Thursday 15 September 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 

24.பொதுக்கயத்துக் கீரந்தையார்:





நேசிக்கிறவளாக பெண் இருக்கிறாள்: 

முலையே முகிழ்முகிழ்த் தனவே”

தாய்மையை வெகுவாகக் கொண்டாடுகிற இந்த சமூகத்தில்தான் பெண்ணின் முலைகள் ஆணின் மனதைக் கிளர்த்துபவையாகவும் இருக்கின்றன. ஆண் மனதின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு இங்கு பெண்ணின் உடல் மதிப்பிடப்படுகிறது.  சரியாத முலைகளுக்கு ஏங்குகிற மனமும் ஆணுடையதுதான், பாலூட்டித் தனிந்து குழைந்த மார்புகளைப் புனிதமெனப் போற்றுவதும் அவனின் இன்னொரு அகம் தான். இந்த இரண்டுக்கும் இடையேதான் பெண் தன்னுடைய உடல் சார்ந்த உளவியலை உருவாக்கிக் கொள்கிறாள். 
_________________________________________________________________________

ஒரு பெண் தன்னுடைய உடலை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாக உணர்கிறாள் என்பதைவிட, அவளது உடலை மற்றவர்கள் அவ்வாறு உணர்ந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதே சரி. இன்றைக்கும், பிறந்த குழந்தை பெண் என்று அறிந்தவுடன்  அதற்காக மகிழ்பவர்கள் சிலர், வருந்துபவர்கள் பலர் என்கிற நிலைதான் உள்ளது. பெண் குழந்தையை மடியில் கட்டிக்கொண்டிருக்கும் நெருப்பாக பார்க்கிற தாய்மார்கள் இருக்கிறார்கள். வெளியில் காட்டிக்கொள்வதில்லையே தவிர உள்ளூர பெண் குழந்தை சார்ந்த இனம்புரியாத அச்சம் கொண்ட தந்தைமார்கள் அனேகம்பேர் இருக்கிறார்கள். உண்மையில் பெண் குழந்தை வளர்ப்பில் அம்மாக்களை விடவும் அப்பாக்களுக்கு அச்சமும் பதற்றமும் இருந்துகொண்டே இருக்கிறது. பெண் குழந்தையை  கவனிப்பதிலும்  வளர்ப்பதிலும் மிகுந்த சிரத்தையை எடுத்துக்கொள்கிறார்கள். 

வெளியில் சொல்ல இயலாத தங்களுடைய இளமைக்கால  நினைவுகள் பல  ஆண்களிடம் உள்ளன. அம்மா, சகோதரிகள் தவிர வேறு பெண்களால் தூண்டப்பட்ட தங்களுடைய பால் உணர்வுகளைப்பற்றி பல ஆண்களுக்கு ஒருபோதும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள இயலாத நிலையே உள்ளது. இங்கே பாலியல் உணர்வுகளைப் பேசுவதற்கான வழிகாட்டிகளோ ஒத்த உணர்வுடைய நண்பர்களோ சரிவர அமைவதில்லை என்று சொல்வதை விடவும், இல்லை என்றே சொல்லலாம். ஆண்கள் தங்களுடைய இளமைக்காலத்தில் உணர்ந்த பெண் பற்றிய புரிதல்களை  மனைவியிடம் விட மகளிடமே  பொருந்தி பார்த்து துயருறுகிறார்கள். அயல் ஆண்கள் யாரேனும் மகளின் இளமையினால் தூண்டப்பட்டு விடகூடாது என்கிற இரகசியவேதனை பெண்குழந்தைகளைப் பெற்ற பல அப்பாக்ககளின் மனதை அலைக்கழிக்கிறது.

கத்தோலிக்கத் திருவிவிலியத்தில் சீராக்கின் ஞானநூல் என்றொரு பகுதி உள்ளது.   இதில் 42 ம் பிரிவு  9 மற்றும் 10 வது  வசனங்களின் தலைப்பே "மகளைப் பற்றிய தந்தையின் கவலை" என்று இருக்கிறது." 9. தந்தை தம் மகளுக்கும் தெரியாமல் அவளைப் பற்றி விழிப்பாய் இருக்கிறார்; அவளைப் பற்றிய கவலை அவரது உறக்கத்தை விரட்டியடிக்கிறது. இளமையிலே அவளுக்குத் திருமணம் ஆகாமல் போய்விடுமோ எனவும் திருமணமானபின் அவள் வெறுக்கப்படுவாளோ எனவும் கவலைப்படுகிறார். 10.கன்னிப்பருவத்திலேயே அவள் கெட்டுப்போகாத படியும் தம் வீட்டிலேயே கருவுற்றவள் ஆகாதபடியும் கணவருடன் இருக்கும்போது நெறி தவறாதபடியும் திருமணமானபின் மலடி ஆகாதபடியும் அவர் கவலையாய் இருக்கிறார்."

மகளின் உடல் வளர்ச்சியில் அம்மா கொண்டிருக்கும் கவனம் வேறு, அப்பாவின் எண்ணம் வேறு. அம்மா உடலியற் கூறுகளின் மாறுபாடுகளை உடலின் வளர்ச்சியாகப் பார்க்கிறாள் எனில் அப்பா அதே உடலியல் மாற்றத்தினை  உளவியல் சார்ந்த கவலைகளுடன் பார்க்கிறார். இளைஞனாக இருக்கும் பொழுது பெண்ணுடலின் புறத்தோற்றங்களில் கிளர்ச்சியுற்ற ஆணின் மனம் தன்னுடைய மகளிடம் பதற்றப்படுகிறது. அவளுக்கு உகந்த ஆடைகளை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதற்கு  அம்மா நினைப்பாள். ஆனால் மகளுடைய நடவடிக்கைகளைத் தொடர்வதில் அப்பா மிகுந்த  கவனம் கொள்ள தொடங்குவார். மகளின் புறத்தோற்றத்தில் விருப்பமுற்ற யாரேனும் அவளைப் பின்தொடர்கிறார்களா எனக் கண்காணித்துக் கொண்டிருப்பார். 

வளரிளம் பெண்ணின் புறத்தோற்றத்தில் ஏற்படுகிற மாற்றமென்பது மார்பக வளர்ச்சிதான் என நேரிடையான சொல்லில் சொல்லிவிட இயலும். இந்த மார்பக வளர்ச்சி சமூகத்தின் உளவியலைத் தொடர்ந்து பாதித்துக்கொண்டே இருக்கிறது. தடாதகை பிராட்டிக்கு மூன்றாம் முலை இருந்து மறைந்த கதையும்,  "இடமுலைக் கையால் திருகி" என ஒரு  முலையைத் திருகி எறிந்து மதுரையை எரித்த கண்ணகி கதையும்,  சீதாதேவியின் முலையைக் கொத்திக் காயப்படுத்திய காகாசுரன் வருகிற இராமாயணக்கதையும் என  புராணங்களில்,  காப்பியங்களில்  தொடங்கி இன்றைய இலக்கியம் வரையிலும் அனைத்துப் பிரிவிலும் பெண்களின் மார்பகம் என்பது இடையறாது கவனப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

“கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் 
இல்லாதாள் பெண்காமுற் றற்று.” .

“கற்றவரின் அவையில், கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல் என்பது முலை இரண்டும் இல்லாத ஒருத்தி பெண் தன்மையை விரும்பினாற் போன்றது” என்கிற பொருளுடைய இந்தத் திருக்குறள் “கல்லாமை” என்கிற அதிகாரத்தில் வருகிறது. கற்றவர் சபையில் கல்லாதவன் எவ்விதம் நடந்துகொள்ளவேண்டும் என்கிற அறிவூட்டலுக்கான குறள் இது. ஆனால் கல்வி சார்ந்து பேசுகிற இடத்தில்கூட பெண்ணின் முலையோடு ஒப்பீடு செய்யப்படுகிற நிலையில் தான் ஆண்மனம் செயல்படுகிறது.

"ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்  கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்" என திருவாசகத்தில் மாணிக்க வாசகர்  ஈர்க்கங்குச்சியும் இடையில் நுழையமுடியாத  இளமுலைகளை உடைய இளம்பெண்ணின்  கூர்மையான பார்வையிலிருந்து தப்பிக்கவே சிவபெருமானைச் சரணடைகிறார். கோவில் பிரகாரங்களில் குழிந்த வயிறும் சிறுத்த இடையும் திமிர்ந்த முலைகளும் என சிற்பக்கலையில்  பெண்ணின் முலைகளுக்குப் பிரத்யேக இடம் இருக்கிறது. ஓவியக்கலையிலும் பெருத்த முலைகளுக்கான விருப்பம் வெளிப்படையாகத் தெரிகிறது. பெருத்த முலைகளில் காமுறும் இந்திய மனதினை சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலைகளில் அறியமுடிகிறது.

இந்திய ஆண்மனம் அனேகமாக பருத்த முலைகளை விரும்புகிறது, மேற்கத்திய ஆண்மனம் பெரும்பாலும் பெண்களின் நீண்ட கால்களையே விரும்புகிறது என்பார்கள். இதனை கலைகளின் வழியாகவே உணரமுடிகிறது. இந்திய, மேற்குக்கலைகளின் கலப்புக்காரணமாக முலைகளை மட்டுமே ஓவியமாக்குகிற கலை வளர்ந்துள்ள இந்த நாட்களில் தளர்ந்த முலைகளைக்  காட்சிப்படுத்துகிற யதார்த்த பாணியிலான நவீன ஓவியங்களையும் காணமுடிகிறது. 


முதன் முதலில் குளோனிங் முறையில் உருவாக்கிய ஆட்டுக்குட்டிக்கு “டாலி” என்று பெயர் சூட்டப்பட்டது. பெயர்க் காரணத்தை கேட்டதற்கு, விஞ்ஞானி “இயான் வில்மாட்” அந்த பெயர் முலைபெருத்த, தன் அபிமான மேற்கத்திய நடிகை  டாலி பார்டனின்” நினைவில் வைத்ததாகப் பதிலளித்தார். மார்பகத் திசுக்களிலிருந்து  புதிய உயிர் உருவாக்கப்பட்ட அறிவியல் முன்னெடுப்பில் ஒரு நடிகையின் மார்பகம் நினைவூட்டப்படுகிறது. ஆனால் இந்த டாலி பார்டன் என்பவர் நடிகை மட்டும் அல்ல. 1946 இல் பிறந்து நடிகையாக, பாடகராக , பாடலாசிரியராக, எழுத்தாளராக, தொழிலதிபராக, சமூக சேவகராக இருப்பவர். உலகிலேயே அதிகமாக  கிட்டத்தட்ட 46 முறை கிராம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.  இவருக்கு 8 முறை கிராம்மி விருது வழங்கப்பட்டுள்ளது. 2 முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். பலராலும் மிகவும் விரும்பப்படுகிற பாடலான  "I Will Always Love You"   உட்பட 3000  பாடல்களை உருவாக்கியுள்ளார். இவரது இசைக்காக  பல பிளாட்டினம் விருதுகளைப் பெற்றுள்ளார்.  அறிவியல் வரலாற்றில் இவர் பெயர் இணைக்கப்படுவது பெருமைக்குரியது என்றாலும் இவருடைய முலைகள் மட்டும் நினைவுக்கு வருவதன் காரணம் இவர் பெண் என்கிற அடையாளமாக மட்டுமே சுருக்கிப் பார்க்கப்படுதனால்தான்.  

ஆண்கள் பெண்களின் உடலைப் பற்றிச் சிந்திப்பதற்கும் பெண்கள் உணர்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இதனை, கவிஞர் குட்டிரேவதியின் “முலைகள்” என்கிற தலைப்பில் உள்ள கவிதை ஒன்று வெளிப்படுத்துகிறது. 

“முலைகள்
சதுப்பு நிலக் குமிழிகள்

பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்

எவரோடும் ஏதும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை

மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை

தவத்தில்
திமிறிய பாவனையையும்
காமச் சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன

ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசுகண்ட அதிர்வில்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன

ஒரு நிறைவேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த் தேங்கித்
தளும்புகின்றன.”


பெண்ணுடலில் ஏற்படுகிற வளர்ச்சிக்குத் தகுந்த உடைகளை அணியக் கொடுப்பதில் சில அம்மாக்களுக்கு இருக்கக்கூடிய உளவியல் சிக்கல் தனியானது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக நான்கைந்து பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பூப்பெய்தபின்பு, திருமணம் செய்து கொடுக்க இயலாமல் வீட்டிலிருக்கையில் அடுத்தடுத்த பெண் குழந்தைகளின் உடலில் ஏற்படுகிற மார்பக வளர்ச்சியை மறைக்கும் விதமாக பழைய துணியினால் இறுக்கிக்கட்டுகிற வழக்கம் இருந்தது. மூச்சுத்திணறுகிற அளவு இறுக்கிக் கட்டப்படுவதால் அதை மீறியும் வளர்ச்சியடைந்து மார்பகத்தில் நீங்காத வடு அல்லது குறுக்குப்பிளவு ஏற்படுவதும் உண்டு. பழங்குடியினரில்  ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடம் மார்பக வளர்ச்சியை மறைக்க இறுக்கிக் கட்டுவது பண்பாடாகவே இருந்திருக்கிறது. 

கச்சை, தனக்கச்சு, முலைக்கச்சு, கச்சைபட்டை அல்லது இரவிக்கை எனப் பல பெயர்களில் வழங்கப்பட்ட ஜாக்கெட் என்கிற மேல்சட்டையின் பயன்பாடு சங்கப் பழமையுடையது. கவனத்தை ஈர்க்கும்படியான பலவேறுபட்ட வடிவமைப்புடன்  புழக்கத்தில் இருக்கிற இரவிக்கை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் சமூகத்தின் அனைத்து நிலையில் உள்ள பெண்களும் அணிந்து கொள்ளவியலாத உடையாகத்தான் இருந்தது. 

கேரளாவில் முன்பு நடைமுறையில் இருந்த சாதிய கட்டுப்பாடுகளினால் குறிப்பிட்டசாதி பெண்கள் மார்பகங்களை மறைக்கக்கூடாது என்றிருந்தது. மேலாடை அணிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்காக “முலைக்கர்ணம்” என்கிற மார்பகவரி செலுத்தவேண்டும். இதனை எதிர்த்து கேரளாவின் சேர்தலா பகுதியை சேர்ந்த ஏலவா இனத்தைச் சேர்ந்த “நன்கேலி” தனது மார்பகங்களை அறுத்து வாழையிலையில் வைத்து வரி வசூல் செய்பவர்களிடம் கொடுத்துவிட்டு உயிர் துறந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன் நன்கேலி அறுத்து வைத்த முலைகள் தாம் மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை. மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது ஒழிக்கப்பட்டது.

இவ்விதமாக பெண்ணின் உடல் பலவேறு போராட்டக்களங்களில் பெண்களுக்கு ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் பெண்கள் “Indian Army Rape us”  என்ற அறிவிப்புப் பதாகைகளுடன்   நடத்திய நிர்வாணப் போராட்டம் முக்கியமானது. போலவே காடுகளை அழிக்கக்கூடாது என வடமாநில “பிஸ்னாய்” பழங்குடிப் பெண்களில் ஒரு பிரிவினர் வெற்று மார்புடன் மரங்களைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தி நூற்றுக்கணக்கில் இறந்தனர். 

தாய்மையை வெகுவாகக் கொண்டாடுகிற இந்த சமூகத்தில்தான் பெண்ணின் முலைகள் ஆணின் மனதைக் கிளர்த்துபவையாகவும் இருக்கின்றன. ஆண் மனதின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு இங்கு பெண்ணின் உடல் மதிப்பிடப்படுகிறது.  சரியாத முலைகளுக்கு ஏங்குகிற மனமும் ஆணுடையதுதான், பாலூட்டித் தனிந்து குழைந்த மார்புகளைப் புனிதமெனப் போற்றுவதும் அவனின் இன்னொரு அகம் தான். இந்த இரண்டுக்கும் இடையேதான் பெண் தன்னுடைய உடல் சார்ந்த உளவியலை உருவாக்கிக் கொள்கிறாள். 


தலைவன் கூற்றாக அமைந்த பொதுக்கயத்துக் கீரந்தையாரின் குறுந்தொகைப்பாடலில் தன்னுடைய உடலில் ஏற்பட்டுள்ள பருவ மாற்றத்தின் அடிப்படையில் மனதைக் கட்டமைத்துக் கொள்ளாத தலைவி இருக்கிறாள். அவளது உடலின் வளர்ச்சியில் தூண்டப்பட்ட தலைவன் கூறுவதாக அமைந்த பாடல்

முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே   
கிளைஇய மென்குரல் கிழக்குவீழ்ந் தனவே ,
செறிமுறை வெண்பலும் பறிமுறை நிரம்பின 
சுணங்கும் சிலதோன் றினவே அணங்குதற்கு 
யான் தன் அறிவள்; தான் அறியலளே  
யாங்கு ஆகுவள்கொல் தானே 
பெருமுது செல்வர் ஒருமட மகளே.

“தலைவியின் முலைகள் அரும்பின, தலையில் கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன, செறிந்த வரிசையாகிய வெள்ளிய பல்லும் முதன்முறை விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின, தேமலும் சில வெளிப்பட்டன, என்னை வருத்துமளவுக்கு அவள் இருப்பதை நான் அறிவேன், அவள் அதனை அறிந்திலள், பெரிய முதிர்ந்த செல்வத்தை உடையாரது ஒப்பற்ற மடப்பத்தை உடைய தலைவியாகிய அவள் எத்தன்மை உடையவளாவளோ.

தலைவி மிக இளையவள் என தோழி கூற, அவளிடம் தலைவன் கூறுவதாக அமைந்துள்ள இந்தப் பாடலில் தலைவியின் புறத்தோற்றமே அவனைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. முகிழ்த்திருக்கும் முலைகளும், பால்யத்தின் குரல் வீழ்ந்து குழைவதும், விழுந்த பால்பற்கள் மீண்டும் முளைத்து நிரம்புவதுமென அவனை வருத்துகிற அவளது உடலின் ஈர்ப்பு பற்றி அவன் அறிந்திருக்கும் அளவு அவள் அறிந்திருக்க இயலாது என அவன் சொல்கிறான். அவளைத் தூண்டுகிற அவனுடைய தொடர் முயற்சியினால் பெண்ணும்  பல சமயங்களில் அவனுக்கு இணங்குகிறாள். பெரும்பாலும் பெண் அவளுடைய உடல் தோற்றத்தின் அடிப்படையில் ஆணை ஈர்க்கிறவளாக  இருக்கிறாள். ஆனால் ஆணின் அரவணைப்பிலும் அவனுடைய கரிசனையின் வெளிப்பாடிலுமே பெண் ஆணை நேசிக்கிறவளாக இருக்கிறாள். 

கவிஞர் சுதந்திரவல்லியின் “முதல் காதல்” என்கிற தலைப்பிலுள்ள கவிதையொன்று வளரிளம் பருவத்தின் தொடக்கத்தில் முகிழ்க்கிற காதலைப் பேசுகிறது. உடல் சார்ந்த விழைவுகள் ஏதுமற்று அந்த வயதுக்கே உரிய அன்பினை வெளிப்படுத்துகிற சிறிய செய்கையில் மகிழ்வுறுகிற பெண்ணை   முன்வைக்கிறது.

எனக்குப் பிடிக்கும் மாங்காய்களை 
சைக்கிளின் கைப்பிடியில் 
கொத்தாகத் தொங்கவிட்டபடி  
என் வீட்டு முன்பு 
அங்கும் இங்கும் சுற்றுபவன் 
யாருமற்ற நேரத்தில் 
மாங்காய்களை காம்பவுண்டுக்குள் வீசுபவன். 
நானோ அவற்றை கவனமாய் 
பொறுக்கிக்கொண்டு  பள்ளிக்குச் செல்வேன் 
ஆசிரியர் பார்க்காத நேரத்திலும் 
இடைவேளையின் போதும் 
மாங்காய்களை உடைத்து உப்பு வைத்து 
தோழிகளுடன் பகிர்ந்துண்பேன்.

இவர் எழுதியதாக குறுந்தொகையில் ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது. (குறுந்:337) 

No comments: