Saturday 14 September 2013

யாரோ பின் வரும் பாதை . . .



ஆற்றங்கரையோரம்
புளியம் பூக்களின் இளஞ்சூடு பாதங்களில் படர
நீ நடந்து வருகிறாய்
திசை பார்க்கிறேன்

வேறு யாரோ
ஆற்றில்
பெருமீன்கள்
தன் கண்களின் வழியே
குட்டி மீன்களை வளர்த்தெடுக்கின்றன
மீன்களின் பாதையை வரையத் துவங்குகிறேன்

அந்தி முடிகிற தருணத்தில்
காகங்கள் கரைகின்றன
காத்திருப்பின் பொருட்டு
என் சேமிப்பில் கை நிறைய இருந்தன
காலடி ஆற்று மீன்களின் வரைபடம்

நீரின் மேல்
புகையென படிந்து நகர்கிற
பனியில்
நீ நடந்து வருகிறாய்
திசை பார்க்கிறேன்

வேறு யாரோ

தப்பிய ஆடுகளைத் தொடர்ந்து
இடையர்களின் பேச்சரவம் கேட்கிறது

விளக்கேற்றப்பட்ட மலைக்கோவிலின்
திசையில் நகர்கிறது ஆட்டு மந்தை

ஆடுகளைத் தொடர்கிறேன்
மீன்களை அழித்து விட்டு

ஆற்றின் மறுகரையில்
தூண்டிலிடுகிறார்கள்
என் மீன்களைப் பிடித்துவிட

வேறு யாரோ .

நன்றி -ஓவியம் Pr Rajan

No comments: