Saturday 23 June 2012

கேள்வியும் பதிலும்…


மண் கடவுளென்றேன்
கடல் ஒரு தேவதையென்றேன்
சிப்பியும் அதனுள் வளரும் முத்துவும் எதுவென்று கேட்ட மகள்
சொல்கிறாள்
அது மகிழ்ச்சியைத் தருகின்றதென

காற்று இப்போது தோழமையோடு இருக்கிறது என்றேன்
தோழமை என்றால் என்னவென்று கேட்டவள்
சொல்கிறாள்
என் தோழியை விடவா இந்தக் காற்று
தோழமை தந்துவிடப் போகிறதென

தாகம் மிகுந்த வேளையில்
நீர் அருந்தினோம்
எவ்வளவு ருசி எவ்வளவு ஆனந்தமென சொல்லிக்கொண்டேன்
ஆனந்தம் என்றால் என்னவென்று கேட்டவள்
கேட்கிறாள்
அதுதான் இவ்வளவு சுதந்திரத்தைத் தருகிறதாவென... 

No comments: