Thursday 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :
-ஊண் பித்தையார் ..







 உள்ளிருந்து ஒருபெண் இயக்குகிறாள்:

உள்ளார் கொல்லோ தோழி...”

“ஆணின் வெற்றியை தன்னுடைய அடையாளமாக பெண் கருதுகிறாள். எனவே வினைமேற் சென்ற தலைவனின் பிரிவை தலைவி தாங்கியிருக்கிறாள். அவனது  செயல் முழுமையாக நிறைவடைவதற்கு இவளது காத்திருப்பும் வலிமை சேர்க்கிறது. இவ்வாறாக செயலூக்கம் மிக்கவனாக அறியப்படுகிற ஒவ்வொரு ஆணின் பின்னிருந்தும் அவனை ஒரு பெண் இயக்கிக்கொண்டிருக்கிறாள். ஒரு  யாமரத்தைப்போல வற்றாத ஈரத்தை  தனக்குள் வைத்திருக்குமவள், சிற்பம் செய்யப் பயன்படுத்தப்படும் அம்மரத்தின் உறுதியையும் தன்னகத்தே கொண்டவளாகவும் இருக்கிறாள்.
________________________________________________________________________________________

ஆண் பெண் உறவானது பிரிவுக் காலத்தில் மிகுந்தவலியுடனும் அதேசமயத்தில் வலிமையுடனும் இருக்கும்.  பிரிவின் தனிமையில் வருந்திக் கொண்டிருக்கும் தலைவி தோற்றத்திலும் வாடியிருப்பாள். அவள் கண்ணில் படுகிற எல்லாமும் ஏதோ விதத்தில் தலைவனை நினைவுப்படுத்த மேலும் துயர் அடைவாள். அதுபோலவே பிரிந்து சென்றிருக்கும் தலைவனும் செல்லுகின்ற  பாதையில் தென்படுகிற காட்சிகள் மூலமாக தலைவியை நினைத்துக்  கொள்வான். இவ்விதமாக காணும் பொருள் யாவும் தலைவன் தலைவி இருவருக்கும் அவர்கள் ஒருவரையொருவர் அன்பு செய்த காலங்களை நினைவுகளில் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருக்கும். பிரிவுக்காலத்தில் ஆணின் நிலையைப்பற்றி தலைவி பேசுகிற சங்கப்பாடல் ஒன்று உள்ளது

ஊண் பித்தையார் என்கிற பெண்பாற் புலவர் எழுதியுள்ள குறுந்தொகைப் பாடல்,

உள்ளார் கொல்லோ தோழி, உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை
உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே.”

மிகவும் அடர்ந்த சோலைகளைக்கடந்து பொருள் தேடிச்சென்றிருக்கும் தலைவர் நம்மை நினைக்காமல் இருப்பாரா, நிச்சயம் நம்மை நினைத்திருப்பார், என்றபோதும் தாம் மேற்கொண்ட வினையானது முற்றுப்பெறுவதற்கு வாய்ப்பில்லாததால் நம்மைத்தேடி வரவில்லை. உரல் போன்ற கால்களையுடைய யானையாமரத்தின் கிளைகளை ஒடித்து உண்டுவிட்டு சென்றிருக்கிறது. அங்கே மீதமிருக்கும் அடர்த்தி குறைந்த கிளைகளின் வழியாக  வெயில் புள்ளிகளாக விழுகிற அந்த மரத்தின் நிழலில்மரல்என்கிற கொடியை தேவையான அளவிற்கு உண்ட பிடரையையுடைய ஆண்மான் படுத்திருக்கிறது. அந்தக் காட்சியை மலைகளைக் கடந்து செல்லும் தலைவர் பார்க்கிறார். இந்தக்காட்சியைப் பார்க்கும் தலைவர் தலைவியை நினைக்காமல் எப்படி இருக்க முடியும்என தோழி, தலைவியிடம் சொல்லி அவளைத் தேற்றுகிறாள்.

ஒருவேளை தலைவன் தன்னை நினைக்கவில்லையோ என தலைவி வருத்தம் கொள்கிறாள். தலைவன் நினைவில் தளர்ந்திருக்கும் தலைவியைத் தேற்றுவதற்கு நம்பிக்கை தருகிற சொற்களை தோழி கூறுகிறாள். தலைவன் செல்லும் வழியில் அவர் காண்கிற அத்தனையும் அதனதன் தனித்த அர்த்த பரிமாணத்தில் தலைவியை நினைவுபடுத்தும் எனச் சொல்கிறார் தோழி

இதேபோன்ற காட்சி, தலைவியை எவ்விதமாக தலைவனுக்கு நினைவூட்டுகிறது என்பதைப்பற்றி சங்ககால ஆண்பாற்புலவர்களின் பாடல்கள் சில உள்ளன.  

தலைவியின் கூற்றாக அமைந்த ஆலந்தூர்கிழாரின் குறுந்தொகைப் பாடல்,

கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே. “(112 )

இந்தப்பாடல், “மரத்தின் கிளையை பெரிய யானை வளைத்து முறித்து உண்கிறது. ஒடிந்த கிளையானது முழுவதுமாக முறிந்து நிலத்தில் விழாமல், நார் மிகுந்து வழியும் நீருடன், மரத்திலிருந்து துண்டிக்கப்படாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது. முற்றிலும் ஒடிந்து வாடி உலராமல், நீர்ப்பற்றுள்ள நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் தன்மையும் உள்ளது. இதைப்போல தலைவியின் நலன் தலைவனால் முற்றிலும் உண்ணப்படாமலும், பழைய நிலைக்குத் திரும்ப இயலாமலும் தழைத்து துளிர்க்கும் காதலுடன் இருக்கிறாள் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. ஊராரின் தூற்றுதலுக்கு அஞ்சினால் தலைவன் மேலுள்ள காமத்தை விடவேண்டும். காமத்தை விடவேண்டும் என்றால் தலைவி தன்னிடம் எஞ்சியிருக்கும் நாணத்தை விடவேண்டும். நாணத்தையும் விட இயலாமல் காமத்தையும் விட இயலாமல் இருக்கும் தலைவியின் நிலையைப் பேசுகிறது.

பிரிவின் துயரைப் பேசுவதற்காக “யா மரம், யானை” ஆகிய காட்சிப்படிமங்களுடன் அமைந்த மற்றுமொரு ஆண்பாற்புலவரின் பாடல் உள்ளது. தலைவன் விரைவில் திரும்பி வந்துவிடுவான் எனக்கூறி தலைவியை தோழி ஆற்றுவிக்கும் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் குறுந்தொகைப்பாடல்

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.”(
37)

 இவன் சென்ற வழியில் ஆண்யானை ஒன்று தன்னுடைய பெண் யானையின் பசியைப் போக்கயாஎன்னும் மரத்தின் பட்டையை  உடைத்து, உரித்து அதிலுள்ள ஈரத்தைப் பருகச் செய்கிறது. இந்தக்காட்சி தலைவனின் நெஞ்சைத்தொடும். அவன் உன்மீது பெருங்காதல் கொண்டவனாக இருப்பதால்  திரும்பி வந்து விடுவான்.
சங்ககாலம் என்பது நிலமும் பொழுதும் அது சார்ந்த வாழ்வும் என்பதான இயற்கையோடு இணைந்த வாழ்வு. முதற்பொருளான நிலமும் காலமும் சங்ககால வாழ்வியலைக் கட்டமைத்திருக்கிறது. இதனைப்போலவே அந்தந்த நிலத்தில் காலத்தால் தோன்றியவற்றை கருப்பொருள்கள் என்பார்கள். அதாவது ஒவ்வொரு நிலத்திலும் உள்ள தெய்வம், மனிதர், பறவை, விலங்கு, ஊர், நீர், மரம், பூ, உணவு, இசை, தொழில் போன்றவைதான் அந்தந்த நிலத்தின் கருப்பொருள்கள். இவையே அந்தந்த நிலத்தில் வாழ்கிற மக்களின் அக ஒழுக்கங்களைக் கட்டமைத்திருக்கின்றன.
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பாடல்களில் வருகிற யாமரம் தொடர்ந்து பல சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தமரம் பாலை நிலத்திற்கு உரியது. இந்தயாமரம் யாஅம், விளாம்,  மரா, சாலம், குங்கிலியம், ஆச்சாஎனவும் கூறப்படுகிறது. இம் மரத்தின் பட்டை நீர்ப்பசை மிக்கது.
யாமரம், பௌத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில்சாலம் மரம்எனவும், சிற்பக்கலையில்ஆச்சாஎனவும், மருத்துவக் குறிப்புகளில்குங்கிலியம்எனவும் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் தம் பெண்ணிடத்து அன்பு வைத்து காக்கிற ஆணின் மனதைச் சொல்கிற குறியீடாகப் பயன்பட்டுள்ளது. ஒரு மரம் அதனுடைய  பயன்பாடு காரணமாக வெவ்வேறு நிலத்தில் வெவ்வேறு பெயர்களினால்  அறியப்படுகிறது. பெண்களின் தனித்த இயல்புகளை அவள் வாழ்கிற நிலத்தின் சூழலும் நிர்ணயிக்கிறது. பெண்களும் இந்தயாமரத்தினைப் போல வெவ்வேறு பெயர்களில் அறியபட்டாலும் பாலையில் வளரும் இந்தமரத்தின் ஈரத்தினைப் போன்ற அன்பினை அவளுடைய ஆணின் தாகம் தணிப்பதற்காகத் தன்னிடத்தில் தக்க வைத்திருக்கிறாள்.
    
ஆலந்தூர் கிழாரின் பாடலில், “யாமரத்தின் கிளையை உடைகிற யானையானது தனக்குப் போதுமான அளவிற்கு இலைகளைப் பறித்து உண்ணுகிறது யானை. மரத்தின் கசிந்து வழியும் ஈரம், தலைவியின் ஏக்கமும் விருப்பமும் முற்றிலும் தணிக்கப்படாததை மறைவான பொருளாகச் சொல்கிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடலில், தலைவியின் தவித்து தகித்திருக்கும் நிலையை தணிப்பது தலைவனின் கடமையென உணர்த்தப்படுகிறது. இந்த இரண்டு ஆண்பாற் புலவர்களின் பாடல் வழியாக சொல்லப்பட்ட பொருளில் உடன்பட்டும் சற்று மாறுபட்டும் தலைவியின் நிலையை தோழியின் கூற்று வழியாக ஊண்பித்தையார் பேசுகிறார்.

 “வினையே ஆடவர்க்கு உயிரே“  என்கிற கூற்றினை பெண் மதிக்கிறாள். இந்தக்கூற்றின் முழுமையாக பொருளை ஒரு ஆண் உணர்ந்துகொள்ளும்படியாக பெண்ணே செயல்படுகிறாள். குடும்பம், சமூகம் சார்ந்து ஆண் செய்து முடிக்கவேண்டிய கடமைகள் ஏராளமாக உள்ளன. அதற்கான கவனக்குவிதலை அவனுக்கு உருவாக்குகிறவள் பெண்தான். ஒரு எண்ணம், செயல் வடிவம் பெறுவதற்கும் அவனுடனிருந்து வழிப்படுத்துவதும் அவள்தான்இவ்விதமான பெண்ணின் செயல்பாடுகளை ஊன்பித்தியாரின் இந்தப்பாடல் குறிப்பினால் உணர்த்துகிறது

“தலைவர் மேற்கொண்டிருக்கும் செயல் முடியாமல் அவர் திரும்ப மாட்டார்” என்று தோழி சொல்வது தலைவிக்கு அல்ல, “சென்ற காரியம் முழுமையடையாமல் திரும்பாதே” என தலைவனுக்குச் சொல்லுகிற குறிப்பும் இந்தப்பாடலில் உள்ளது.  “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்என்பதற்கு பொருள் ஒரு பெண்ணின் காத்திருப்பும் உள்ளது. வினை முடிந்தவுடன் அந்த வெற்றியை அவளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற உந்துதல் ஆணுக்கு இருக்கிறது. இவ்வாறாக ஒரு ஆண்  செயலூக்கம் மிக்கவனாக உருவாக பெண்ணின் மனமும் உடலும் அவனுடனே கூட இருந்து செயல்படுகின்றன.

அதிகம் எழுதாதபோதும் அபரிமிதமான  நகையுணர்வு கொண்ட தனது உரையாடல்கள் மூலமாக தனி கவனம் பெற்றவர் ஆபிதின். பொருள் தேடும்பொருட்டு குடும்பத்தைப்பிரிந்து அரபுநாடுகளில் அவதிப்படும் இஸ்லாமிய கணவன்மார்கள்தான் இவருடைய பெரும்பாலான கதைகளின் மையப்பாத்திரம். அவர்கள் தங்களது துயரங்களை எவ்வாறு ஆற்றியிருக்கிறார்கள் என்பதே கதைக்கான களம். ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் என்கிற இவரது கதையில், வளைகுடா யுத்ததின் போது உயிருக்குப் பயந்து நடுங்கும் கணவன் இங்கு ஊரிலிருக்கும் மனைவியோடு தொலைபேசியில் பேசுகிறான். அவனது மனைவி, ஊருக்கு வந்திருங்க மச்சான் அல்லா இருக்கிறார் நமக்கு.. என்பார். ஆனால் அந்த ஆசுவாசமும் ஆறுதலும் ஒரு நொடிதான். அடுத்த கணம் அவளே,  “நீங்க வந்திட்டா நம்ம புள்ளைங்க கதி என்பாள். பொருள் ஈட்டுதலின் பொருட்டு தன் உறவினர்களை, ஊரை, நாட்டைவிட்டு அந்நியநிலத்தில் உழலும் எத்தனையோ தலைவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்களின் இயக்குவது குடும்பநலன் என்கிற முனைப்பே ஆகும்.

தமிழ்த்திரைப்பட வரலாறு பக்திக்கதைகள், மாயாஜால மந்திரக்கதைகள் என்று தொடங்குகிறது. அதற்குப்பிறகு வெகுஜனப் பரப்பின் கதைவெளிக்குள் திரைப்படங்கள் உருவாகின. இந்த வெகுஜனப் பரப்பில் வெற்றிபெற்ற பெரும்பாலான திரைபடங்களில் கதாநாயகனாக வருபவர்கள் தத்தியாக, கோழையாக, கல்வியறிவு இல்லாதவனாக, வெற்றிபெற இயலாதவனாக, தொடர்ந்த தோல்வியில் தளர்வுற்றவனாக, தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக, எதிர்மறை எண்ணங்கள் கொண்டவனாக, மனப்பிறழ்வு கொண்டவனாக, ஊதாரியாக, குடிகாரனாக, பெண் பித்தனாக, அகம்பாவம் கொண்டவனாகக் காட்டப்படுகிறார்கள். இப்படியான எதிர்மறை குணம் கொண்ட ஆண்களைக்  காதல் செய்து அல்லது திருமணம் செய்து  அவர்களை நல்வழிப்படுத்துகிற கதாநாயகிகளைத் தமிழ்த் திரையுலகம் அடையாளம் காட்டுகிறது. அவனுக்காக தன்னை தியாகம் செய்து அவனை  சமூகத்தின் அடையாளமாக உயர்த்த ஒரு பெண் செயல்படுகிற கதைகளே பெரும்பாலும் வெற்றிபெறுகின்றன. இவ்வகையான கதைகள் சரியா தவறா அல்லது உண்மையைத் தான் சொல்கின்றனவா என்பன போன்ற வாதங்களை எல்லாம் கடந்து நிஜ வாழ்விலும் இவ்வகையான மனிதர்களைச் சந்திக்க முடிகிறது.

சங்ககாலம் தொட்டு இன்று வரையில் அவன் மீதான காமத்தை விட்டுவிட இயலாமலும், நாணத்தை விட்டுவிட இயலாமலும் தவித்திருக்கும் பெண்ணின் தயக்கத்தின் மீதே ஆணின் வாழ்வு இயங்கிக்கொண்டிருக்கிறது. அவள் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே அந்த ஆண் இயக்கம் மிக்கவனாக மாறுகிறான். தொடங்கிய காரியம் முழுமையும் நிறைவடையாமல் தலைவியைத் தேடமாட்டார்  என்று திரும்பத்திரும்ப ஒரு பெண் கூறுவதன் மூலம் ஆணின் செயலை முழுமையும் நிறைவடைய வைக்கிறாள். ஆணின் வெற்றியை தன்னுடைய அடையாளமாக பெண் கருதுகிறாள். எனவே வினைமேற் சென்ற தலைவனின் பிரிவை தலைவி தாங்கியிருக்கிறாள். அவனது  செயல் முழுமையாக நிறைவதற்கு இவளது காத்திருப்பும் வலிமை சேர்க்கிறது. இவ்வாறாக செயலூக்கம் மிக்கவனாக அறியப்படுகிற ஒவ்வொரு ஆணின் உள்ளிருந்தும் அவனை ஒரு பெண் இயக்கிக்கொண்டிருக்கிறாள். “யாமரம்போல நீர்மையையும் தனக்குள் வைத்திருக்கிறாள். சிற்பம் செதுக்கப்பயன்படும் அம்மரத்தின் உறுதியையும் கொண்டவளாகவும் இருக்கிறாள்.

அன்பில் தோய்ந்து கரைந்துருகும் மனதைப்பற்றிய கவிதைகள் காலங்காலமாக எழுதப்படுகின்றன. கவிஞர்  தேன்மொழி தாஸின் கவிதை ஒன்று காணுகிற காட்சிகளின் வழியே பிரிவின் துயரை வெளிப்படுத்துகிறது.

 வானவில் நீண்டு  
பள்ளத்தாக்கை ஊடுருவி

சிகரத்தை சிகரத்தோடு
தைத்துக் கொண்டிருந்தது

மரஅணில்களின் காதலில்
சிதறிய கல்லின் ஓசை
வண்ணத்தில் பாய்ந்து
ஏழு ஸ்வரமானது

நீ தேவதேவன்
என் கண்களின் நிறம் கசக்கி
மேகங்களில் ஏற்றி
ஓட்டிக்கொண்டு போய்விட்டாய்

காட்டுத்தீயாய் பரவுகிறது
பூ மைனாக்கள் பேசி நிறுத்தும்
இடைவெளிகளில்
இடரும் நினைவுகள்.“

இந்தக்கவிதையில் தலைவனைப் பிரிந்து தனிமையிலிருக்கும் தலைவி, அவள் காணும் காட்சிகளின் மூலம் அவனை நினைக்கிறாள். கருத்தும் செயலும் ஒன்றென இருக்கும் அவர்களிருவருக்கும் காண்கிற யாவும் ஒருவருக்கு மற்றவரை  நினைவூட்டும். தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் பெண்ணின் தனிமையைப் பிரதிபலிக்கும் இக்காலக்கவிதை.  
---------------------------------------------------------------------------------------------------------------------------------------- 


              
இவர் பாடிய பாடல் குறுந்தொகையில் ஒன்று மட்டும் கிடைத்துள்ளது . பாடல் எண்: 232
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: