Tuesday 7 August 2012

கடலைசையும் வீடு.



ஒவ்வொரு முறை வீடு திரும்பும் போதும்
ஏதாவது ஒரு பொருளை
கொண்டுவந்து
சேர்ப்பது வழக்கமாகி விட்டது

ஒருமுறை
மீன்தொட்டியில் இடுவதற்கென
சிப்பிகளையும்
பவளப் பாறைப் படிகங்களையும் கொண்டுவந்தேன்
வீடு நிரம்பியது
உப்பின் ஈரவாசனை

பின்பொரு நாள்
கடல் நீராடித் திரும்புகையில்
ஆடைகளில் ஒட்டிவந்த மணல்துகள்கள்
கடற்கரை வேண்டி நிற்கிறது என்னிடம்

கடல் மீனின் மாதிரி
கடலின் வண்ணப் படம்
சிறிய சங்குகள்
கடல்பாசி எனக்
கடல்  பொருட்களைத் தேடித் தேடி
அலைகிறேன் கடற்கரையின்
கடைவீதிஎங்கும்

கடற்கரை மணல்துகள்
அப்படியே கிடக்கிறது
அலையோசையை என் வீடெங்கும் நிரப்பியபடி

No comments: