Monday 5 May 2014

இரவு - பிப்ரவரி 22





நரைகூடி வெளுத்த கூந்தலுடையவள் அவள்
தாவணிப்பருவத்தின் 
ஒரு அதிகாலையில்
அவனைப்பற்றி நகரம் சென்றவள்
இப்போது தான் மட்டும் தனித்து
பிறந்த கிராமம் திரும்புகிறாள்

அலையாடும் கடல் அவள் வாழ்வு
எழுந்தும் தாழ்ந்தும்
எவ்வளவோ செய்து விட்டாள்
போதும் என்று நினைத்து
தன் தவழ்நில விருப்பில்
பாதம் பதிந்து கிடக்கும்
ஆற்றுமணல் தேடி வருகிறாள்
ஆறு இல்லை
மணல் இல்லை
தன்னுடன் ஆடிய பொன்வண்டும்
சிறு நத்தைக் கூடும் இல்லை

இளமையின் கிராமம் அப்படியே இருக்குமென்ற
அவளின் கற்பனை தகர்ந்து போக
இவ்விரவில்
மீண்டும் நகரம் திரும்புகிறாள்
இம்முறை தனித்து .
%

No comments: