Monday 2 July 2012

தாலாட்டு...


என்னை
அவஸ்தைக்குள்ளாக்கும்
எத்தனையோ
காரணங்களில்
நீ
விடுபட்டதே இல்லை

ஒருவேளை
நாம் உணராதது
மேலும் உனக்குத் தெரியாதது

வானத்தைப் பார்க்கும்பொழுது
அது
நீலமாக இருக்கும் அல்லது
கருமையை அப்பிக்கொண்டிருக்கும்
ஜிகினாப் போல மின்னும் நட்சத்திரங்கள்
உன் கண்களையோ
அல்லது என் கண்களையோ
ஞாபகமூட்டும்

நான்
நானாகவே இருக்க விரும்புகையில்
என்னைத் துன்புறுத்துகிறாய்

நான்
நானாக இருக்க முடியாதென்று
வலியுறுத்துகிறாய்

என்னைப்
பிரிந்து செல்லும் சிலகணங்களைக்௬ட
தாங்க முடியாதவளாயிருக்கிறேன்
என்று உணர்ந்து
என்னை விலகிச் செல்கிறாய்

நடக்கிறாய்
உன் பாதம் புண்ணாகிவிடுமென்று
பதறுகிறேன்

எதையெதையோ விழுங்குகிறாய்
விக்கிக்கொள்வாய் என
கவலைப்படுகிறேன்

இதோ
இன்று ௬ட
நீ
எங்கோ உறங்கிக் கொண்டிருக்கிறாய்
நான்
விசிறிக் கொண்டிருக்கிறேன்
இந்தக் காற்று
உன்னைத்
தூங்க வைக்குமென .


No comments: