Sunday 2 October 2016



பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..


29. வெண்பூதியார் :




ஒரு பெண்ணின் எழில் தனித்தலைகிறது:


“யானே ஈண்டை யேனே; என் நலனே...”

“திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் புறத்தோற்றத்தைப் பராமரிப்பதை படிப்படியாகக் குறைத்துக் கொள்கிறார்கள். அதைவிடவும் தங்கள் உணவுப்பழக்கத்தைக்கூட குடும்ப உறுப்பினர்களுக்காக மாற்றிக் கொள்வார்கள். குழந்தைகளுக்காக பத்தியம் இருப்பது, கணவனுக்குப் பிடித்தமான உணவுக்கு மாறிவிடுவது, எல்லோரும் சாப்பிட்டு மிச்சமிருப்பதை கீழே போட மனமின்றி அதிகமாகச் சாப்பிடுவது என பெண்களின் உணவுமுறை முற்றிலுமாக மாறிவிடுகிறது. இவ்வாறெல்லாம் மற்றவர்களுக்காக தனது சுயத்தைக் கலைத்துக் கொள்கிற பெண்கள், தங்களை தங்களுக்காக அழகுபடுத்திக்கொள்வது என்பதையே  மறந்துவிடுகிறார்கள்.”
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அமராவதி என்கிற என்னுடைய தோழி, தான் சந்திக்கிற பெண்களுக்கு, முகம்பார்க்கும் கண்ணாடியைப் பரிசளிக்கும் பழக்கத்தை உடையவள். பெண்கள் தங்களுடைய கைப்பையில் வைத்துக்கொள்ளுமளவு மிகச்சிறியதாக இருக்கும். இப்படியொரு வினோதமான பழக்கத்தை அவளுடைய அம்மாவைப் பார்த்து உருவாக்கிக் கொண்டதாகச் சொல்கிறாள். அமராவதியின் அம்மா மிக அழகானவர். தன்னுடைய அம்மாவின் கருப்புவெள்ளைப் புகைப்படங்களைப் பார்த்து எப்போதும் ரசிப்பதுண்டு. காதில் ஜிமிக்கியும், தோள்வரை வழிந்திருக்கும் மல்லிகைச் சரமும், கண்களில் தீற்றியிருக்கும் மையும் என அம்மாவின் அழகு அவளுக்கு ஈர்ப்புடையதாகவே எப்போதும் இருக்கிறது. அம்மாவின் இடுப்பில் தானிருக்கும் புகைப்படங்களில் அம்மாதான் பேரழகியென நினைத்துக்கொள்பவள், தன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் அம்மாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வரிசைபடுத்திப் பார்ப்பது இவளுக்குப் பொழுதுபோக்கு. உண்மையில் அந்த கணங்களில், பொழுதினை சேகரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்வாள். அந்த அளவுக்கு அவளையும் அம்மாவையும் காலத்தையும் ஒப்பீடு செய்துகொண்டிருப்பாள். காலம், இருவரின் உடலிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களுக்கு உட்பட்டு அம்மாவின் ஆடையும் அலங்காரங்களும் மாறியிருப்பதைக் கணக்கிடுவாள். தன்னுடைய தாவணிப்பருவம் வரையில் அம்மாவின் அகன்ற தோள்களில் புரண்டுகொண்டிருந்த மல்லிகைச்சரம் அதன்பின்பு காணாமல் போயிருந்தது. தழையத்தழையப் பின்னலிட்டிருந்த கூந்தலும் அதன்பிறகு  கொண்டையாக மாறியிருந்தது. நீளமான நெற்றித்திலகம் வட்டமான குங்குமமாக மாறியிருந்தது. மகள் பூப்பெய்தவுடன் தன்னுடைய கால்கொலுசுகளைக் கழற்றி வைத்துவிட்ட அம்மாவை அறிந்திருக்கிறாள். தன்னை அலங்கரித்துக்கொள்கிற தன்னுடைய விருப்பங்களை மகளின் வளர்ச்சியில் ஒவ்வொன்றாகக் கைவிடுகிற காலகட்டத்தைச் சேர்ந்த அம்மா அவள்.

அம்மாவிடமிருந்து விடைபெற்றுகொண்ட சில பழக்கங்களும் உண்டு. அதில் முதலாவதாக இடம்பிடிப்பது, கண்ணாடி பார்ப்பது. திருமணம் ஆனவுடன் அம்மாவுக்காக அப்பா வாங்கிய முதல் பொருளே ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிதான். தேக்குமரச் சட்டத்தினால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அந்தக்கண்ணாடியை அம்மா நடமாடும் இடத்தில் அவளது முழுஉருவத்தையும் பார்க்கும்படியாக சுவற்றில் மாட்டி வைத்திருப்பார். இப்போதும்கூட அந்தக் கண்ணாடி, அதேவீட்டில் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அம்மா அந்தக்கண்ணாடியைப் பார்ப்பதேயில்லை.

நினைவு தெரிந்த நாள் முதலாகவே அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்ப்பதென்பது அனைவருக்குமே மிகப்பிடித்த பழக்கங்களில் ஒன்றாக இருக்கும். குழந்தைகள் வளரவளர கண்ணாடி பார்ப்பதில்கூட பால்வேறுபாடு வந்துவிடுகிறது. இளம்பருவத்தில் அடிக்கடி கண்ணாடி பார்க்கிற பழக்கம் பெண்களிடம் சற்றுக் கூடுதலான செயலாக ஆகியிருக்கும். பொதுவாக திருமணமாகி குழந்தைகள் பெற்றுக்கொண்டு தங்கள் கவனத்தையெல்லாம் குழந்தைகளிடத்திலும் கணவனிடத்திலும் செலுத்தத் தொடங்கியபிறகு கண்ணாடி பார்க்கிற பழக்கம் பெண்களிடமிருந்து தானாகவே மெல்லமெல்ல விடைபெறத் தொடங்கிவிடுகிறது. ஒரு காலகட்டத்தில் ஒருநாளில் ஒரே ஒருமுறை கண்ணாடி பார்ப்பது என்பதுகூட அரிதாகிவிடுகிறது. அப்படித்தான் அமராவதியின் அம்மாவும் இப்போதெல்லாம் கண்ணாடி பார்க்கிறாரா என்பது கூட தெரியாத அளவுக்கு தன்னுடைய புறத்தோற்றத்தில் கவனம் செலுத்தாதவர் ஆகிவிட்டார். இத்தனை பெரிய மாற்றத்தை அம்மாவிடம் கவனித்த ஒரு தினத்தில்தான் அமராவதி சந்திக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறிய முகம்பார்க்கும் கண்ணாடியைப் பரிசளிக்கத் தொடங்கினாள். குறைந்தபட்சம் தான் பரிசளித்த கணத்திலாவது முகம் “பார்க்கிற உணர்வில்” கண்ணாடியைப் பார்ப்பார்கள் என நம்புகிறாள். இந்த நவீனகாலத்திலும் கண்ணாடி பார்க்கிற பழக்கத்தைத் தொலைத்துவிட்ட பல பெண்களைக் காணமுடிகிறது. கவிஞர் எழிலரசியின் கவிதை ஒன்று இதனைப் பேசுகிறது.

“என் வீட்டுக்குக் கண்ணாடியில்தான்
என் உயரம் எனக்கே தெரியும்
எகிறிக் குதித்துப் பார்த்த நாட்கள்
தலைமட்டும் தெரிந்த நாட்கள்
புருவத்தோடு தெரிந்த நாட்கள்
வாய்வரைத் தெரிந்த நாட்கள்
திருப்தி அடையாத மனம்
தாவணிப்பருவத்தில்
உருவம் முழுக்க எதிர்பார்த்தபோது
அதட்டிய அம்மாவின் திட்டுக்கள்
சேலைக் கொசுவம்வரை
தெரிந்தபோது
கண்ணாடிமீது மிகப் பிரியமிருந்தது
இப்போது நினைவில் இருப்பதில்லை
கண்ணாடி பார்க்கும் தருணங்கள்.”

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் புறத்தோற்றத்தைப் பராமரிப்பதை படிப்படியாகக் குறைத்துக் கொள்கிறார்கள். அதைவிடவும் தங்கள் உணவுப்பழக்கத்தைக்கூட குடும்ப உறுப்பினர்களுக்காக மாற்றிக் கொள்வார்கள். குழந்தைகளுக்காக பத்தியம் இருப்பது, கணவனுக்குப் பிடித்தமான உணவுக்கு மாறிவிடுவது, எல்லோரும் சாப்பிட்டு மிச்சமிருப்பதை கீழே போட மனமின்றி அதிகமாகச் சாப்பிடுவது என பெண்களின் உணவுமுறை முற்றிலுமாக மாறிவிடுகிறது. இவ்வாறெல்லாம் மற்றவர்களுக்காக தனது சுயத்தைக் கலைத்துக் கொள்கிற பெண்கள், தங்களை தங்களுக்காக அழகுபடுத்திக்கொள்வது என்பதையே  மறந்துவிடுகிறார்கள்.

கண்ணாடி பார்ப்பதென்பது தங்களுடைய பூவையும் நெற்றித்திலகத்தையும்  சிறிதளவு திருத்திக்கொள்வதற்காக என்று மட்டும் மாறியபின்பு, கண்ணாடி முன்நின்று தங்களை ரசிக்கும் கணங்களை அவர்கள் முற்றிலுமாகத் தொலைத்திருப்பார்கள். தங்களுடைய அழகும் எழிலும் ஆண்களுக்கானது என நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகிறது. தன்னையவள் அழகுபடுத்திக் கொள்வதே கணவனாக வருகிற ஆணுக்கு கையளிக்க என்பதாக மரபுவழிப்பட்ட மனதுடன் அவளையுமறியாமல் ஏற்றுக்கொள்கிறாள். அதனால்தான் இன்றைக்கும்கூட வீட்டில் கணவன் இல்லையென்றால் நல்லதாக உடுத்திக்கொள்வதைத் தவிர்க்கிற பலருண்டு. திருமணத்திற்கு முன்பும் பின்பும் பெண்ணின் எழில் என்பது அவளுக்கானது அல்ல என்பதாகவே எந்தக்காலத்திலும் அமைந்துள்ளது.  

“தன்னுடைய எழில் என்பது தனக்கானது அல்ல” என்கிற இந்த சிந்தனையின் வேர் சங்ககாலத்தில் தொடங்கியது. ஆண்பாற்புலவர்களின் பாடலானாலும், பெண்பாற்புலவரின் பாடலானாலும் பெண்ணின் அழகும், இளமையும் அவளுக்கானது அல்ல என்றே திரும்பத்திரும்பக் கூறுகிறது. தலைவனைப் பிரிந்து துயரடையும் பொழுது தன்னுடைய அழகை தலைவி தொலைப்பதும், பசலைபடர உடல் மெலிவதுமாக இருக்கிறாள். தலைவன் கூற்றாக வெளிப்படுகிற பாடலில் கூட தலைவியைப் பிரிந்து, ஆண் மெலிவதாகவோ, அவனுடைய உடல் தோற்றம் கெடுகிறது என்றோ எங்கும் பாடப்படவில்லை. தன்னைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்துவாளே, உடல் மெலிந்திருப்பாளே என்பதாகத்தான் தலைவன் சொல்கிறான்.

சங்கப்பெண்பாற்புலவர் வெண்பூதியாரின் குறுந்தொகைப் பாடல்,

“யானே ஈண்டை யேனே; என் நலனே
ஆனா நோயோடு கான லதே
துறைவன் தம்ஊ ரானே;
மறைஅலர் ஆகி மன்ற ததே.”

மிகச்சிறிய இந்தப்பாடலில் தலைவி தோழியிடம்,” நான் இங்கே தனியாக இருக்கிறேன். தலைவன் என்னைப் பிரிந்து சென்றதால் தந்துவிட்டுச் சென்ற ஆறாத துயரத்துடன் இருக்கிறேன். தலைவனை எனக்குத் தந்த என்னுடைய நலன் இப்போது என்னிடம் இல்லை. அவனைத் தேடியவாறு என்னை விட்டுச்சென்று, தலைவனுடனிருந்த கடற்கரைச் சோலையிடத்தே தனித்தலைகிறது. அவனோ, தன்னுடைய பெற்றோருடன் ஊரில் இருக்கிறான். எங்களுடைய களவு உறவு பலரறிய வெளிப்பட்டு, ஊரலராகிப் பொதுவிடத்தில் இருக்கிறது” என்கிறாள்.

வெண்பூதியார், மூன்று குறுந்தொகைப் பாடல்களை எழுதியுள்ளார். மூன்று பாடலும் பேசுகிற பொருள் ஒன்றுதான். தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். ஒருபாடலில் பெற்றோருடன் இருக்கிறான். ஊர் அலராகி தலைவி தனித்துத் தவிக்கிறாள். இரண்டாம் பாடலில், பொருள்தான் பெரிதென்று பிரிந்து சென்றிருக்கிறான். இதுவும் கூட திருமணத்திற்கு முன்பான பிரிவு என்றுதான் குறிப்பால் உணரமுடிகிறது.  பாடலில் கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி என்றொரு வரி வருகிறது. தலைவன் செல்கிற பாலைநிலத்தில் முள்ளையுடைய கள்ளிக்காய் வெடிக்கும். அப்போது எழுகிற சிறிய ஓசையே பேரொலியாகி  மெல்லிய சிறகையுடைய ஆணும் பெண்ணுமாக இணைந்துள்ள புறாக்கள் பறந்து வெளியேறும். அத்தகைய கொடிய பாதை என்று இந்தப்பாடல் சொல்கிறது. தலைவன் தன்னைப் பிரிந்து சென்றதால் வெளியாகும் அலரின் ஓசையைப் பற்றியே தலைவி அச்சப்படுகிறாள்.

திருமணத்திற்கு முன்பாக தீராமல் காதல்செய்துவிட்டு, வேலையைக் காரணம்காட்டி அல்லது வேறு ஏதாவது நம்பும்படியாகச் சொல்லி, காதலித்த பெண்ணைக் கைவிட்டுவிடுகிற ஆண்கள் என்றைக்கும் இருக்கிறார்கள். ஒரு ஆண் வெட்டியாக ஊர் சுற்றும் பொழுதோ அல்லது சாதாரண வேலையில் இருக்கும் பொழுதோ பெண்ணின் வசதியோ அல்லது வேறு எதுவும் மனதில் பதிவதில்லை. அவனுக்குப் பிடித்துவிட்டால் போதும், கணப்பொழுதும் விடாமல் பெண்ணை விரட்டிவந்து, காலில் விழுந்துகூட காதல் செய்வான். அவனுக்கு வெளிநாட்டு வேலையோ அல்லது அரசு உயர்பதவியோ கிடைத்துவிட்டால், அதுவரையில் காதல் செய்த பெண்ணிடம் இல்லாத குறையெல்லாம் அவனுடைய கண்ணில் தெரியும். ஆனால் இவர்கள் உறவினைப் பற்றி அந்த ஊரில் பரவியிருக்கிற செய்தியினை ஒன்றும் செய்யவியலாமல் தன்னுடல் வெளிறி, மெலிந்து தீராத துயருடன் வீட்டில் பார்க்கிற வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்து கொண்டு பெயருக்கு “வாழ்கிற” பெண்கள் பலருண்டு.

வெண்பூதியாரின் மூன்றாம் பாடலும் பெண்ணுடலின் நிரந்தரப் பசலையைப் பற்றியே பேசுகிறது. “அடக்கமும் அவளைவிட்டு நீங்கிவிட்டதாகவும், அறிவு மட்டும் தலைவனை நோக்கி செல்க“ என்று சொல்வதாகவும் அமைந்துள்ளது. தன்னுடைய தனித்த துயரினை நீக்குவதற்கு இதுதான் தருணம் என்று தலைவன் உணரவேண்டும் என இந்தப்பாடலின் தலைவி சொல்கிறாள்.

அவளுடைய உடலுக்கு உரியதாக ஆகிவிட்ட பசலையைப் போக்க தலைவன் வரமாட்டான் எனில் இந்தப்பெண் என்னாவாள்? என்பதுதான் இந்த மூன்று பாடல்களும் கூறுகின்றன. தலைவன் வராமல் போயிருந்தால் அந்தப்பெண் என்னாகியிருப்பாள், எளிமையாகச் சொல்லிவிடலாம் அப்போதும் பசலை படர்ந்த மேனியுடன் தற்கொலை செய்துகொண்டிருப்பாள். ஆனால் அப்படியொரு பதிவு சங்கப்பாடல்களில் இல்லை. இல்லை என்பதால் நிகழ்ந்திருக்காது என்பதில்லை. அல்லது வெளிறிய உடலுடன் பெற்றோர் விருப்பத்தில் வேறு ஒருவரை மணம் முடித்து வாழ்ந்திருப்பாள். அதுவும் சங்கஇலக்கிய பதிவில் இல்லை. சிலநிகழ்வுகள் பதிவுகளாக இல்லையெனினும் இருந்திருப்பதை உணரமுடிகிறது.


குறுந்தொகை : 97,174,219


No comments: