Friday 31 May 2013

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் :


வண்ணத்துப் பூச்சிகள்தான்
இந்த பூமிக்கு நிறங்களைத் தருவதாக
நம்பிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி

இறந்த
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைப் பார்த்தாள்
பின்பு
வண்ணத்துப் பூச்சிகளற்ற
வீட்டுத் தோட்டத்தைக் கற்பனைசெய்யத் துவங்கினாள்

தனது
சிறிய இறகுகளில்
வண்ணங்களாய்
இன்பத்தைச் சுமந்து திரியும் அவைகளை
ஒரு நாளும்
சந்திக்காமல் இருந்ததில்லை அவள்

இதுவரையில்
எத்தனை எத்தனை வண்ணத்துப் பூச்சிகள்
மரணமடைந்திருக்கும்
அந்த மரணம்
எப்படி துயரப்படுத்தியிருக்கும்

அவள்
தன்னுடலில்
மரித்துப் போன வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளைப் பத்திரப்படுத்தினாள்.

No comments: