Wednesday 14 September 2016



பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 

20. கழார்க்கீரன் எயிற்றியனார்:











ஒரு பெண் தூது அனுப்புகிறாள்:


“நெஞ்சு நெகிழ்ந்து அவிழ...”


சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம் ஆகியவற்றில் தூது என்பது எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் தனிப்பிரிவாகவே விளங்கியது. இன்றைய நவீனகாலத்தில் தொழில்நுட்பவளர்ச்சி தூதினை வேறு ஒரு வடிவத்தில் மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலும் உடனிருக்கிற நண்பர்களின் வழியாக தனது எண்ணத்தைச் சொற்களாக்கி அனுப்புற செயல் ஆண்களுக்கே கைகூடி வந்திருக்கிறது. ஆண்களைப்போல தன்னுடைய நிலையை அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்துகொள்ள பெண்ணால் முடிவதில்லை. மேலும்  பிரிவுக்காலத்தில் பெண் சொற்களற்றுப் போகிறாள். அதனால் வேறு எதன் வழியாகவாவது தன்னுடைய பிரிவுத்துயரை அவனிடம் உணர்த்திவிட முயலுகிறாள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வழியனுப்புதலும்  விடைபெறுதலும் அத்தனை எளிதானதா, மேலும் இவை  இரண்டும் ஒன்றா என்கிற இருவினாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக இன்று காலையிலேயே மனதிற்குள் தோன்றியது. இக்கேள்விகள் எங்கிருந்து தொடங்கியது என நினைத்துப் பார்த்தேன். அண்மையில் நண்பர் ஒருவரின் பிள்ளைப்பேற்றினைப் பார்த்து வாழ்த்துச்சொல்ல ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அந்த மருத்துவமனை கத்தோலிக்கக் சகோதரிகளினால் நடத்தப்படுகிறது. அவ்வளாகத்தினுள் சிறிய தேவாலயம் ஒன்று உள்ளது. அங்கே நிகழ்கிற ஒவ்வொரு குழந்தைப்பிறப்புக்குப் பிறகும் தாயையும் குழந்தையும் தேவாலயத்தில் வைத்து ஜெபம் செய்து வாழ்த்தி வழியனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குழந்தையைப் பார்க்க நான் சென்றிருந்த சமயம் தாயும் குழந்தையும் நலமுடன் இருக்க பிராத்தனை செய்து  கொண்டிருந்தார்கள். ஒரு புதிய உயிரை இவ்வுலகில் வாழ்வதற்காக வழியனுப்பி வைக்கிற சகோதரியின் முகத்திலிருந்த மகிழ்வும் அவர்களிடம் விடைபெறுகிற இளம்தாயின் முகத்திலிருந்த பிரசவநோவுடன் கூடிய பரவசமும் சற்றுத்தள்ளி பார்வையாளராக நின்றிருக்கும் என்னிடமும் இயல்பாக வந்துசேர்ந்தது. அவர்கள் கிளம்பிச் சென்றபின்பு என்னுடைய வாகனத்தின் வருகைக்காக சிறிதுநேரம் காத்திருந்தேன். அப்போது மருத்துவமனையின் தீவிர நோயாளிகள் பிரிவில் சற்றுமுன்பாக ஒரு பாட்டியம்மா இறந்து போயிருப்பார் போல, அவரது உடல் வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டிருந்தது. குழந்தையை வழியனுப்பி வைத்த அதே சகோதரி மரித்த பெண்ணின் உடலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்து வழியனுப்பிக் கொண்டிருந்தார். முந்தின கணத்தின் மகிழ்வு கரைந்து, எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத தோற்றத்தில் அந்த சகோதரியின் முகம் உறைந்திருந்தது.  

பிறப்புக்கும் மரணத்திற்கும் இடையே எத்தனை விதமான வழியனுப்புதல்களையும் விடைபெறுதல்களையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். முதல்முறையாக ஒரு குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்பொழுது அம்மாவும் கையசைத்து விடைபெறும் அக்குழந்தையும் மனதில் எப்பொழுதும் நீங்காத காட்சி. இதேபோல மகளைத் திருமணம் செய்து வழியனுப்பும் தகப்பனுக்கும் மகளுக்கும் இடையே கண்களால் நிகழ்கிற ஒரு விடைபெறுதல் ஒருபோதும் மறக்க இயலாத காட்சி. சமீபத்தில் என்னுடைய நெருங்கிய உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். நிச்சயம் செய்யும் சடங்குகள் அனைத்தும் முடிந்தபின்பு ஒரு அறையில் அந்த மணப்பெண்ணும் அவருடைய அம்மாவும் எதிரெதிரே அமர்ந்திருக்க, பக்கவாட்டில் நானும் மாப்பிள்ளைப் பையனுடைய அம்மாவும் அமர்ந்து, திருமண வீட்டிற்கே உண்டான கலகலப்புடன் பேசிக்கொண்டிருந்தோம்.  சிறிதுநேர உரையாடலுக்குப் பின்பு பெண்ணின் அம்மா நிலைத்தப் பார்வையுடன் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். வேறுபக்கம் திரும்பிப் பேசிக்கொண்டிருந்த அந்த மணப்பெண்ணும் அம்மாவின் பார்வை ஏற்படுத்திய ஏதோ ஒரு உணர்வினால் உந்தப்பட்டுத் திரும்பியவர் ஒரு நிமிடத்திற்கும் குறையாமல் அம்மாவின் கண்களுக்குள் உறைந்திருந்தார். அங்கே அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் “என்ன அம்மாவும் மகளும் கண்ணாலேயே பேசிக்கிட்றீங்க” எனக் கேட்டபின்பே அவர்கள் இருவரும் இயல்புக்கு மீண்டார்கள். அதுவரையில் தன்மகளை தன்னுடைய மகளாக மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டிருந்த அம்மாவுக்கு வேறு ஒருவீட்டிற்கு தன்னுடைய மகளை முழுமையாக கையளித்து விடைதருவதன் துயரம்தான் அது. இன்றுவரையில் அந்தக்காட்சி எனக்குள் அழியாதிருக்கிறது.

பொதுவாகவே விடைபெறுவது அல்லது விடைகொடுப்பது என்பது துயரம்  என்கிற அடிச்சரடு கொண்டே நெய்யப்படுகிறது. இரயில் நிலையங்கள் என்று சொன்னாலே ‘கையசைத்து நிற்கும்’ ஒரு காட்சி சட்டென உயிர்த்துவிடுகிறது. இரயில் என்பது உறவுகளின் அடிப்படையான பிரிவிற்கும் இணைவிற்கும் குறியீடாக இருப்பதாகவே எப்பொழுதும் தோன்றுகிறது. யாராவது ஒருவர் அவருக்குப் பிரியமான யாருக்கோ கையசைத்து விடை தரும்பொழுது தன்னுடைய மனதையும் இணைத்தே அனுப்புகிறார். விடைபெற்றுச் செல்பவரும் தன்னுடைய மனதை அந்த இரயில் நிலையத்தில் விட்டுச் செல்கிறவராகவே இருக்கிறார்.

ஞானகூத்தன் கடைசீப் பெட்டிஎன்கிற தலைப்பில் உள்ள கவிதையொன்று,

வண்டி புறப்பட நேரம் இருக்கிறது
இரயில் நிலையத்துக் கடிகாரத்தின் பெரியமுள்
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்கிறது
பிறந்தகம் போகும் புதுமணப் பெண்ணுக்கு
ஆரஞ்சு தோலுரித்துத் தருகிறான் மாப்பிள்ளை
தொட்டுக் கொள்கிற துவையல் பற்றாமல்
எஞ்சிய இட்லியோடு ஒருவன் ஓடுகிறான்
பெட்டிகள் வராத தண்டவாளத்தின்மேல்
நிலைய விளக்குகள் ப்ரகாசிக்கின்றன
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்ந்த முள்
ரெயிலின் புறப்பாட்டு நேரத்தைத் தொட்டது
சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில் நிலையத்தில்
சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது
இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?”

எந்த இரயில் நிலையத்திலும் மாறாத காட்சியென உறைந்திருக்கும் உறவு, பிரிவு, அதனுடைய துயரம் ஆகியவற்றை இந்தக்கவிதை பேசுகிறது. கடைசிப்பெட்டியின் பின்புறம் என்று சொல்வதன் வழியாக சொல்லவியலாத, பார்க்கவியலாத மறைக்கப்பட்ட அந்தரங்கமான உணர்வொன்றையும் அடையாளப்படுத்துகிறது. 

ஜெர்மனியில் பிறந்த அமெரிக்கப் புகைப்படக்காரரான ஆல்பிரட் ஐசென்ஸ்டாட் (1898 - 1995) இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலகட்டத்தில் ஜெர்மனியில் தன்னுடைய புகைப்படத்தொழிலைத் தொடங்கியவர். யுத்தக்காலத்தை ஒட்டி எடுக்கப்பட்ட இவரது 2500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பிரசித்தி பெற்றவை. இத்தாலியில் 1932 இல் நடைபெற்ற அடோல்ப் ஹிட்லர், பெனிட்டோ முசோலினி ஆகியோரின் முதல் கட்ட பேச்சுவார்த்தையை இவர்தான் படம் பிடித்தார். 1945 ஆகஸ்ட் இல் நடைபெற்ற V-J day (Victory over Japan day) நிகழ்வுக்காக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வைத்து இவர் எடுத்த ஒரு புகைப்படம் உலகளவில் சர்ச்சையை உருவாக்கியது. “வெள்ளை உடை அணிந்த செவிலியப்பெண் ஒருவரை அமெரிக்கக் கப்பல்படை வீரர் ஒருவர் முத்தமிடும் காட்சி” தான் அந்தப் புகைப்படம். இவரது பெரும்பாலான புகைப்படங்கள் யுத்தகளத்திற்குச் செல்லும்போது கணவன் மனைவி முத்தமிட்டு விடைப்பெற்றுக் கொள்கிற காட்சிகள் குறிப்பாக அவை இரயில் நிலையங்களில் வைத்து எடுக்கப்பட்டவை. கேமரா என்கிற கருவியாக தான் வரவில்லை எனவும் மனிதர்கள் மீதுள்ள விருப்பத்தினாலேயே அவர்களின் உணர்ச்சிகளைப்  புகைப்படம் எடுப்பதாக இவர் கூறுகிறார்.

ஒரு பயணம் தொடங்குகிற இடத்தில் மட்டுமல்ல, பயணத்தின் இடைவழியில் நின்று  செல்லும்பொழுது அந்த இரயிலில் பயணித்து நெடுந்தூரம் செல்கிற பிரியத்துக்குரிய ஒருவருக்காக தண்ணீர் பாட்டில், குளிர்பானம், பழங்களை கையில் வைத்து ஐந்து நிமிட சந்திப்புக்காகக் காத்திருப்பவர் பலர் உண்டு. அந்தக் குறுகியநேரச் சந்திப்பிற்காக இவரும் கூட போக்குவரத்து நெரிசல் கடந்து நெடுந்தொலைவு பயணித்து வந்திருப்பார். நின்று செல்கிற அந்த இரயில் நகர்ந்து செல்கையில் அவர்கள் இருவரையுமே இடமாற்றிவிட்டே செல்கிறது. வழியனுப்புகிறவர் பயணிக்கிறவராகவும், விடைபெற்றவர்  இரயிலடியில் காத்திருப்பவராகவும் இடமாற்றம் நிகழ்வதென்பது  இச்சூழலை உயிர்ப்புடையதாக்குகிறது.

கவிஞர் எஸ். தேன்மொழியின் ஒரு கவிதை இம்மாதிரியான தருணம் ஒன்றைப் பேசுகிறது.  

“மனம் ஒவ்வாதொரு
வழியனுப்புதலைத்
தந்துவிட்டு விரைகிறேன்

இன்னும் சிறிதுநேரம்
நின்றால்கூட
நம்வழிகள்
அடைபட்டுவிடும்

வாசிக்கமுடியா
ஒருகோடிக் கவிதையோடு
உணர்வின் சிலையென
நிற்கிறாய் அதே இடத்தில்

கடந்துபோகும் என் கண்கள்
வழியைப் பின்நோக்கி
உன்னிடத்தில் தேடுகின்றன

என் பயணத்தின்
தொடர்ச்சியான திரும்பலில்
காட்சி தந்த நீ
மறைந்துவிட்ட அந்த
முக்கியத் தருணத்தில்

என் வழிகள்
மனம் கனக்க  
நீ நின்ற புள்ளியில்
திரும்ப வந்து
சுழித்துக்கொள்கின்றன.”

ஒரு பெண்ணை இந்தச்சமூகம் உடலாகப் பார்த்தாலும் அவள் தன்னளவில் உடலே அல்ல. அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையே அலைந்து கொண்டிருக்கும் மனமாகவே  இருக்கிறாள். அவளுக்குத் தெரிகிறது, அவன் சூழலின் காரணமாகப் பிரிந்து செல்ல வேண்டியவன்தான் என, ஆனாலும் அவள் தடுமாறிக்கொண்டே இருக்கிறாள். பிரியத்தினால் கனிந்திருக்கும் மனதிலிருந்து மனம் ஒப்புதலோடு ஒரு வழியனுப்புதலை ஒருபோதும் தந்துவிட இயலாது.

குறிப்பிட்ட காலத்தில் திரும்பிவிடக்கூடும் என்கிற எண்ணத்தில் தலைவனை வழியனுப்புகிறாள் தலைவி. அவனோ வாடைக்காலத்திலும் திரும்பவில்லை என்றபோதும் அவன் பிரிந்து சென்றபொழுது அழாத தலைவியைப் பற்றி கழார்க்கீரன் எயிற்றியனார் என்கிற சங்கப்பெண்பாற்புலவர் ஒருபாடலில் தலைவி அவளுடைய மனம் உடன்பட்டு வழியனுப்பிவிட்டு அதன்பின்பு வருந்துவதாகச் சொல்கிறாள். 

“நாண்இல மன்றஎம் கண்ணே நாள்நேர்பு,
சினைப்பசும் பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
 
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
 
நுண் உறை அழிதுளி தலைஇய
 
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.
 

“வாடைக்காற்று வீசுகிற பருவம் தொடங்கியும் தலைவன் வராததால் அழுகிறாள். வாடைப்பருவம் எப்படித் தொடங்கியது என்றால், நுண்ணியதாக மழைத்துளியோடு கலந்து வாடைக்காற்று வீசுகிறது. இக்குளிர்காற்றின் நீர்த்துளி பட்டு, சூல்கொண்ட பச்சைப்பாம்புபோலத் தோற்றம் கொண்ட கரும்பின் திரண்ட அரும்பு மலர்கிறது. சூல்கொண்ட காதல் மலரவேண்டிய இத்தகைய வாடைக்காலத்திலும் தலைவன் இன்னும் திரும்பி வராததால் என் கண்கள் தானாகவே கண்ணீர் வழிய அழும்படியாக நாணம் இல்லாதவையாக இருக்கின்றன” எனத் தலைவி சொல்கிறாள். அவளுடைய ஆற்றாமை மிகுந்த உணர்ச்சியை அவள் கண்களின் மீது ஏற்றிச்சொல்கிறாள்.

சொல்லிச்சென்ற காலத்தில் திரும்பவியலாது போய்விடுகிறபொழுது, தனித்திருக்கும் தலைவி தன்னுடைய தோழியை அவனிடம் தூது அனுப்புவாள். தோழியையும் தூது அனுப்ப முடியாத நிலையில் தென்றல், மயில், கிளி, அன்னம், புறா, மான், முகில் என அவளின் புழங்குவெளியில் காண்பவற்றைத் தூதாக அனுப்பி தன்னுடைய நிலையை அவனுக்குச் சொல்ல விழைகிறாள். தலைவன் வரவு நிகழாத வாடைக்காலத்துத் தனிமையில் தவித்திருக்கும் கழார்க்கீரன் எயிற்றியனாரின் தலைவி அந்த வாடைக்கற்றையே தூதாக அனுப்புகிறார். அவரின் அகநானூற்றுப் பாடல்,  

விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத் 
தண்மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள்,
 
எமியம் ஆகத் துனிஉளம் கூரச்
 
சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழப்
 
பெருநகை உள்ளமொடு வருநசை நோக்கி

விளியும் எவ்வமொடு 'அளியள்' என்னாது 
களிறுஉயிர்த் தன்ன கண்அழி துவலை
 
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
 
குன்றுநெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை!
 
எனக்கே வந்தனை போறி! புனற்கால்

அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக், 
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
 
இனையை ஆகிச் செல்மதி;
 

வினைவிதுப் புறுநர் உள்ளலும் உண்டே.

“தலைவனின் வருகை இன்மையால் இறப்பதற்கு ஒப்பான துன்பத்துடன் தலைவி இருக்கிறாள். தலைவனை நினைத்து மெலிந்த தலைவி  கையில் உள்ள சில வளையல்களும் நெகிழ்ந்து விழும்படியாக இருக்கிறாள். தலைவன் வரவினை விரும்புகிற மனதுடன் இருப்பவளைக் காண்பவர்கள் இரக்கம் கொள்கிறார்கள். வானம்  முழங்க, குளிர்ந்த மேகம் மழைபொழிந்து தணிந்த கூதிர்காலத்தின் கடைசி நாளில் பலவகைப்பட்ட மலர்களும் குழைந்து தலைவியின் நெஞ்சத்தில் துன்பம் ஏற்படும்படியாக தனியாக விட்டுச் சென்றிருக்கிறான். களிரானது நீரை முகந்து சொரியும்பொழுது இடமெங்கும் மறைந்து போவதுபோல பனித்துளி அடர்ந்து விழ, தாமரை மலரும் கரிந்து போகிறது. இப்படிப்பட்ட முன்பனிக்காலத்துப் பாதியிரவில் குன்றுகளையும் நெகிழ்விப்பதுபோன்ற வாடைக்காற்றே, இவள் இரங்குதலுக்கு உரியவள் என்று கருதாமல், நீ என் ஒருத்தியை மட்டும் வருத்துகிற குறிக்கோளுடன் வந்தாயோ” எனக் கேட்கிறாள் தலைவி. “ஓடும் புனல், கால்வாய்களின் மண்மேடுகளைக் கரைத்து நுண்மணலாக்குவது போல, கொடியவரான தலைவன் இருக்கும் திக்கில் நீ சென்று அவர் நெஞ்சம் நெகிழ்ந்து இளகிடச் செய். அவ்வாறு நீ  சென்றால், பொருள்தேடும் வேட்கை கொண்டு என்னை மறந்திருக்கும் தலைவன் என்னை நினைவுகொள்ளக்கூடும்” என வாடைக்கற்றைத் தூதாக அனுப்புகிறாள் தலைவி.

பெரும்பாலும் உடனிருக்கிற நண்பர்களின் வழியாக தனது எண்ணத்தைச் சொற்களாக்கி அனுப்புற செயல் ஆண்களுக்கே கைகூடி வந்திருக்கிறது. ஆண்களைப்போல தன்னுடைய நிலையை அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்துகொள்ள பெண்ணால் முடிவதில்லை. மேலும்  பிரிவுக்காலத்தில் பெண் சொற்களற்றுப் போகிறாள். அதனால் வேறு எதன் வழியாகவாவது தன்னுடைய பிரிவுத்துயரை அவனிடம் உணர்த்திவிட முயலுகிறாள். 

சிலபோது வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழநேரிடுகிற அன்பு கொண்ட இருவர் முழுநிலா நாளில் தங்கள் நேசத்தை நிலவின் ஒளிவழியாகப் பரிமாறிக்கொள்ளும் அனுபவம் இன்றைக்கும் சாத்தியம்தான். என்றபோதிலும் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம் ஆகியவற்றில் தூது என்பது எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் தனிப்பிரிவாகவே விளங்கியது. இன்றைய நவீனகாலத்தில் தொழில்நுட்பவளர்ச்சி தூதினை வேறு ஒரு வடிவத்தில் மேற்கொண்டு வருகிறது. இதனை வெளிப்படுத்தும் கவிஞர் கனிமொழி.ஜி. யின் கவிதை ஒன்று,

“இன்னும் நீ தொடர்பெல்லைக்கு
வெளியில் தான் இருக்கிறாய் .
 நீ தந்த குளிரும் வெம்மையும்,
வெம்மையும் குளிருமாய் மாறிவிட்டன
சொற்களால் நமக்கான கூடு முடைந்தவன் நீ
எங்கே உறங்குகிறாய்
சொல்வாயா
நீயிருப்பது எந்த நிலம்
அங்கே இப்போது என்ன பருவம்
இக்கணம் என்ன பொழுது
பெரும்பயணம் செய்துவரும்
நீள அலகுடைய பறவைகள்
அங்கே வருமில்லையா
என்னைக்கடந்து செல்லும்
எல்லா நதிகளிலும் பூக்களைத் தூவுகிறேன்
எப்படியும் அலைசலிக்கும்
மணல்வெளிதானே உன் இருப்பிடம்
அலைக்கற்றையின் சூட்டில்
இன்னுமின்னும் பொறிக்கின்றன
வெண்மையான கால்களுடன்
நிறைய புறாக்குஞ்சுகள் .
உன் சொற்களற்ற இந்த அலைவெளியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்  
எனக்கான ஒரு ஸ்மைலியும்
ஒரு சிவந்த இதயத்தையும்
என் அலைபேசியில்
இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது.”



அகநானூறு: 163, 217,235,294 குறுந்தொகை: 35, 261 நற்றிணை: 281,312 மொத்தம்: 8
*

No comments: