Thursday 30 May 2013

நெடுநல் வாடை. . .



இன்று தான் தனித்திருப்பதைப் போல
காத்திருக்கிறேன்
ஆண்டுக் கணக்காக

இன்று அவன் வந்து விடுவான்
என்று நம்பிக் கொண்டே
இன்றுகளைக் கடந்து கொண்டிருக்கும்
எனக்கு
நேற்றும் இல்லை
நாளையும் இல்லை

இன்று தான் என்பது
எனக்குமட்டும் இல்லை
அவனுக்கும் தெரியும்

அவன்
போர்க்களத்தில் இருக்கிறான்

போரில் வெற்றியடைந்தான்
அல்லது செத்து விட்டான்
எதுவும் எனக்குத் தெரியாது

அவனிடம் அனுப்புவதற்கு
என்னிடம் புறாக்கள் இல்லை
சமீப நாட்களில்
புறாக்கள்
என் தலை மீது பறக்கவேயில்லை

மேகத்தைப் பார்க்கிறேன்
அது
வெண்மையாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது

செம்பூத்தின் பாடலைக் கேட்கிறேன்
அது
வசந்தம் வரும் என்றே சொல்கிறது

என் முகத்தை
நீர்த் தளத்தில் பார்க்கிறேன்
அது
அத்தனை அழகாய் ஒளிர்கிறது

அவன்
வந்து விடுவான்

No comments: