Friday 31 May 2013

கிளி புராணம் . . .



கூடடையாத கிளி
பறந்து செல்கிறது

வீட்டின் அறைகளில்
சமையலறையில்
பூஜையறையில்
குளியறையில்
வாழ்நாளைக் கடத்திவிடும்
கிளி

மீனாட்சியின் தோளிலும்
காமாட்சியின் கையிலும்
பலநூறு வருடங்களாய்

சொல்வதைச் சொல்கிறது
தருவதை உண்ணுகிறது
ஆண்டாளின் தலையிலிருந்து பறந்து வந்து
இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுகிறது
சீட்டுகளை இடம்மாற்றிப் போடுகிறது

அரச பரம்பரையின்
தங்கக்கூண்டுகளில்
தத்தித் தவழ்ந்த அது
கூட்டினைத் திறந்ததும்
வெளியேறுகிறது

பேருந்துகளில் கூண்டோடு பயணிக்கும்
பல கிளிகள்
தம் பயணத்தை அறியாதவை

பல ஆயிரம் ஆண்டுகளாய்
கூட்டினை அடையாத கிளிகள்
பறந்து செல்கின்றன அகன்ற வானில்

No comments: