Saturday 14 September 2013

அகக்காரணி :



காற்று வெயில் மழை
ஒற்றைச் செயல் என்கிறாய்

பகலின் திறவுகோலை பறவைகளிடமிருந்தும்
பெற்றுக்கொள் என்கிறாய்
கனவுகளை கண்ணுற
அடர்காட்டின் வற்றாச்சுனையில் நீருந்து என்கிறாய்
நானோ
குளிர்தடாக மொக்கில் அடர்ந்திருக்கும் பனித்துளி சுவைத்து
பரிச்சயமற்ற நதியில் பயணித்தேன்

காற்று மழை வெயில்
புறக்காரணிகள் என்று தெரியும்
என்னிடத்தில்
ஒரு பறவையின் சிறகுகளை அணிவிக்கவும்
ஒரு கடலின் அலைகளை உடுத்திக் கொள்ளவும்
கூடுமெனில்
என் கலக்கமுற்ற இரவுகளில்
என்னுள் நீரூற்றெனச் சுரந்து
இந்தச் சின்னஞ்சிறு இதயத்தைச்
சீரமைத்து விடமாட்டீரா என்ன.

courtesy : Paintings -Diana Riukas

No comments: