Saturday 1 June 2013

நெய்த உடையில் அவிழும் காலம். . .




இந்தக் குளிர்காலத்தை
மஞ்சள் நிறப்போர்வையை விரித்து
வரவேற்க
இப்பொழுதே ஆயத்தமாகிறேன்

தூர தேசத்திலிருக்கும்
அவன்
வரும் நாட்களுக்காக
நெய்யத் துவங்கியிருப்பான்

அதன் நிறம்
நான் அறியாதது

நெய்த உடையைப் போர்த்திக் கொண்டதும்
வயதின் தொலைவு
உடலிலிருந்து அவிழத் துவங்கிவிடும்
என்பது
நான் அறிந்ததே

குளிர்காலம் இப்படியிருக்கக் கூடும்
என
ஊற்றெடுக்கிறது
பச்சைப் புல்வெளியின் சுனை

உறைந்த தண்ணீர் எங்கிருந்து புறப்படுகிறது
என்பதை அறிகையில்
நீலமும் பச்சையும் கலந்த விளக்கொளியில்
நீரூற்றுக்களுக்கு மத்தியில்
தனித்திருக்கும் அவன்
நெய்துகொண்டிருக்கும் போர்வையின்
வண்ணம் உணர்வேன்

அப்பொழுது
தரிசு நிலத்தில்
புல் பூண்டுகளை முளைத்தெழச் செய்யும்
கல்மழையின் மேகசாலைக்குள்
பிரவேசிக்கத் துவங்கியிருப்பேன் .

No comments: