Thursday 30 May 2013

தடைகள் :



இந்தச் சுவரின் பொருள் என்ன
சுவரற்ற வீடு நிலந்தானே
காற்றையோ
மேகங்களையோ
மேலும்
மழையைக் குறை சொல்லிவிட இயலாது
உயர்ந்த மலைத்தொடரையோ
கடலில் ஆர்ப்பரிக்கும் அலையையோ
குறை சொல்லிவிட இயலாது

எதைக் கொண்டு எழுப்பினோம்
நம்மிடையேயான சுவரினை
நிச்சயம்
மணல் சுண்ணாம்பு இரும்பு மரம் என்று
எதுவுமிருக்க முடியாது

மனசிலிருக்கும் வெறுப்பு
நிலமெங்கும் எழுப்புகிறது ஒரு சுவரினை

கட்டப்படுகிற சுவர்களுக்கு
முன் மாதிரியைத் தந்தவர்கள் யார்

கடத்த முடியாத உணர்வுகளை
சேகரிக்கவா சுவர்களை எழுப்பி வைத்துள்ளார்கள்

சுவர்கள் தன் மேல் விழும் ஒவ்வொன்றையும்
திருப்பி அனுப்புகிறது
அதனதன் பிறப்பிடம் நோக்கி .

No comments: