படுத்தியது. இன்றைய காலகட்டத்தின் தவிப்பானது அதனுடைய இயல்பான பரவசத்தை இழந்திருக்கிறது.

பொருள்தேடிப் பிரிந்து சென்ற ஆண் திரும்பிவரும் பொழுது அவனும், அவனை எதிர்நோக்கியிருக்கும் பெண்ணும் தங்களை ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுப்பதற்காக காத்திருப்பது வாழ்விற்கான அழைப்பை அவர்களுக்குள் உணர்த்திக் கொண்டிருந்தது. இந்த அழைப்பானது அதனுடைய இயல்பிலிருந்து  கலையாமல் இருப்பதையே இருவரும் இன்றளவும் விரும்புகிறார்கள். என்றபோதிலும் அவ்விதமாக இருக்க இருவராலும் இயலவில்லை என்பதே உண்மை.

ஆண்கள் பார்க்கிற சகுனங்களும் நிமித்தங்களும் பொருள் சார்ந்ததாக இருக்க, பெண்களுடையது அவளின் பிரியத்துக்குரியவர்களின் அண்மை சார்ந்ததாக இருக்கிறது. அவன் சார்ந்த வாழ்வியலுக்கான சூழலையே அவள் திரும்பத் திரும்பக் கட்டமைக்கிறாள். தன்னை எப்பொழுதும் இயற்கைக்கு மிக அருகில் வைத்துக்கொள்ள பெண் நினைக்கிறாள். பறவைகளையும் பல்லிகளையும் தனக்கான நல்ல சொல்லை கொண்டுவருவதாக நம்பிய காலத்தின் ஏகாந்தத்தை ஒரு பெண் இப்போதும் விரும்புகிறாள். இயற்கையோடு இணைந்த வாழ்வில் மூடநம்பிக்கையாக சில செயல்பாடுகள் இருந்தபோதிலும் அவை மனதின் சமன் குலைக்காதவை என்பதால் இயற்கையின் அசைவுகளிலிருந்து வருகிற சேதி இன்றைக்கும் அவளுக்கு வேண்டியதாக இருக்கிறது. பிரிவு தன்னுடைய பரவசத்தை இழந்திருப்பது போலத் தோன்றுகிற இக்காலக்கட்டத்திலும் அதனை மீட்டெடுக்கும் விதமாக இயற்கையிடமிருந்து கிடைக்கிற சேதிகளை உணர முயலுகிறவளாக பெண்ணே இருக்கிறாள்.


குறுந்தொகை:210, பதிற்றுப்பத்து:ஆறாம் பத்து: 10 பாடல்கள், புறநானூறு:278 மொத்தம்: 12

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..

37. பேய்மகள் இளவெயினியார்:


ஒரு பெண் அமைதியை விரும்புகிறாள்:


தண் பொருநைப் புனல் பாயும்…”


நாடு பிடிக்கவும் தனது வீரத்தைப் பறைசாற்றவும் போர்செய்வது ஆணுக்கு விருப்பமாக இருக்கிறது. ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் தான் ஆயுதம் எடுப்பதையோ, தாய் என்றவகையில் தன் குழந்தையின் கைகளில் போர்க்கருவிகள் திணிக்கப்படுவதையோ ஒருபெண் விரும்புவதில்லை. தாய்நாட்டைக் காப்பதற்காக முன்னெடுக்கிற போர்களில் சிலசமயங்களில் பெண்களும் குழந்தைகளும் பங்குபெற்றாலும்கூட அதை அவளது ஆழ்மனம் விரும்புவதில்லை. பெண்களின் அமைதி, மகிழ்ச்சி, காதல் ஆகியவற்றை போர் அழித்துவிடுகிறது.குழந்தைகளின் விளையாட்டையும் பால்யத்தையும் காணாமல் ஆக்கிவிடுகிறது. உறவுகளைத் தொலைத்து மனிதர்களை நிர்கதியாக்கிவிடுகிறது. எனவேதான் பெண்கள் ஒருபோதும் போரை விரும்புவதில்லை.
_________________________________________________________________________________ 

கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த எரின்னா (Erinna) என்கிற பெண்கவிஞர் கிரேக்கத்தின் டிலோஸ் என்கிற தீவைச் சேர்ந்தவர். இவர் கிரேக்கப் பெண்கவிஞர் சாப்போவின் கவிதாமண்டலத்தில் இருந்தவர். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த டயோனிசியஸ் என்கிற கவிஞர், “இருளின் நிழற் சிறகுகள் ஒருநாளும் அவள் பெயர் மீது மையிருட்டைச் சேர்க்காது,” எனப் பாராட்டியுள்ளார். எரின்னா எழுதிய ஒருசில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பௌஸிஸ் என்கிற அவளுடைய தோழியின்  மறைவிற்கான இரங்கற்பா ஒன்று இவரது அடையாளமாக அறிஞர் சி.எம். பௌராவின் மொழியாக்கத்தில் கிடைத்திருக்கிறது.

“இரங்கத்தக்க பெளஸிஸ்!
இந்த இரங்கற்பாவைத் துயரப்பெருக்கின் புலம்பலாக அழுது தீர்க்கிறேன்.
ஒரு காலத்தில் நாம் ஆடிப்பாடி மகிழ்ந்ததெல்லாம்
இன்று எரிதழற் சாம்பலாகி விட்டது.
கவலை என்பதையே அறியாமல்
பொம்மைகளை இளம் மனைவியர்களைப் போல்,
நாம் சிறுமிகளாக இருந்த போது அணைத்துக் கொண்டிருந்தோம்.
பொழுது விடிந்தும் கம்பளி நெசவு செய்ய வந்த தொழிலாளர்களுக்கு
உன் அம்மா கம்பளி கொடுப்பாள்.
இறைச்சிக்கு உப்பு கொண்டுவர உன்னை அழைப்பாள்.
நமது குறும்புத்தனத்தைக் கண்டு உன் அன்னை,
பேய் பூதக் கதைகளைக் கொண்டே பயமுறுத்துவாள்.
பெரிய காதுகளைக் கொண்ட சின்னஞ்சிறு பேய்கள்,
நான்கு கால்களுடன் பல தோற்றங்களில் வரும்.
இந்த கதைகளையெல்லாம்,
உன் அன்பனுடன் மஞ்சத்தில் சேர்ந்த பிறகு, நீ மறந்திருப்பாய்.
அப்ரோதிதே உனக்கு இந்த மறதியை அளித்திருப்பாள்.
உன்னுடைய இறுதிச் சடங்குகளை
நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.
உனக்குத்தான் தெரியுமே,
நான் சவத்தைப் பார்க்கக் கூடாதுதென்று.
என்ன செய்வது? இப்பொழுது, கண்ணீரும் கம்பளையுமாய்
வெட்கமின்றி அழுகிறேன்.”

தோழிக்காக எழுதிய இரங்கற்பா எனினும் பெண்களின் வளரிளம்பருவ விளையாட்டுகளும் அந்தநாட்களில் அவர்களின் மகிழ்வும் இந்தப்பாடலின் அடையாளமாகியுள்ளன. எந்தக் காலகட்டத்தில், எந்த நிலத்தில் தோன்றியது என அறியவியலாத மனிதர்களின் பல செயல்பாடுகளில் ஒன்றுதான் பொம்மைகளை உறவுகளாக உருவகப்படுத்தி விளையாடுகிற பெண்களின் மனமும். பெண்களுக்கும் பொம்மைகளுக்கும் இடையே இருக்கிற உணர்வு என்பது ஆண்களாலோ அல்லது வேறு புறச்சூழலினாலோ உருவாக்கப்பட்டதெனக் கருதிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்களின் அகமானது வேறுவிதமாகச் செயல்படுகிறது. தன்னை ஒரு ஆணாகக் கருதி, ஒரு ஆணிடமிருந்து தான் பெற விரும்புகிற அணைப்பை பொம்மைகளுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என எரின்னாவின் இந்தப் பாடலில் உணரமுடிகிறது. “அப்ரோதிதே” என்கிற கிரேக்க காதல்தேவதை இந்தப்பெண்களின் இளம்பருவ விளையாட்டுக்களை காதலர்களுக்கு மடைமாற்றம் செய்கிறாளென எரின்னா நம்புகிறாள்.

மரப்பாச்சிகளாலும், பாவை விளையாட்டுகளாலும் நம்முடைய நிலத்துப்பெண்களும் தங்களுடைய இளம்பிராயத்தைக் கடந்து வந்திருக்கிறார்கள். சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் புகழ்ந்து பேய்மகள் இளவெயினியார் பாடிய புறநானூற்றுப் பாடல், 

அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்,
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ், விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே;
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளை வல்பாண் மகனும்மே.
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.”

“மென்மயிர் திரண்ட முன்கைகளையும் தூய அணிகலன்களையும் உடைய இளமங்கையர், மணலால் சிறுவீடு அமைத்து, வண்டல் மண்ணால் பாவை வைத்து, அதற்கு கோட்டுப்பூச்சூடி விளையாடி மகிழ்வர். குளிர்ந்த பொருநை நதியில் பாய்ந்து நீராடி மகிழ்வதற்கு ஏற்ற இடமாக வஞ்சி மாநகரம் விளங்குகிறது. அத்தகைய நிலத்தில் புலவர்கள் பாடுவதற்கு ஏற்ற வெற்றி வேந்தனான மன்னன், பகைவரின் அரணை அழித்து, வலிமையுடன் எதிர்த்த பகைவர்களைப் புறங்காட்டி ஓடுமாறு செய்து வெற்றி பெற்றான். அவ்வேந்தனின் வீரத்தைப் பாடிய பாடினிக்கு பல கழஞ்சு எடையளவு கொண்ட பொன்னால் செய்யப்பெற்ற அழகிய அணிகலனானது பரிசாகத் தரப்பட்டது. இசைந்து பாடிய பாணனும் ஒளிவீசும் நெருப்பில் இட்டுச்சேர்த்து, வெள்ளிக்கம்பியால் தொடுக்கப்பட்ட பொற்றாமரை மாலையினைப் பரிசாகப்பெற்றான்.”  

‘தண் பொருநை’ என்கிற ஆறு வஞ்சிநகரில் கருவூரைச் சார்ந்து செல்வது. இவ்வாற்றாங்கரை மணலில் மகளிர் பாவை செய்து விளையாடினர். பாவைக்குச் சூட்டுதற்காகப் பூவும் கொய்தனர். நீரிலாடினர். மணல் மட்டுமன்றி  பலவகைப் பொருட்களினாலும் மகளிர் பாவை செய்து விளையாடுவர். இளமகளிர் தங்களுக்கான விளையாட்டுகளில் மகிழ்ந்திருக்கும் படியான வாழ்வியல் சூழலை இந்தச் சேரமன்னனின் ஆட்சி வழங்கியிருக்கிறது.

ஒரு நாட்டின் அரண் வலிமையுடையதாக இருப்பின் அந்த நாட்டின் மக்கள் மகிழ்வுடையவர்களாக இருக்கிறார்கள். இந்த அரசன் எதிரி நாட்டினை புறமுதுகிட்டு ஓடச் செய்திருக்கிறான். எதிரி நாட்டின் அரணை அழித்திருக்கிறான். இவனைப் புகழ்ந்து பாடிய பாடினிக்கும் பாணனுக்கும் மன்னன் வழங்கியிருக்கும் பரிசில்களின் மூலம் இவனது நாட்டின் வளமையை உணரலாம். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் நாட்டின் சூழல் பாதுகாப்பையும் மகிழ்வையும் தருவதாக அமைந்திருக்கிறது என்பதையே இந்தப்பாடலின் மூலமாக அறியமுடிகிறது.

போரின் நிழல்படியாத வலிமைமிக்க நாட்டின் மக்களுக்கும், போர்ச்சூழலின் பிடியில் சிக்கியிருக்கும் நாட்டின் மக்களுக்குமிடையே இட்டுநிரப்பவியலாத  மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. தன்னுடைய நாட்டின் அரணைக்காக்க இயலாமல் புறமுதுகிடுகிற நாட்டின் மக்கள் தங்களுடைய மகிழ்வை இழந்தவராவார். அந்த நாட்டின் குழந்தைகள் தங்கள் விளையாட்டினை இழந்திருப்பார்கள். பெண்கள் கண்ணீருக்கு மட்டுமே உரியவராவார். மீட்கவியலாத கடந்தகாலத்தின் நினைவில் துயருற்றிருப்பர்.

போர் என்பது எந்தக்காரணத்திற்காக நிகழ்த்தப்பட்டாலும் அதில் நெறிமுறை அல்லது ஒரு நீதியான நிகழ்வு என்பதே கிடையாது. போர் என்பது தர்மம் இல்லை. போர்தர்மம் என்று எதாவது இருப்பதாகச் சொல்வதெல்லாம் அதர்மம்தான். எனவே எந்த தர்மமும் போர்தர்மம் ஆகாது. எவ்வகையான நிலைபாட்டிலும் போர் என்பதை நியாயப்படுத்த இயலாது. ஏனெனில் போரில் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிற, பலவீனர்களாகப் பிரதானப்படுத்தப்படுகிற பெண்களும் குழந்தைகளும்தான் போரின் விளைவுகளினால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.


போரை அல்லது போர்கால துரோகத்தை அல்லது உள்நாட்டுக் கலவரங்களை மையமாகக் கொண்டு உலகம் முழுக்க திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.  அத்தனை திரைப்படங்களுமே போரினால் பாதிக்கப்படுகிற குழந்தைகள் மற்றும் பெண்களை சிறிதளவேனும் அடையாளம் காட்டுவதற்கு முயலுகின்றன.

அமெரிக்கன் ஸ்னைப்பர் (American Sniper) என்கிற திரைப்படத்தில் அமெரிக்கப் படைவீரர்களின் மீது எறிவதற்காக கையாலே எறியப்படும் வெடிகுண்டு ஒன்றினை தன்னுடைய ஏழு அல்லது எட்டுவயது மகனிடம் கொடுத்து அனுப்புவாள் ஈராக் தேசத்தின் ஒரு அம்மா. அந்தச் சிறுவனும் அவனது அம்மாவும் அடுத்தடுத்த கணங்களில் ஒரு மறைதாக்குதலில் பலியாவார்கள். எதற்காக அனுப்பப்பட்டார்களோ அதனை அவர்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுகிறது. அந்தத் தாயையும் குழந்தையையும் கையெறி குண்டினைக் கையிலெடுக்கச் செய்தது எதுவாக இருக்க முடியும்.  தன்னுடைய நாட்டின் அரண் சிதைக்கப்பட்டு, சமன் குலையும்பொழுது குழந்தைகளும் பெண்களும் யுத்தங்களில் பங்கெடுக்கிறார்கள். போர் என்பது ஆண்களுக்கானது. நாடுபிடிக்க போர்செய்வது ஆணின் விருப்பமாக இருக்கிறது. நாடுபிடிக்கவோ, எல்லைகளை விஸ்தீரணப்படுத்தவோ ஆயுதத்தினை பெண் எடுப்பதில்லை. தன்னுடைய குழந்தையிடமும் கொடுப்பதில்லை. தாய்நாட்டைக் காக்கிற யுத்தங்களில் குழந்தைகளும் ஆயுதங்களைக் கையிலெடுகிறார்கள்.   

ஹோட்டல் ருவாண்டா என்கிற ஆப்பிரிக்கத் திரைப்படம் ஹுட்டு, டுட்சி என்கிற இருபிரிவினரிடையே நடக்கின்ற உள்நாட்டு யுத்தத்தினை மையமாகக் கொண்டது. இந்தத் திரைப்படத்தில், முதல்கணம் வரையில் வேறுபாடுகள் ஏதுமற்று இருந்தவர்கள் பகையாகிப்போவதைக் காணமுடியும். வெட்டி வீழ்த்தப்பட்ட உடல்களால் அந்த நகரமே நிறைகிறது. தன்னை எவ்விதமாகவும் காத்துக்கொள்ள இயலாத பச்சிளம் குழந்தைகள் கூட செஞ்சிலுவை இயக்கத்தினரின் துணையுடனே எல்லையைக் கடக்க முடிகிறது. குழந்தைகளும், பெண்களும், கன்னியாஸ்திரிகளும் சொந்தநிலத்தில் அந்நியமாக்கப்பட்டு எல்லை கடந்து செல்வதற்காக அவர்கள் படுகிற  அவஸ்தையினை காணும்பொழுது போர் என்பது எவ்வகையிலும் தர்மம் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்லாம். திரைப்படத்தின் ஒரு காட்சியில் செஞ்சிலுவை அமைப்பைச் சேர்ந்த ஒருபெண், “டுட்சி இனக்குழந்தைகளை அழிப்பதன் மூலம்  அடுத்த தலைமுறையே இல்லாது போய்விட செய்வதுதான் ஹூட்டுக்களின் குறியாக இருக்கிறது“ என்பார். இது ஒரு திரைப்படத்தின் வசனமாக மட்டுமே கடந்து சென்றுவிட இயலாது. ஒரு இனத்தினை அழிப்பதற்காக குழந்தைகளை அழிப்பதன் வழியாகவும் பெண்களைச் சிதைப்பதன் வழியாகவும் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன. உலகம் முழுக்க நடைபெற்ற, நடைபெறுகிற அத்தனை யுத்தங்களிலும் பெண்களும் குழந்தைகளுமே பாதிக்கப்படுகிறார்கள். இனி நடைபெறப் போகிற யுத்தங்களும் இவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ளப் போவதில்லை.

சிங்களப்படையினரால் தமிழ் மக்கள் இன அழித்தொழிப்பு செய்யப்பட்ட பொழுது, தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட கணத்திற்குச் சற்று முன்பாக ரொட்டி ஒன்றை சாப்பிடுகிற முதல் புகைப்படமும், உடல் முழுக்க குண்டு பாய்ந்து இறந்துகிடக்கும் சிறுவனின் அடுத்த புகைப்படமும் போர்நிலத்தின் மிகஉச்சமான  துரோகத்தின் அடையாளமாகியுள்ளது. தமிழனாக இருக்கிற ஒவ்வொருவருக்கும் என்றென்றைக்கும்  நீங்காத துயரம் படிந்த அடுத்தடுத்த கணங்களின் புகைப்படங்கள் இவை.  

வியட்நாம் பிரச்சினை எனக் குறிக்கப்படுகிற இரண்டாவது இந்தோ சீனப்போர் 1965 முதல் 1975 ஏப்ரல் 30 வரை நடைபெற்றது. தெற்கு வியட்நாம் படைவீரர்கள் பின்தொடர ஓடிவருகிற குழந்தைகளை டெனிஸ் சாங் ( Denise Chong ) என்பவர் புகைப்படமாக எடுத்திருப்பார். அந்தக் குழந்தைகளின் மத்தியில் நிர்வாணமாக ஓடிவருகிற பெண்குழந்தை போரின் அவலத்தை சொல்கிறதாக இன்றளவும் குறிப்பிடப்படுகிறது.  April 2, 1963 இல் பிறந்த “Phan Thi Kim Phuc  என்கிற அந்தப் பெண்குழந்தை வளர்ந்து 1997 முதல் தன்னுடைய பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி போரில் பாதிக்கப்படுகிற குழந்தைகளுக்கு உதவி செய்துவருகிறார்.

தன்னுடைய குழந்தைகள் கையில் ஆயுதத்தைக் கொடுத்தனுப்புகிற தாய் தமிழ்நிலத்திற்குப் புதியதல்ல. என்றபோதிலும் குழந்தைப்பருவ விளையாட்டுகளை விட்டெறிந்துவிட்டு யுத்தத்திற்கு தயாராகும் நிலையினை எந்தத்தாயும் விரும்புவதேயில்லை. ஒருதாய் தன்னுடைய மகனை  அவனுடைய எந்தப்பருவத்திலும் குழந்தையாக மட்டுமே பார்க்கிறாள். வாழுகிற சூழலில் அமைதியை விரும்புகிறவளாக பெண் இருக்கிறாள்.

பெண்களின் மென்மை, மகிழ்வு, காதல் ஆகியவற்றை போர் அழிக்கிறது. குழந்தைகளின் விளையாட்டையும், குழந்தைமையும் காணாமல் ஆக்குகிறது. குடும்பம், உறவுகள், நட்புகள் சார்ந்த பல்வேறு அகவயப்பட்ட உணர்வுகளை மரத்துப் போகச்செய்து போர் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. தன்னுடைய நாட்டைக் காக்கவும், தன்னுடைய இன மக்களுக்காகவும், பிற நாட்டு அத்துமீறல்களை தடுத்து நிறுத்தவுமே தன்னுடைய பிள்ளைகளைப் போருக்கு அனுப்புகிறாள். எல்லையை விரிவுபடுத்துவதற்காவும், பிறநாட்டுப் பெண்களுக்காகவும் நிகழ்த்தப்படும் போர்களை பெண் விரும்புவதில்லை.

யுத்தநிலத்தின் ஒவ்வொரு சிறு அசைவும் குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தினை விளைவிக்கிறது என்பதே என்றைக்கும் மாறாத உண்மை. ஈழத்துப் பெண்கவிஞர் சிவரமணியின் “யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்” என்கிற தலைப்பிலுள்ள கவிதை, போர்ச்சூழலில் குழந்தைகள் இழந்த குழந்தைமையைச் சொல்கிறது.

“யுத்தகால
இரவொன்றின் நெருக்குதல்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.

ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்,
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாத போயினர்.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்.

அதன் பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக் கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும் 
கேள்வி கேட்காதிருக்கவும்
கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது
மெளனமாயிருக்கவும்,
மந்தைகள்போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.

தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.

யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
‘வளர்ந்தவர்’ ஆயினர்.

தன்னுடைய குழந்தை அவனுடைய எந்தவயதிலும் போர்க்கருவியை கையிலெடுப்பதை ஒரு தாய் விரும்புவதில்லை. என்றபோதிலும் போர் என்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. அது எந்தக்காலத்திலும், எந்த நிலத்திலும் பெண்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட செயல்களையே நிகழ்த்துகிறது.


இவர் பாடியதாக புறநானூறில் ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது.(புறம்: 11)