Wednesday 8 March 2017

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..

38. காக்கை பாடினியார் நச்செள்ளையார்:


ஒரு பெண்ணுக்குச் சேதி வருகிறது:

“எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி...”

ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக சகுணம் பார்ப்பது என்பது நம்மிடையே  தொன்றுத் தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். நல்ல காலம், ராகுகாலம், எமகண்டம், வளர்பிறை, தேய்பிறை என நாளும் கோளும் பார்ப்பது தவிர வழியில் எதிர்படும் பறவைகள், மிருகங்கள், மனிதர்களைக் கொண்டு சகுணத்தை அனுமானிப்பது உண்டு. இவ்வாறு நிமித்தம் பார்ப்பதில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பண்பாடு சார்ந்து வேறுபாடு இருக்கிறது. ஓரிடத்தில் கெடுதலின் அம்சமாக கருதி வெறுக்கப்படுவது பிறிதொரு இடத்தில் நன்மையின் நிமித்தமாக வரவேற்கப்படுவதும் உண்டு.
__________________________________________________________________________________

“உறை மூடிய வீணையில்
உயிர் நரம்பொன்றைத்
தட்டி எழுப்ப
மழைக்கால இரவொன்று வரலாம்.
காத்திரு.
கோடையின் கடைசிப் பகல் ஒன்றில்
அதனை உனக்குப் பரிசளிப்பேன்.”

இது தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை. தலைவன், தலைவியின் என்றும் மாறாத அன்பினைப் போலவே அவர்களுக்குள் நிகழுகிற பிரிவென்பதும் காலங்காலமாய் தொடர்ந்திருப்பது. இணைவதும் பிரிவதும் மீண்டும் இணைவதுமாக காலம் நிகழ்த்துகிற ஒருவிதமான மாய விளையாட்டிற்குள் ஆணும் பெண்ணும் யுகயுகமாக தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரிவுக்கான காத்திருப்பென்பது பெண்ணுக்கானது. அது அவளுக்கு மிகுதுயர் தரக்கூடியதாகவும் அதேசமயம் அந்தத் துயரமே அவளறியாத ஏகாந்தத்தில் திளைக்கச் செய்வதாக இருக்கிறது. அவன் எப்போது வருவான் என்பதறியாத நிலையில் அவனுக்காகக் காத்திருப்பதில், காத்திருப்பின் வெளியானது பரந்துபட்டதாக விரியத் தொடங்கியிருக்கும். அவனுக்கு பரிசளிக்கவேண்டி கணந்தோறும் அவளையே சேகரிக்கத் தொடங்கியிருப்பாள். கணங்கள், யுகங்களாகி அவளை வதை செய்யத் தொடங்கியிருக்கும் பொழுதில்கூட அந்தவாதையின் சின்னஞ்சிறிய பகுதியையும் முழுவதாக  ஏற்றுக்கொண்டு அவனுக்கெனக் காத்திருப்பாள். அவளுடைய தவிப்பும் அதுசார்ந்த வலியும் அவளைப் பலவீனப்படுத்துவதுபோலத் தோன்றினாலும் அக்காலகட்டத்தில் அவனுக்குக் கொடுப்பதற்காகவே தன்னை பலப்படுத்திக் கொண்டிருப்பாள். மீண்டும் அவன் வருவான், சந்திப்பு நிகழும், அப்பொழுது கோடையின் காய்ந்த நிலத்தில் அடர்மழையெனப் பொழிய அவனை அனுமதிப்பாள். அதற்காகவே அத்தனைத் துயர்களையும் தாங்கிக் கொண்டிருப்பாள்.

ஒரு பெண் தன்னைத்தான் சமன் செய்துகொள்ள முயன்று, அம்முயற்சியில் தோற்று, பிரிவுக்காலத்தைக் கடந்து கொண்டிருப்பாள். அவளுடைய தவிப்பினை முற்றிலும் பிறரிடம் காட்டிவிடாமல் இருக்க முயலுவாள். இது ஒன்றும் அத்தனை துயரமில்லை என்பதான பிரிவின் ஆரம்பநிலை கடந்தும்  பிரிவுக்காலம் நீட்டிக்கத் தொடங்குகையில் யாரிடமேனும் பகிர்ந்துகொள்ள தவித்திருப்பாள். தோழியோ, உடனிருக்கும் மற்றவரோ முழுவதும் தேற்றிவிட இயலாது என்பதை உணர்ந்தும் அவளுடைய மனமானது புறவெளியில் யாரிடமேனும் அவனைப் பற்றிய சேதியை பகிர்ந்துகொள்ளத் தூண்டும். யாராவது அவனுடைய பெயர் சொன்னாலோ, அவனைப் பற்றிய சேதிகளைச் சொன்னாலோ பரவசமடைவாள். அவனது உடனிருப்பை உணர்த்துகிற விதமான வார்த்தைகளுக்காகக் காத்திருப்பாள். அதனைச் செய்கிற மனிதர்களை, பறவைகளை, சூழலைக் கொண்டு தன்னைச் சமன் செய்துகொள்ள முனைவாள். அந்நிலையினைப் பாடுகிற காக்கை பாடினியார் நச்செள்ளையாரின் குறுந்தொகைப் பாடல், 

திண்தேர் நள்ளி கானத் தண்டர்
பல்ஆ பயந்த நெய்யிற் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.
 “

“காகம் கரைந்தால் விருந்து வரும்” என்பது இன்றளவும் உள்ள எளிய நம்பிக்கை. பசு, பால், நெய் ஆகியவற்றினால் முல்லை நிலம் என்கிற   குறிப்புணர்த்தும் பாடல் இது. தோழி காக்கைக்குச் சோறு வைக்கிறாள். எதற்காக என்பதுதான் இந்தப்பாடலின் பொருள். “வலிய தேரினை உடையவன் கண்டீரக்கோப் பெருநள்ளி. அவனுடைய காட்டில் உள்ள இடையர்களுக்கு பல பசுக்கள் உள்ளன. அவை கொடுத்த நெய்யுடன், தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்ணெல் அரிசியால் ஆக்கிய வெம்மையான சோற்றை ஏழு கலங்களில் இட்டுவைத்து, அவற்றை ஏந்தி காக்கைக்கு அளித்தது, என்னுடைய தோழியின் பெரிய தோள்களை நெகிழச்செய்வதன் மூலம் அவளது  துன்பத்தை நீக்கியதே காரணமாகும். விருந்தினர் வரும்படி கரைதலைச் செய்த காக்கைக்குரிய அப்பலிச் சோறானது சிறிய அளவினதே ஆகும்.” ஏனெனில் தலைவியினுடைய பிரிவுக்கால துன்பம் அத்தனை பெரியதாக இருந்திருக்கிறது. 

தலைவன் இன்னும் வரவில்லை. குறிப்பிட்டுச் சென்ற காலத்தில் திரும்புகிற வழக்கமுடையவன். அவ்விதமாகத் திரும்பவில்லை. பிரிவுக் காலத்தில்  தனக்குள் சொல்லிக்கொள்கிற சமாதானங்களில் வலு இழக்கும் தலைவி தன்னைத்தான் தேற்றிக் கொள்ளவியலாத நிலையினை அடைகிறாள். உடல் மெலிகிறாள், வலிய அவளின் தோள்கள் மெலிகின்றன. உடனிருக்கும் தோழியின் ஆறுதல்கள் எதுவும் எடுபடவில்லை. தன்னுடைய மனதைத் தானே தேற்றிக்கொள்வதும், உடனிருப்போர் ஆற்றுப்படுத்துதலில் தணிந்திருப்பதும் இயலாத பொழுதில் நிமித்தங்கள் பெண்களுக்குத் துணை செய்கின்றன.

மரபைத் தெரிந்து, அதனோடு இயைந்திருக்கவும் தேவைப்படுகிற இடங்களில் அதனை மீறவும் செய்பவை ஞானக்கூத்தனின் கவிதைகள். மரபை நவீனவாழ்வியலில் பொருத்திப் பார்க்கிற கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். “காக்கை” என்கிற இவரது கவிதையில், எந்த கிராமத்திற்குப் போகலாம் என யோசித்தபடியே பறந்த ஒரு காகம், ஒரு கிராமத்து வீட்டின் ஓட்டுக்கூரை மேல் அப்போதுதான் வைக்கப்பட்டிருந்த ஆவிபறக்கும் சோற்றைத் தின்று பார்க்கிறது. அதற்காகவே படையலிட்டிருந்தார்கள் என்பதால் அதனை துரத்துவார் யாருமில்லை. அப்போது வீட்டுக்குள்ளிருந்து  கேட்ட சந்தோஷக் கூச்சலின் அனர்த்தத்திலிருந்து அர்த்தத்தைப் பிரித்துக் கொண்டு அந்தச்சேதியை இன்னொரு கிராமத்தில் நல்லசேதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணிடம் சேர்க்கிறதாக இக்கவிதை அமைந்துள்ளது. ஞானக்கூத்தனின் “காக்கை” கவிதையின் ஒருபகுதி,

“தலையை நிமிர்த்தி உரக்கக் கரைந்தது
வீட்டுக்குள் உள்ளவர் கேட்கும் படிக்கும்
உரத்துக் கரைந்தது மூன்று தடவைகள்.
காக்கை கத்திற்று. காக்கை கத்திற்று
கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு
ஓடி ஒளிகிறாள் ஞானாட்சரி கனவுக்குள்.
சேதி சொன்னக் காக்கையைப் பார்க்கப்
பெண்கள் வானத்தைப் பார்க்கிறார்கள்.
மண்ணில் விழவில்லை காக்கையின் நிழல்.”

எந்தக்காலகட்டத்திலும் இது போன்ற நம்பிக்கைகள் இருந்துகொண்டுதான் இருக்கும் என்பதைச் சொல்வதாக இக்கவிதை அமைந்துள்ளது.

காக்கை கரைவதை கவனித்து விருந்து வருவதை கணிப்பது, குறுக்கே போகும் பூனைக்கு மனத்தடை ஏற்பட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவது, பால்காரர் எதிரே வருவதற்காகக் காத்திருப்பது, நிறைகுடத்துடன் எதிரே வருகிற பெண்ணுக்காக மகிழ்வது, “என்னைப்பார் யோகம் வரும்” என்கிற கழுதைப்படத்தை வாசலில் மாட்டிவைப்பது, வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் பொழுது கால் இடறிவிட்டால் அல்லது தாழ்வாரத்தில் தலை தட்டினால் சற்றுநேரம் அமர்ந்து நீர் அருந்திச் செல்லுதல், நல்லகாரியமாகக் கிளம்பும் பொழுது பக்கத்து வீட்டிலிருக்கும் குறிப்பிட்ட யாரையேனும் பார்ப்பதைத் தவிர்ப்பது, குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நிறத்தில்  உடை உடுத்திக்கொள்வது, கெவுளி கேட்கும் திசை சார்ந்து சில முடிவுகளை எடுப்பது அல்லது ஒத்திவைப்பது என எண்ணற்ற சகுனங்களை அறிந்தும் அறியாமலும் வாழ்நாளில் ஒருமுறையேனும் கடைபிடித்துவிடுகிறோம்.

ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக சகுணம் பார்ப்பது என்பது நம்மிடையே  தொன்றுத்தொட்டு இருந்துவரும் பழக்கமாகும். நல்லகாலம், ராகுகாலம், எமகண்டம், வளர்பிறை, தேய்பிறை என நாளும், கோளும் பார்ப்பது தவிர வழியில் எதிர்படும் பறவைகள், மிருகங்கள், மனிதர்களைக் கொண்டு சகுணத்தை அனுமானிப்பதும் உண்டு. இவ்வாறு நிமித்தம் பார்ப்பதில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பண்பாடு சார்ந்து வேறுபாடு இருக்கிறது. ஓரிடத்தில் கெடுதலின் அம்சமாக கருதி வெறுக்கப்படுவது பிறிதொரு இடத்தில் நன்மையின் நிமித்தமாக வரவேற்கப்படுவதும் உண்டு. உதாரணமாக தமிழ்நாட்டில் திருநங்கைகளை மனிதராகக்கூட மதிக்காமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். வடநாட்டில் மார்வாடிகளும், பனியாக்களும் பிறந்த குழந்தையை அவர்களிடம் கொடுத்து ஆசீர்வதிக்கச் செய்வார்கள்.

அ.முத்துலிங்கத்தின் ராகுகாலம் என்கிற கதையில், ஆப்பிரிக்க நாட்டிற்கு பணிநிமித்தமாகச் செல்கிற ஒரு தம்பதியரிடமிருந்து அந்த நாட்டின் ஓட்டுனர், தமிழ்நாட்டில் கலாச்சாரமாகவே மாறிவிட்ட நல்லநேரம், ராகுகாலம், கந்தசஷ்டி, சைவ உணவு, திருநீறு, புரட்டாசி சனி எல்லாமும் கற்றுக்கொள்கிறான். தம்பதியர் மாற்றலாகிச் சென்றுவிடுகிறார்கள். இவன் வேறு இடத்தில் வேலைக்கு முயற்சி செய்கிறான். ராகுகாலத்தில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டதால் அவன் போகவில்லை என்கிறான். அ.முத்துலிங்கத்தின் கதைகள் வெவ்வேறு நாட்டின் கலாச்சாரச்சூழலில் உள்ள நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் பற்றியும் கலாசாரக்கலப்பின் காரணமாக நிகழ்கிற விநோதங்களையும் பேசுபவை. தன்னுடைய வாழ்வியல் நிலை, சமனுறாத பலசந்தர்ப்பங்களில் கடவுளையும் நிமித்தங்களையும் நம்பத் தொடங்கிவிடுகிற மனம் என்பது எல்லா நிலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. ஒரு நிலத்திலிருந்து வேறு ஒரு நிலத்திற்குப் பரவுகிற பல்வேறு கலாச்சாரங்களில் இம்மாதிரியான விஷயங்களுக்குத்தான் முதலிடம் இருக்கிறது.


துருக்கி நாட்டில், தீமைகளை விலக்குவதற்கான நம்பிக்கையின் அடிப்படையில்  வாசலில் கட்டித் தொங்கவிடுகிற நீலநிறகண் போன்ற பீங்கான் தாயத்து சென்னையின் கடைவீதிகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. துருக்கி தேசத்திற்கும் சென்னைக்கும் உள்ள தூரத்தை இந்த நீலவண்ணத் தாயத்து இல்லாமல் செய்தது போலவே, உசிலம்பட்டியின் உட்கிடைக் கிராமமான அத்திப்பட்டியிலுள்ள மிகச்சிறிய உணவகத்தில் கல்லாவுக்கருகே சீனாவின் சிரிக்கும் புத்தர் சிலையை பார்க்க முடிகிறது. செல்வம் சேருமெனில் எந்த நாட்டின் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. வேறு எதில் கலாச்சாரம் ஒன்றுபடுகிறதோ இல்லையோ சகுனங்களும் அதுசார்ந்த நம்பிக்கைகளும் எந்தநிலத்தைச் சேர்ந்தவருக்கும் பொதுவாகிறது.


பெண்ணின் தனிமை ஏகாந்தமாக விரிந்திருந்த காலத்திலிருந்து இன்றைய காலமானது வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்திருக்கிறது. அப்பொழுது இருந்தது பொற்காலம் என்றோ இப்பொழுது அதுபோல இல்லை என்றோ சொல்வது  நோக்கமில்லை. ஆனால் வெளியே சென்றவன் எப்போது திரும்புவான் எனத்தெரியாத காலத்தில் அவர்களுக்குக் கிடைத்த பரவசம் இப்போது சற்று மட்டுபட்டிருக்கிறது. தொலைத்தொடர்பு சாதனங்கள் எதுவுமற்ற காலத்தில் அவர்களிடமிருந்த பதற்றம் வேறுவிதமானது. மேலும் முன்பைவிடவும் இக்காலத்தில் வெளியே செல்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பதற்றத்தின் அளவு மிகையாகியுள்ளது. இப்போது நிமிடத்திற்கு ஒருமுறை இருவருமே தங்கள் இருப்பை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள்.

ஞானக்கூத்தனின் “காக்கை” என்கிற தலைப்பில் உள்ள மற்றுமொரு கவிதையில் “ஒருமுறை வந்த காக்கை தான் மறுமுறையும் வந்ததா எனவும் தன்னியல்பில் பறந்துகொண்டிருக்கிற காக்கை இப்பொழுது  நவீன உலகத்தைப் பழகிவிட்டதாகவும், காக்கையை யாரும் முழுதாய் பார்த்துவிட முடியாது எனவும் சொல்கிறார். சேதி சொல்வதற்காகப் பறந்து வந்த காக்கை ஒரு வீட்டிலிருந்து சிறிய கரண்டியைத் தூக்கிச் செல்கிறது, பதிலாக வேறு ஒரு வீட்டிலிருந்து பெரிய கரண்டியைப் போடுகிறது. குச்சிகளையும் வைக்கோலையும் தூக்கிப்பறந்த காக்கை இப்போது சிறிய இரும்புக் கம்பிகளைத் தூக்கிக்கொண்டு பறக்கின்றன” என்கிறார். காக்கை மனித வாழ்விடத்திற்கு  மிக நெருக்கமாக வசிக்கிற ஒரு பறவை. இப்பொழுதும் அவ்விதமாகவே இருக்கின்றன. நமக்கான சேதியைச் சொல்வதற்கும் அவை இப்பொழுதும் தயாராக இருக்கலாம். ஆனால் அவற்றின் குரலைக் கேட்கிற இடத்தில் நாம் இல்லை.

எந்த ஒன்றிற்காகவும் அல்லது யார் ஒருவருக்காகவும் காத்திருக்கப் பொறுமையற்ற அவசரத்தை மாநகர போக்குவரத்தில் சமிக்கை மாறுகிற சிறிய கணத்தில் உணரமுடியும். சகுனங்கள் பார்ப்பதை இன்றைக்கு பலவிதங்களில் தீவிரப்படுத்தியிருக்கிற அதே ஆட்கள்தான் காத்திருப்பு கணத்தினை நவீன தொலைத்தொடர்பு கருவிகளின் உதவிகொண்டு  சிதைக்கிறார்கள். செல்பி கலாச்சாரம் பெருகியிருக்கும் இக்காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல் வந்த ஒரு புகைப்படம், வேலையிலிருப்பதாக கணவன் சொல்கிறான், நம்பாத மனைவி செல்பி எடுத்து உடனே அனுப்பச் சொல்கிறாள். அவனும் புகைப்படம் எடுக்கிறான். அந்தக்கணவன் விமானத்தை ஓட்டுகிற பைலட். காற்றில் மிதந்தபடி ஒரு புகைப்படம் எடுக்கிறான். நகைச்சுவையாக அனுப்பப் பட்டிருந்தபோதிலும் அந்த நிலை அவனுக்கு துயரமானது. நிமிடத்திற்கு ஒருமுறை தன்னுடைய இருப்பை மனைவியிடம் நிரூபிக்கத் தடுமாறி, தன்னுடைய சமன் இழந்து அலைபேசியில் சார்ஜ் போய்விட்டது எனப் பொய் சொல்கிற ஆணும், தாளமுடியாமல் அலைபேசியைத் தூக்கியெறிந்துவிட்டு காணாமல் போய்விட்டது எனச் சொல்பவர்களும் இன்றைக்குப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் ஆண், பெண் உறவுக்குள் பதற்றத்தை மிகைப்படுத்தியுள்ளன. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளத் துணியாத கடவுச்சொல் அவர்களுக்கான மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கணவன் யாரோடு பேசுகிறான், அவனுடைய பதிவுகளில் எந்தப் பெண்ணெல்லாம் விருப்பக்குறியிடுகிறார்கள் என ஒரு பெண் ஆராய்ந்து கொண்டிருப்பது போலவே கணவனும் அவனுடைய மனைவியை அவளறியாமல் தொடர்கிறான். மாயவலையால் பின்னப்படுகிற ஒரு உலகத்தினுள் அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் காத்திருப்பதென்பது மனதின் திடத்தைக் கலைக்கும்படியாகவே உள்ளது. பணி நிமித்தமாகச் சென்றவன் திரும்ப வரலாம் அல்லது வராமலேயே போய்விடலாம் என்றிருந்த காலத்தின் தவிப்பு ஒருவகையில் இருவருக்குமான அன்பினை வலுப்படுத்தியது. இன்றைய காலகட்டத்தின் தவிப்பானது அதனுடைய இயல்பான பரவசத்தை இழந்திருக்கிறது.

பொருள்தேடிப் பிரிந்து சென்ற ஆண் திரும்பிவரும் பொழுது அவனும், அவனை எதிர்நோக்கியிருக்கும் பெண்ணும் தங்களை ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுப்பதற்காக காத்திருப்பது வாழ்விற்கான அழைப்பை அவர்களுக்குள் உணர்த்திக் கொண்டிருந்தது. இந்த அழைப்பானது அதனுடைய இயல்பிலிருந்து  கலையாமல் இருப்பதையே இருவரும் இன்றளவும் விரும்புகிறார்கள். என்றபோதிலும் அவ்விதமாக இருக்க இருவராலும் இயலவில்லை என்பதே உண்மை.

ஆண்கள் பார்க்கிற சகுனங்களும் நிமித்தங்களும் பொருள் சார்ந்ததாக இருக்க, பெண்களுடையது அவளின் பிரியத்துக்குரியவர்களின் அண்மை சார்ந்ததாக இருக்கிறது. அவன் சார்ந்த வாழ்வியலுக்கான சூழலையே அவள் திரும்பத் திரும்பக் கட்டமைக்கிறாள். தன்னை எப்பொழுதும் இயற்கைக்கு மிக அருகில் வைத்துக்கொள்ள பெண் நினைக்கிறாள். பறவைகளையும் பல்லிகளையும் தனக்கான நல்ல சொல்லை கொண்டுவருவதாக நம்பிய காலத்தின் ஏகாந்தத்தை ஒரு பெண் இப்போதும் விரும்புகிறாள். இயற்கையோடு இணைந்த வாழ்வில் மூடநம்பிக்கையாக சில செயல்பாடுகள் இருந்தபோதிலும் அவை மனதின் சமன் குலைக்காதவை என்பதால் இயற்கையின் அசைவுகளிலிருந்து வருகிற சேதி இன்றைக்கும் அவளுக்கு வேண்டியதாக இருக்கிறது. பிரிவு தன்னுடைய பரவசத்தை இழந்திருப்பது போலத் தோன்றுகிற இக்காலக்கட்டத்திலும் அதனை மீட்டெடுக்கும் விதமாக இயற்கையிடமிருந்து கிடைக்கிற சேதிகளை உணர முயலுகிறவளாக பெண்ணே இருக்கிறாள்.


குறுந்தொகை:210, பதிற்றுப்பத்து:ஆறாம் பத்து: 10 பாடல்கள், புறநானூறு:278 மொத்தம்: 12

No comments: