Thursday 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 
17 -கச்சிப்பேட்டு நன்னாகையார் ..





ஒரு பெண் தனிமையிலிருக்கிறாள்:

“உலைவாங்கு மிதிதோல் போல

காதல் வயப்பட்ட நிலையில் பெண்ணொருத்தி அனுபவிக்க நேரிடும்  தனிமையென்பது, முற்றிலும் அகவயமானது. வேறு எது ஒன்றினாலும் பதிலீடு செய்யப்பட முடியாதது. தலைவனைத் தவிர வேறு எதனாலும் ஒருபோதும் ஈடு செய்ய இயலாதது. சிலநேரங்களில் தலைவன்கூட அவளின் அந்தத்தனிமையை போக்கவியலாது. ஏனெனில் அவனிடம்கூட தன்னைத் திறந்து காட்டிவிட அவளுக்குச் சொற்கள் உதவுவதில்லை. அப்பொழுதுகளில் அவள் தனதேயான ஏக்கத்துடனும்  அது சார்ந்த நினைவுகளுடனும் தனித்திருக்க விரும்புவாள். ________________________________________________________________________________

பிறந்த இடத்தை விட்டு பொருளீட்டுதலின் பொருட்டு வெவ்வேறு இடங்களுக்குப் பெயர்ந்து வசித்தாலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் சொந்த ஊரைப் பற்றிய நினைவுகள் அழுந்தப்பதிந்திருக்கும். பூர்வீகத்தைப் பற்றி நினைத்தவுடனே ஆறு, குளத்தங்கரை, கம்மாக்கரை, கோவில் ஆலமரம், ஓடித்திரிந்த வீதிகள் என புற்றீசல் போல நினைவுகள் ஒவ்வொன்றாய் வந்துக்கொண்டே இருக்கும். அவற்றுள் ஒரு ஊரின் வாசனைக்கும் ஒரு தனித்த இடம் உண்டு. எல்லா ஊர்களும் தங்களுக்கென தனித்த வாசனையைக் கொண்டிருக்கின்றன. அம்மாவை நினைத்தவுடன் அவளுடைய வாசம் உணரமுடிவதுபோல சொந்த ஊரைப்பற்றிய சிந்தனையில் அவ்வூரின் வாசமும் பதிந்திருக்கும்.  அவை, தெருப்புழுதியின் வாசம், எண்ணெய் செக்கு ஆட்டுகிற வாசம், கரும்புப்பால் காய்ச்சுகிற வாசம், மஞ்சள் வாசம், வேர்கடலையின் பச்சை வாசம், நெல் அவிக்கிற வாசம், வீட்டுச் சுவற்றுக்குப் பூசுகிற நீலம் கலந்த சுண்ணாம்பு வாசம் என ஏதாவது ஒன்று நிச்சயம் நினைவில் இடறி, நாசியில் நுழையும். எனக்கு பால்யத்தின் வாசனையாக நினைவில் பதிந்திருப்பது, எங்கள் ஊர் காற்றில் பரவி நிற்கும் கொல்லன் பட்டறையின் அனல்நெடி.

லாடக்காரர்ராசு வைத்திருந்த பட்டறையின் செந்தழலைப் பார்த்தவர்களின்  நினைவுகளில் அந்தத்தழல் எப்பொழுதும் கனன்றுக்கொண்டே இருக்கும். அவரது பட்டறையில் இருந்த உலைத்துருத்தி குழந்தைகளின் ஆகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அந்தத்தெருவிலுள்ள குழந்தைகள் அங்கே போய் வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். உலைத்துருத்தி வழியாக அழுத்தமாக செலுத்தும் காற்று, பள்ளத்தில் குவித்து வைத்திருக்கும் விறகுக்கரியைத் தனலேற்றும். வெப்பம் கனிந்திருக்கும் அந்த கனலுக்குள் புதைந்திருக்கும் அரிவாள் செய்வதற்கான இரும்பும்  கனன்று சிவந்தவுடன் உலைக்கல்லின் மீது வைத்து, கனத்த சம்மட்டியால் அடித்து வளைக்கப்படும். அந்த நெருப்புக் கனலிலிருந்து அரிவாள், கடப்பாரை, மாட்டின் கால்களுக்கு கட்டுகிற லாடம் என உருவாவதைப் பார்க்கப்பார்க்க அத்தனை ஆச்சர்யமாக இருக்கும். லாடக்காரர் பழுத்த இரும்பை சம்மட்டியால் அடிக்க அவருடைய மனைவியோ மகளோ துருத்தியை மிதித்துக்கொண்டே இருப்பார்கள். இரும்பை உருக்கி வளைத்துச் செய்யப்படுகிற இந்தக்கருவிகளைத் தயாரிக்கும் மனித உழைப்புக்குத் துணையாக இருப்பது மாட்டுத்தோலினாலான துருத்தி. காற்று எப்போது உள்ளே செல்கிறது என்றறியும் முன்பாக நெருப்புக்கு நேராக இருக்கும் ஒற்றைத்துளையின்  வழியாக அக்காற்று வெளியேறும். காற்று நுழைந்து அடிபட்டு வெளியேறும் துருத்தியின் ‘‘தட் தட்’’ ஓசை சில நேரங்களில் இதயத்துடிப்பு போலவே கேட்கும் அவ்வோசை கேட்பவர் பலருக்கும் பிடித்ததாக இருக்கும்.

எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள ஏழெட்டு கிராமங்களுக்கும் கடப்பாரை, கொழு, கூந்தாலம், கோடரி, அரிவாள், லாடம், லாடம் கட்டப் பயன்படும் ஆணி ஆகியவை இன்றுவரை எங்கள் கிராமத்தில்தான் தயாராகின்றன. மாட்டுக்குப் பயன்படுத்துகிற லாடம் குழிக்காடி, நெட்டுக்காடி என இரண்டு வகையில் செய்யப்படுகிறது. நவீனமயத்தின் பயனாக, இயந்திரங்களைப் பயன்படுத்தியும் லாடங்கள் செய்யப்படுகின்றன. நவீனவகை லாடங்கள் பொருத்திய மாடுகள், பத்து கிலோமீட்டர் கூட தொடர்ந்து நடக்க இயலாது என்கிறார்கள் எங்கள் ஊர் விவசாயிகள். ஒரு ஊருக்கான விவசாயக்கருவிகள் தயாரிக்கப் பயன்படும் கொல்லன்பட்டறையை விட பல ஊர்களுக்காக இயங்கும் பட்டறைகளில் எப்போதும் வெப்பம் கனன்றபடியே இருக்கும். வெப்பம் கனிந்த இரும்பை நீரில் அமிழ்த்தும் வாசனையும் கொல்லனின் வியர்வையும் இந்த கிராமத்திற்கான வாசனைகளில் மற்றும் ஒன்றாக இன்றுவரையிலும் இருக்கிறது. தொன்றுதொட்டு நடந்துவரும், ஜல்லிக்கட்டும், ரேக்ளா பந்தயமும் இந்த ஊரின் மரபுவழியின் தொழில் பற்றிய குறிப்புணர்த்தும்.  


முனைவர் ப.சரவணன் தன்னுடைய சங்ககாலம்என்ற நூலில், சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட உலை, துருத்தி, இரும்புக்கருவிகள்  பற்றிக் குறிப்பிட்டுள்ளார். உருக்கி வார்க்கப்பட்ட இரும்பினைத் தேவைக்கு ஏற்ப அடித்து வளைத்து கருவிகள், பொருட்கள் செய்யத் சங்கத்தமிழர்களுக்கு நான்கு கருவிகள் பயன்பட்டன. உலைக்கல், சம்மட்டி, கொறடு, பனைமடல் ஆகிய பொருட்களின் பயன்பாட்டினை சங்கப்பாடல்களில் மூலம் அறியமுடிகிறது. சங்ககாலத்தில் இரும்பை பொன்என்று கூறினர். வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், ஐயவித்தூலம், கதை, கவை, கல்லிடுகூடை, கணையம், கவசம், குத்துவாள், கொடுவாள், கைவாள், கழுகுப்பொறி, மழுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிப்பாலம், ஞாயில், அறிதூற்பொறி, இருப்புமுள், எரிசிறல், கழு, கழுவிலூகம், கல்லமிழ் சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் போன்ற இரும்புக்கருவிகள் சங்கக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.


பண்டைய போர்ச் சமுதாயத்தின் நீட்சியாகத்தான் இன்றைக்கும் கிராமத்துக்கோவில்களில் வேல், திரிசூலம், அரிவாள் போன்றவை நேர்த்திக்கடனாக படைக்கப்படுகின்றன. போருக்காகவும் விவசாயத்திற்காகவும் இத்தனை வகையான கருவிகள் தேவைப்பட்டிருக்கும் சங்கக் காலத்தில், இவை அத்தனையையும் செய்யத் தெரிந்தவர் இருப்பதும் அதனைச் சிறப்பாக செய்வதும் முக்கியமானது என்பதனாலேயே வேல் வடித்துக் கொடுப்பது கொல்லருக்குக் கடனேஎன்கிறது புறநானூறு. மேலும் “கொல்லன்” என்கிற அடைமொழியுடன் சங்கப்புலவர்கள் பலர் உள்ளனர்.


ஒரு ஊரில் வாழும் மக்களுக்கு, இத்தனை வகையான கருவிகள் தேவைப்பட்டிருக்கின்றன. இவற்றை சுற்றுவட்டார ஊர் மக்களுக்கும் சேர்த்து ஒரு கொல்லன்பட்டறையில் செய்தால் அந்த ஊரும் கொல்லன்பட்டறையும் ஓயாமல் இயங்கிக்கொண்டே இருக்கும். அந்தக் கொல்லன்பட்டறையில் பயன்படுகிற துருத்தி மிதிபட்டுக்கொண்டே இருக்கும். உலையில் வெப்பம் கனன்றுகொண்டே இருக்கும். கொல்லன், சம்மட்டியால் அடித்தபடி இருக்கிற ஓசை குறிப்பிட்ட இடைவெளியில் கேட்டபடி இருக்கும். இப்படி சதாப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் உலைக்கலத்தின் துருத்திபற்றி குறிப்பிடுகிற கச்சிப்பேட்டு நன்னாகையாரின் குறுந்தொகைப்பாடல் ஒன்று,

தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல் 
பழுமரம் படரும் பையுள் மாலை 
எமிய மாக ஈங்குத் துறந்தோர் 
தமிய ராக இனியர் கொல்லோ 
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த 
உலைவாங்கு மிதிதோல் போலத் 
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.


மாலை வந்ததன் அறிகுறியாக இரவாடிகளான வௌவால்கள் பழுத்தமரம் தேடிச் செல்லத் தொடங்குகின்றன. தனியாக இருப்பவருக்குத் துன்பம் தருகிற மாலைப்பொழுது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கும் தலைவனுக்கு மட்டும் இன்பம் தருவதாக இருப்பது சாத்தியமா” எனத் தோழியிடம் கேட்கிறாள் தலைவி. ஒரு ஊருக்கு மட்டுமல்லாமல் ஏழு ஊர்களுக்கும் உரிய ஆயுதங்களையும் உழவுக்கருவிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் கொல்லன்பட்டறையைப் பார்த்து வளர்ந்த தலைவி அவள். அல்லது அவளே கூட கொல்லன் மகளாக துருத்தி மிதித்திருக்கலாம். அதனால்தான் ஏழு ஊருக்கும் சேர்த்து மிதிவாங்கும் துருத்தியைப்போல தன்னுடைய நெஞ்சம் தலைவரம்பு அறியாத ஆற்றாமை மிகுந்து வருந்துகிறது” என்கிறாள் தலைவி.

தோல்துருத்தி ஓயாமல் ஏழூர் மக்களின் பார்வையில்பட்டு, மிதி வாங்கிக் கொண்டே இருப்பதைப்போல தலைவனின் பிரிவால் ஏற்படும் பசலையினால்  மட்டுமன்றி, வீட்டிலிருப்பவர்களின் சந்தேகப் பார்வைகள், ஊராரின் வம்புப்பேச்சுக்கள், ஒருவேளை தலைவன் திரும்பாமலே இருந்துவிட்டால் தன்னுடைய நிலை என்னவாகுமோ என்ற தன் நெஞ்சின் தவிப்பு ஆகிய பல்வேறுபட்ட  துயரத்தினால் தான் அனுபவித்து வரும் அலைக்கழிவுகளை மறைமுகமாக உணர்த்துகிறாள் தலைவி.

பறவைகளைப் போலன்றித் தாவித்தாவி உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து செல்லும் இயல்பு கொண்டவை வௌவால்கள். சன்னமான துணியால் நெய்யப்பட்டது போன்ற இறகுகளைக் கொண்டு மென்மையாக பறந்து செல்பவை. பகலெல்லாம் தலைக்கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் வௌவால்கள் கூட பழுத்த மரங்களைத் தேடிச் சென்றுவிட்டன என்று தலைவி குறிப்பிடுவது மெலிதான சோகத்தைக் கிளர்த்துகிறது. இரவாடியான வௌவால் தனக்கான உணவென கனிமரத்தை நாடுவது போல தலைவனும் தன்னை நாடிவரவேண்டாமா என நினைக்கிறாள். அதனால்தான் தலைவனைப் பிரிந்திருப்பதால் அவள் வருந்துவதாக சொல்லவில்லை, தன்னைப் பிரிந்திருப்பதால் தனித்திருக்கும் தலைவன் வருத்துவான்என்று நினைத்து அவள் வருந்துவதாகச் சொல்கிறாள்.


காதல் வயப்பட்ட நிலையில் பெண்ணொருத்தி அனுபவிக்க நேரிடும்  தனிமையென்பது, முற்றிலும் அகவயமானது. வேறு எது ஒன்றினாலும் பதிலீடு செய்யப்பட முடியாதது. தலைவனைத் தவிர வேறு எதனாலும் ஒருபோதும் ஈடு செய்ய இயலாதது. சிலநேரங்களில் தலைவன்கூட அவளின் அந்தத்தனிமையை போக்கவியலாது. ஏனெனில் அவனிடம்கூட தன்னைத் திறந்து காட்டிவிட அவளுக்குச் சொற்கள் உதவுவதில்லை. அப்பொழுதுகளில் அவள் தனதேயான ஏக்கத்துடனும்  அது சார்ந்த நினைவுகளுடனும் தனித்திருக்க விரும்புவாள். ஏழு ஊர்களுக்கு தளவாடங்களைச் செய்கிற பட்டறையின் பரபரப்பு அவள் மனதில் பதிய மறுக்கிறது.  மாறாக மிதிபடுதலில் துவலுகிற உலைத்துருத்தியின் தவிப்பை, காதல் கொண்ட அவள் மனத்துக்கு இணையாக்குகிறாள்.

ஜப்பானினில் ஹையன் காலகட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண்கவிஞர் “இசுமி ஷிகிபு”( கி.பி.976) பிரிவேக்கத்தைத் துல்லியமாகச் சுட்டும் அவருடைய சிறிய கவிதை ஒன்று, 

“நம் சந்திப்பினூடே
கோயில் மணிச்சத்தத்தை
நான் கவனிக்கிறேன்.
இரண்டு மணிச் சத்தத்திற்கு
இடைப்பட்ட நேரத்தில்கூட
உன்னைநான் மறக்கமாட்டேன்.“

இக்கவிதையைப் படிக்கும்போது  இனம், மொழி, கலாச்சாரம் இவற்றைக் கடந்தும் பெண்கள் பிரிவை ஒன்றுபோலவே உணர்கிறார்கள் என்று தோன்றுகிறது.

மேலும், காதலில் தன்னை இழக்கிற மனமென்பது காலத்தின் எந்தவிதமான  வரையறைக்கும் உட்பட்டதல்ல. அகவயமான உணர்வுகளில் மரபுவழியில் இப்போதும் வாழ்கிற பெண்ணின் மனதை கவிஞர் மதுமிதாவின் ‘நினைவுக் கடத்தல்’ என்று தலைப்பிட்ட கவிதையில் குறிப்பிடுகிறார்.

சந்திரன் முகம் காட்ட விரும்பும்
சந்தியா வேளை
பூங்காவின் மரங்கள் முழுக்க
தொங்கிக் கிடந்தும் பறந்தும்
கூட்டம் கூட்டமாய் வௌவால்கள்
கனி நிறைந்திருக்கும் மரம் நாடி
கழுகுகளைப் போலப் பறக்கின்றன
நீ இருக்கும் திசை நோக்கியே
என் நினைவுகளையும் கடத்திக்கொண்டு

காற்று மென்மையாக வருட
காற்றை ஊடுருவி மேலேபார்க்கிறேன்
நிலவில் ஒளிர்ந்து ஏதோ சேதி தருகிறாய்
வலசை செல்லும் பறவைகளைக் கண்டு
நீயும் அங்கே தவிக்கிறாயோ என் நினைவில்

பாலையின் வெக்கையுடன்
என் நினைவின் வெம்மை மட்டும்
உன்னைத் தீண்டிவிடக்கூடாது

உன் நினைவாலேயே உன் நினைவினை
அணைத்து ஆற்றுப்படுத்திக் கொள்வேன் எனினும்
உன் நினைவில் எழும் பெருமூச்சு
கொல்லனின் உலை துருத்தி போல்
தீயை வளர்த்து சுட்டெனைச் சாய்க்கிறது

காதலின் தனிமைத்துயர் என்பது ஏதோ சங்ககால விஷயம் மட்டுமல்ல. எத்தனை விதமான தகவல் தொடர்பு சாதனங்கள் உருவானபின்பும் இன்றைய நவீனப்பெண்ணும் வேதனையை உணர்கிறவளாக இருக்கிறாள்.  மேலும் காதல்வயப்பட்ட மனம் எப்பொழுதும் தனிமையை விரும்புகிறது. காதலில் தவித்திருக்கும் பெண்ணின் தனிமைக்கு அவளுடைய காதல் நினைவுகள் மட்டுமே துணையாக இருக்கமுடியும்

இவரின் பாடல்கள் ஆறு குறுந்தொகையில் உள்ளன. ( 30,172,180,192,197,287 )


No comments: