Tuesday 18 September 2012

காலம் உணர்த்திய ஆடை. . .



விருப்பம் எதுவென்று அறியாமலேயே
ஆடைகளை அணியப் பழகியிருந்தேன்
என் தேர்வு
எப்போதும் நிராசைகளோடு இருக்கிறது

காலம்
உடலில் போர்த்தியிருக்கும் ஆடைகளென
காற்றில் நடனமாடுகின்றது
அல்லது
உயிராய் உடலில் மிதக்கிறது

நிரந்தரமான ஆடையொன்று
காத்திருக்கிறது என்பதை அறிந்தபடி
அதை நெருங்கத் துவங்குகையில்

எனக்காய்
யார் யாரோ தேர்ந்தெடுத்த ஆடைகள்
ஒவ்வொன்றாக கழன்று நதியில் வீழ்வதை
பார்த்தபடி
மலர்கின்றன

தலையில் சூடியிருக்கும்
மல்லிகை மொட்டுகள்.

No comments: