Monday 30 July 2012

கருவிலிருந்து குழந்தை ..


ஈரோடு CKK அறக்கட்டளையின் 34 வது ஆண்டு இலக்கிய விழா நிகழ்வில் மரபின்மைந்தன் முத்தையா தலைமையில் வெளிப்படும் வேளை என்கிற பொதுத் தலைப்பின் கீழ் .

கருவிலிருந்து குழந்தை ..

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா
மண்ணை முட்டி முட்டி விதை ஒன்று
வெளிப்படும் வேளையைப் பார்த்திருக்கிறீர்களா
முட்டையின் ஓட்டினைத் தட்டித் தட்டி
பறவை ஒன்று வெளிப் படும் வேளையைப் பார்த்திருக்கிறீர்களா
வலைபின்னல் கூட்டினை அசைத்து அசைத்து
வெளிப்பறக்கும் பட்டாம்பூச்சி தருணத்தைப் பார்த்திருக்கிறீர்களா
கால்கள் மடித்து ரத்தமும் நீருமாக
பட்டென்று கீழ் விழும் கண்ணுக் குட்டி
வெளிப்படும் வேளையைப் பார்த்திருக்கிறீர்களா
காற்று முட்டி முட்டி கருக்கொண்ட மேகம்
மழையென வெளிப்படும் வேளையைப் பார்த்திருக்கிறீர்களா
அரும்பில் பூட்டியிருக்கும் வாசம் தட்டித் தட்டி
மலர்கள் மலர்வதைப் பார்த்திருக்கிறீர்களா
பார்த்திருப்பீர்கள்

இவற்றையெல்லாம் பார்த்திருப்பீர்கள்
மேலும்
விதையிலிருந்து முளைவிட்டிருக்கும் இளந்தளிரை
உங்கள் கைகளில் ஏந்தியிருப்பீர்கள்
உங்கள் வீட்டுக் கோழியிலிருந்து அப்போது தான் வெளிப்பட்ட முட்டையின்
இளஞ்சூட்டினை உங்கள் கைகளில் உணர்ந்திருப்பீர்கள்
மெல்ல இதழ் பிரிந்து மலரத் துவங்கியிருக்கும் பூக்களை
உங்கள் கைகளில் வைத்து முகர்ந்திருப்பீர்கள்
கனிந்த மேகம் பொழியும் நீரை
உங்கள் இருகரம் குவித்து உங்களிடத்தில் வாங்கியிருப்பீர்கள்
இவற்றிற்கெல்லாம் மேலான ஒன்றைப் பார்த்திருப்பீர்கள்
உணர்ந்திருப்பீர்கள்

தாயின் வயிற்றிலிருந்து குழந்தை ஒன்று
வெளிப்படும் வேளையைப் பார்த்திருப்பீர்கள்
தாயின் வயிற்றிலிருந்து குழந்தை ஒன்று வெளிப்படும் வேளையில்
உங்கள் கைகளில் ஏந்தியிருப்பீர்கள்
கருவிலிருந்து குழந்தை ஒன்று வெளிப்படும் வேளைக்காக
தவித்திருந்திருப்பீர்கள்
கருவிலிருந்து குழந்தை ஒன்று வெளிப்படும் வேளைக்காக
காத்திருந்திருப்பீர்கள்

நானும் காத்திருந்தேன்
என் தாயின் வயிற்றில் குழந்தையாக
அதுவும் பெண் குழந்தையாக
நானும் காத்திருந்தேன்
என் கருவிலிருந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க
அதுவும் பெண் குழந்தையைப் பெற்றெடுக்க
நான் உள்ளே காத்திருந்தேன்
நான் உள்ளே வைத்தும் காத்திருந்தேன்
இரண்டு காத்திருப்பும் ஒன்று தானா
இரண்டு காத்திருப்பின் காலமும் ஒன்று தானா
உங்கள் மனதின் காத்திருப்புக்களை அறிந்தவர்கள் நீங்கள்
ஆண் குழந்தை வெளிப்படும் வேளையில் காத்திருந்தவர்கள்
அல்லது பெண் குழந்தை வெளிப்படும் வேளையில் காத்திருந்தவர்கள்
இரண்டு காத்திருப்பும் ஒன்று தானா
நான் அறிந்தவளாகவும் இருக்கிறேன்
அறியாதவளாகவும் இருக்கிறேன்

என் தாய் என்னைப் பெற்றெடுத்தாள்
காத்திருந்தான் என் தகப்பன்
இங்கே ஒரு பெண் குழந்தை வெளிப்படும் வேளை என்பது
வானத்து முகில் கிழித்து நிலவு வெளிப்படுவது போல இல்லை
கூரிய முள் விலக்கி ரோஜா ஒன்று வெளிப்படுவது போல இல்லை
அதனினும் கடினமானது

கரும்பாறையில் விழுந்த விதை ஒன்று
முட்புதர் நடுவே முளைத்தெழுவது போன்றது
நான் வெளிப்பட்டஎன் காலம் கொடியது
அங்கே நீலநிறத்தில் எனக்கான ஆலகாலம் நிரம்பியிருந்தது
நீலக் கடலென
என் காலம் கொடியது
அங்கே நீலநிறத்தில் எனக்கான ஆலகாலம் விரிந்திருந்தது
நீல வானமென

நான் வெளிப்படும் வேளையில்
என் தாயின் கருவிலிருந்து நான் வெளிப்படும் வேளையில்
என் தகப்பன் காத்திருந்தான்
என் சுற்றம் காத்திருந்தது
கூடவே காத்திருந்தன ஐந்து சொட்டு கள்ளிப் பாலும் சில நெல் மணிகளும்
நான் ஏசுவைப் போல உயிர்த்தெழுந்தவள்
கள்ளிப்பாலிலிருந்து ஏசுவைப் போல உயிர்த்தெழுந்தவள்
கருவறையை கல்லறை ஆக்காத
என் தாயின் செயலால் பிறந்தவள் நான்
நான் தப்பிப் பிழைத்தேன் என் தாயின் கருணையினால்
நான் தப்பிப் பிழைத்தேன் என் தகப்பனின் பேரன்பினால்
நான் தப்பிப் பிழைத்தேன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுத் தர
நான் தப்பிப் பிழைத்தேன் இந்த உலகைக் காக்க
நான் தப்பிப் பிழைத்தேன் இந்த உலகை மகிழ்விக்க
பெண் தானே இந்த உலகின் மகிழ்ச்சி
பெண் தானே இந்த உலகின் நிறைவு
பெண் இல்லாமல் ஒன்றுமே இல்லை
பெண்ணில் இந்த ஆண்கள் மகிழ்வதை
என் எல்லாப் பருவங்களிலும் உணர்கிறேன்


தத்தித் தவழ்ந்தேன்
என் தகப்பன் மகிழ்ந்தான்
திக்கித் திக்கிப் பேசினேன்
என் சகோதரன் மகிழ்ந்தான்
தப்புத் தப்பாக எழுதினேன் சின்னஞ்சிறிய கரும்பலகையில்
என் தாய் மாமன் மகிழ்ந்தான்

என் உலகம் பெரியது
என் உலகம் ஆகாயத்தைவிடவும் பெரியது
தெருவில் விரிந்து கிடக்கும் நிலவொளியில்
அகன்ற வானத்தைத் தொட்டு இழுக்கும் பருவம் அது
விரிந்த நிலவொளியில் தெருவெங்கும் ஓடித் திரிந்தேன்
குட்டைப்பாவாடை உடுத்தியபடி
ஓடிவிழுந்து முழங்காலில் நிலமுரசி
உதிரம் பெருகியது கண்டு பதறினான் ஒருவன்
அவன் இட்ட மருந்தில் என் காயம் ஆறியது கண்டு மகிழ்ந்தான் அவன்

காட்டுபூக்களைச் சூடி காட்டுவெளியில் சுற்றி
மான் விரட்டித் திரிந்த குறிஞ்சிநில நாட்களில்
உன்னிப் பூக்களை பழங்களோடும் இலைகளோடும்
தாம்பூலமென மடித்துத் தந்தான் இன்னொருவன்
நிறம் மாறிச் சிவந்த என் உதடுகள் பார்த்து
ரசித்து மகிழ்ந்தான் அவன்

கிராமத்து நாட்களின் நீண்ட மதியப் பொழுதுகளில்
வெயிலோடு கள்ளிப் பழம் பறித்துத் தந்தான் வேறொருவன்
சிவந்த முள் ஒதுக்கித்தின்னப் பழக்கித் தந்து மகிழ்ந்தான் அவன்

வீட்டின் பின்பக்கக் கிணற்றடியில்
உதிரம் பெருக்கி நான் பெரியவளானதும்
காணாமல் போனார்கள் அவர்கள்
தாவணி நாட்கள் வந்தன
என் உலகம் தெரு அல்ல
என் உலகம் என் நண்பர்கள் அல்ல
என் உலகம் பச்சைப் புல்லில் ஊர்ந்து திரியும்
சிற்றெறும்பின் கால் அளவே என்று உணந்தேன்
பச்சைத் தாவரங்களில் என் பெயர் எழுதப் பழகிய காலம் அது

என் மெல்லிய கொலுசுச் சத்தம் உணர்ந்து மகிழ்ந்தான் ஒருவன்
அவன் காத்திருந்தான்
அவன் காத்திருந்தான் நான் காண்பதற்கு
அருவி கொட்டி என் உடலில் பெருகி ஓடுவது போல
அவன் கண்களில் மகிழ்ந்தேன்
அவன் கண்களில் குளிர்ந்தேன்
அவன் கண்களில் உடன் இழந்தேன்
அவன் கண்களில் உடல் இழந்தேன்

அடர்த்தியான மஞ்சள் பொழுதில் திருமணம் நடந்தது
மஞ்சள் நிறத்திலான வாழ்த்துக்களோடு
கனவிலிருந்த வார்த்தைகளை
கனவு தந்த வேதனைகளை அறிந்து கொள்ளும் ஆவலுடன்
இந்த உலகின் நடைபாதையில் நின்றிருந்தேன்
வெட்கத்தின் நிழல் மெல்ல இடம் பார்த்து
வெளியேறிய நாட்கள் அவை
வெட்கம் தணிகின்ற காரணம் அறியும் முன் கருவுற்றேன்

நான் இப்போது காத்திருந்தேன்
என் கருவிலிருந்து
குழந்தை
வெளிப்படும் வேளைக்காக காத்திருந்தேன்
என் கருவிலிருந்து
பெண் குழந்தை ஒன்று வெளிப்படும் வேளைக்காக காத்திருந்தேன்
என் காலம் வேறு
இவள் காலம் வேறு


குப்பைத் தொட்டியின் குழந்தைகள்
இந்த கால கட்டத்தின் அவமானம்
முட்புதரில் கிடக்கும் குழந்தைகள்
இந்த கால கட்டத்தின் அருவருப்பு
கழிவு நீர் சாக்கடையில் கிடக்கும் குழந்தைகள்
இந்த கால கட்டத்தின் மாபெரும் அசிங்கம்

என் கருவிலிருந்து வெளிப்பட்ட குழந்தையை
என் பெண்ணே
என் செல்லமே என நான் கொஞ்சுகிறேன்
பெண் குழந்தை என்று முகஞ்சுளிக்கும் சுற்றம் அறிவேன்
பெண் குழந்தை என்று அறிவு மறுக்கும் சமூகம் அறிவேன்
பெண் என்று உடலை மட்டுமே பார்க்கும் ஆண்களை அறிவேன்
பெண் என்பவள் மேலான பாலியல் வன்முறை அறிவேன்
இங்கே நெல் மணிகள் என
இவளுக்குக் காத்திருக்கும் போராட்டம் அறிவேன்
இங்கே கள்ளிப் பால் என
இவள் சந்திக்கும் அவலங்கள் அறிவேன்

ஒரு சொல்லைச் சொல்லத் தோன்றுகிறது
இந்த மாபெரும் சபையில்
சொல்லலாம் என நினைக்கிறேன்
வேண்டாம் எனத் தடுக்கிறது மனது
பெண்ணாகப் பிறப்பது பாவம்
பிறந்து விட்டேன்
இந்தப் பெண்ணைச் சுமக்க விரும்பாத ஆணை
நான் ஏன் சுமக்க வேண்டும்
பெண்ணை உடலாக பார்ப்பவன் அவன்
அறிவுநிலையில் பெண்ணை விரும்பாதவன் அவன்
அவளது இருப்பு அவனுக்குத் துயரம்

மகாசக்தி
பராசக்தி
பத்ரகாளி
ஏன் நீங்கள் எல்லோரும் மௌனமாக இருக்கிறீர்கள்
இந்தப் பெண்ணைச் சுமக்க விரும்பாத ஆணை
நான் ஏன் சுமக்க வேண்டும்

பிறகேது நம் சந்ததி
பிறகேது நம் புராணங்கள்
பிறகேது வரலாறு
ஆண் இன்றி பெண் இல்லை
பெண் இன்றி எதுவுமே இல்லை என்பதை அறிந்தவள் நான்

எத்தனையோ கடந்து பெண் வெளிப்படும் வேளை இது

அவளின் வலிகளை உணர்பவர்களை நான் நேசிக்கிறேன்
அவளின் துயரங்ககளைப் பகிர்ந்து கொள்பவர்களை நான் நேசிக்கிறேன்
அவளின் திறமைகளை மதிப்பவர்களை நான் நேசிக்கிறேன்
இந்த மாபெரும் சபையில்
கருவிலிருந்து குழந்தை வெளிப்படுவது போல
நான் வெளிப்படும் இந்த வேளைக்கு
காரணமானவர்களை நான் நேசிக்கிறேன்
என் போல ஆயிரம் ஆயிரம் பெண்கள் வெளிப்படும் வேளையில்
கை கொடுப்பவர்களை நான் நேசிக்கிறேன்

மழைத் துளிகளை வாங்குவது போல
பூக்களை நுகர்வது போல உங்கள் கரங்களை விரியுங்கள்
என் பெண் குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்
இந்தப் பெண் குழந்தையை நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன்
என் பெண் குழந்தை மட்டுமல்ல
பெண் குழ்ந்தை ஒன்றை கள்ளிப் பால் வாசனையின்றி
கரம் விரித்து ஏந்துகிற ஆண்களை நான் நேசிக்கிறேன்

உங்கள் கைகளை அல்ல
உங்கள் கைகளின் ஒவ்வொரு விரல் பிடித்தும் முத்தமிடுகிறேன்

மழை போல அல்ல
விதை போல அல்ல
கிழக்கிலிருந்து சூரியன் வெளிப்படுவது போல
கருவிலிருந்து பெண் குழந்தை வெளிபடும் வேளையாக இருக்க
இந்த சபை வணங்கிக் கேட்டு விடை பெறுகிறேன் .

நன்றி .

6 comments:

செய்தாலி said...

அற்புதமான கருத்து
மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது
அருமை அருமை கவிதாயினி

Ponnambalam kalidoss ashok said...

ur poem is of power like கிழக்கிலிருந்து சூரியன் வெளிப்படுவது போல .
the lines ,பெண் என்பவள் மேலான பாலியல் வன்முறை அறிவேன் is realty now. here, v praise land & water as the pure form of women. praying female deities in a great way. but, still ? ur poem, need of hour. the lines பெண் குழ்ந்தை ஒன்றை கள்ளிப் பால் வாசனையின்றி
கரம் விரித்து ஏந்துகிற ஆண்களை நான் நேசிக்கிறேன் shows ur way of good understanding of other gender which makes u a distinct poet. a very good +ve role on other gender will make more understanding on society building in a harmony way. the poet role is here , a great one.

Unknown said...

This poem has to be displayed in all Govt and private Nursing homes and public places to make awareness.This can be done by Lions club.

sakthi jothi said...

நன்றி செய்தாலி.

sakthi jothi said...

நன்றி அசோக்

sakthi jothi said...

நன்றி பாண்டியன் கணேசன் .