Friday 31 May 2013

ஒற்றைச் சொல். . .


என்னைப் பேரழகி என்றாய்

இந்தக் கடற்கரையிலிருந்து புறப்பட்டு
நிலவில் மண்ணெடுத்துத் திரும்பினேன்

என்னை தேவதை என்றாய்

கடற்கரையில்
அதிசயமாய் தனித்திருக்கும் ஒற்றை மரத்தின்
இலைகளில் உறங்கும் காற்றை எழுப்பிவிட்டேன்

புயல் ஓய்ந்து
மழை நனைத்துக்
குளிர்ந்துகிடக்கும் நிலத்தில்
ஒற்றைச் சுடருடன் நிற்கிறேன்

இப்போது
நீ எங்கிருக்கிறாய்

என் வீட்டை ஒளிரச் செய்யும்
வல்லமையையை
உன் வார்த்தைகள் அறியும்

இப்போதும்
நான் விரும்பும்
ஒற்றைச் சொல்லை
நீ சொல்வாயெனில்

அச்சொல்லில்
தேவதைகளும் பேரழகிகளும் கரைந்துபோக
ஆவாரம்பூ மாலையென
உன் கழுத்தை அலங்கரிப்பேன்

அந்த நிலவொளியில் சுடரும்
கருஞ்சிலையென.

No comments: