Thursday 30 May 2013

சொற்களைச் சுகித்திருக்கும் இரவு. . .



அந்த இரவிலிருந்து
இறங்கி வருவது எப்படியென
அறியாமலிருக்கிறேன்

காற்றில்லாத தேசத்திலிருந்து வந்தவள் நான்
சமுத்திரத்தின் நிறைவை வேண்டி நிற்கிறேன்
இந்த நீள் கடற்கரையில்

அவன்
எங்கோ இருக்கிறான்
எப்படியோ இருக்கிறான்
அல்லது
எவ்வாறும் இருப்பான்

அவன் சொற்களின் வசீகரத்தில்
அவனை சுகித்திருந்த கணத்தில்
மழை பொழியத் துவங்கியிருந்தது

மேகமும் மந்தாரமும் சூழ்ந்திருக்கும்
அந்த மயக்கத்திலிருந்து மீள விரும்பாமல்
அவன் கரை சேர வந்திருப்பவள் நான்
தென்றலுக்காகக் காத்திருக்கிறேன்
நெருப்பின் வடுக்களை சுமந்துகொண்டு .

No comments: