Wednesday 8 March 2017

பெண் – 
உடல் , மனம் , மொழி :



சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..




33 .பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு:



ஒரு பெண் தீப்பாஞ்சமாலை’யாகிறாள்:

“நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே...”


“கணவனுடன் சிதையில் மரிப்பவள், அவனுடைய பாவங்கள் அத்தனையையும் தீர்த்து தூய்மை செய்தவளாகிறாள் எனவும், அவ்விதமாக இறந்த பெண் அவள் உடலிலுள்ள மயிர்களின் எண்ணிக்கையளவு காலம் (3.5 கோடி ஆண்டுகள்) சொர்க்கத்தில் அவனோடு வாழ்வாள் எனவும் நம்பப்பட்டது. மேலும் அவளுடைய தந்தை, தாய் வகையினரையும், கணவனின் குடும்பத்தினரையும் தூய்மை செய்தவளாகிறாள். அதனாலேயே உடன்கட்டை ஏறுகிற வழக்கம் வலியுறுத்தப்பட்டது.”
____________________________________________________________________________________________________
விஜயலட்சுமி என்றொரு பெண். என்னுடைய பள்ளிநாட்களின் தோழி. தன்னை எப்போதும் அழகாக வைத்திருப்பது எப்படியென்று தெரிந்தவள். என்னைவிட இரண்டு வயது மூத்தவள், என்றாலும் என்னோடு மிகுந்த சிநேகத்தோடு இருப்பாள். அவளின் இயல்பும் சில பிரத்யேகச் செயல்பாடுகளும் எனக்கு அவள்மீது கவனம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அடிக்கடி முகம் கழுவிகொண்டும் வாய்க்கும்பொழுதெல்லாம் கண்ணாடி பார்த்துக்கொண்டுமிருப்பாள். கண்ணாடியில் மட்டுமல்ல சாப்பிடும் தட்டு, ஆற்று நீர் என தன்னுடைய முகம் பிரதிபலிக்கிற எதனையும் சிறிதுநேரம் ரசித்துப் பார்ப்பது அவளுடைய வழக்கம். தன்னுடைய அழகை தானே ஆராதிக்கத் தெரியவேண்டும் எனச் சொல்லுவாள். இரட்டைப் பின்னலில் பாலம் அமைத்ததுபோல கனகாம்பரமும் அதன்மேல் சரம் அமைத்து மல்லிகையும் வைத்து வலப்பக்கச்  சடையிலுள்ள  ரிப்பன் பூவுக்கு வெளியே கொஞ்சம் நீட்டித் தொங்கவிட்டிருப்பாள். கண்களில் மை தீட்டி, அதை மீன்போல இழுத்து விட்டிருப்பாள். நாள்முழுக்க கலையாமல் தன்னுடைய உடைகளை வைத்திருக்கவும் அறிந்திருந்தாள். அவளைப் போலவே அவளுடைய புத்தகங்களும் ஒழுங்கு கலையாதவை. ஆண்டுமுடிவில் கசங்காத தன்னுடைய புத்தகங்களை யாருக்காவது கொடுக்கும் அவள், பள்ளியின் முதல் மாணவியாக எப்போதுமிருந்தாள். நம்மைப் போலவே  நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களையும் மனிதர்களையும் வைத்துகொள்ளத் தெரியவேண்டும் எனச் சொல்லுவாள். யாரையும் தொட்டுப்பேசுகிற வழக்கமோ சகத்தோழிகளிடம்கூட தோளில் அணைத்துக் கொள்கிற வழக்கமோ  இல்லாதவள். தன்னுடைய உடலை அத்தனை தனித்துவமாக நினைத்துக் கொண்டிருந்தாள்.

தன்னை இத்தனை அழகுபடுத்திக் கொள்கிறவள்தான், தன்னுடைய ஆடை கலையாமல் வைத்திருக்கிறவள்தான், பருவத்தில் முளைவிடுகிற சிறிய பருக்களுக்காகக் கவலைப்படுகிறவள்தான் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் சிநேகிதம் கொண்டிருந்தானென தெரிந்துகொண்ட ஒருநாள் தீக்குளித்துச் செத்துப்போனாள். நகக்கண் அளவு காயம்பட்டாலும் துடித்துப் போகிற அந்தப்பெண், குளியலறையில் முகம் இதுவென்று துளியும் அடையாளம் தெரியாமல் கைகளும் கால்களும் வெடித்துச்சிதறி கருகிக்கிடந்தாள்.

ஒருபெண் தன்னிடமுள்ள அதிகபட்சப் பரிசென அவளுடைய உடலையே ஆணுக்குப் பரிசளிக்கிறாள். அவளுடைய அழகு முழுவதும் அவனுக்கானது என நம்புகிறாள். தன்னை முற்றிலுமாக அவனிடம் ஒப்புக்கொடுக்கிறாள். அதனாலேயே தன்னுடைய கணவன் தனக்கு மட்டும் உரிமையானவனாக இல்லையென அறியும்போது அதனை அவளால் ஏற்றுகொள்ளவே முடிவதில்லை. அவனுக்கென பத்திரப்படுத்தியிருக்கும் தன்னுடைய அன்பைப் புரிந்துகொள்ளாமல் வேறு பெண்ணுடன் தன்னுடைய கணவன் உறவு வைத்திருப்பதை அறிந்தவுடன் அவள் முதலில் மனதளவில் சிதைந்து போகிறாள். அதன்பின்பு மகிழ்வும், கொண்டாட்டமும், உணவும் தவிர்த்து விடுகிறாள். எதிலும் ஆர்வம் அற்றவளாய், நிலைகொள்ளாத மனதுடன் தன்னிலை இழந்து, உடலாலும் சிதைந்து போகிற நிலைக்கு நகர்கிறாள். புறத்தோற்றத்தின் உருக்குலைவைவிட மனதால் ஒரு பெண் சிதைந்து போவதென்பது வேறொருவரால் ஒருபோதும் மீட்டெடுக்க இயலாததாக ஆகிவிடுகிறது. விஜயலட்சுமியின்  மனச்சிதைவே அவளது உடல் சிதைவுக்குக் காரணமாகிறது. அவனுக்குப் பிறகு தனக்கென வேறு எதுவும் இல்லை; அவன்தான் தன்னுடைய வாழ்வின் இறுதியும், நிறைவும் என்றிருந்த ஒரு பெண்ணால் அவனது செயலை ஏற்றுகொள்ள முடியவில்லை. எனவே தன்னை வருத்தி, தன்னை சிதைத்து, தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அவளைச் சிதைத்துக்கொள்வதையே அவனுக்குத் தருகிற தண்டனையாகக் கருதுகிறாள்.

ஒரு பெண்ணுக்கு அவளுக்கு உரிமையானதாக அவளிடமிருப்பது  அவளுடைய உடல் மட்டும்தான் என நினைத்து, அதனை அவனுக்காக அழித்துவிட நினைக்கிறாள். “பெண்ணுடைய உடல் அவளுக்கானதில்லை” என்கிற கற்பிதத்தின் அடிப்படையில்தான் அவளுடைய மனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்ணுடல் என்பது ஆணுக்கானது என்பதை ஒருகாலத்தில் நம்பினாள். அதனடிப்படையில் வளர்ந்தவள், அவன் அவளுக்கு மட்டுமேயானவனாக இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள  பழக்கப்பட்டிருந்தாள். அதனால் சங்ககாலத்தில் பரத்தையரைத் நாடிச் செல்வது ஆணின் இயல்பென ஏற்றுக்கொண்டாள். இன்றைய காலகட்டத்தில் இவ்வகையான ஆணை ஏற்றுகொள்ள இயலாத நிலைக்கு பெண்  நகர்ந்திருக்கிறாள். ஆனால் வேறு பெண்ணிடம் ஈர்ப்பு கொண்டிருப்பதை அறிந்த பெண் அவனை ஏற்றுக்கொள்ள முடியாமலும் முற்றிலுமாக அவனைவிட்டு இயலாமலும் தடுமாறுகிற பெண்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். அவனிடமிருந்து முழுமையாக நகர்ந்துவிட்ட பெண், அவனைவிட்டு விலகி வாழவும், வேறு ஒருவரை மணம் செய்துகொள்ளவும் காலம் அனுமதித்திருக்கிறது. மேலும், இச்சூழலில் அவனிடம் கேட்க நினைத்து இவளிடம் குவிந்துகிடக்கும் கேள்விகளும் தன்னுடைய நிலையைப் பற்றிய தவிப்பும் கொண்டவளாகிறாள். எனவே அவனைக் குற்றஉணர்ச்சிக்கு ஆளாக்குவதாக நினைத்து அல்லது அவனுக்குத் தண்டனை தருவதாக நினைத்து தன்னுடலை சிதைத்துக்கொள்ளத் தொடங்குகிறாள். 

இறுதியில் தன்னையே தீயில் கருக்கி  இறந்துபோகும் நிலைக்கு வந்துவிடுகிறாள்.
பல்வேறு அரசியல் சூழல்களில் ஒரு ஆண் தீக்குளித்து இறந்து போவான். ஆனால் குடும்ப உறவின் நிமித்தம் இதுபோன்ற அவலநிலைக்கு வருவது பெரும்பாலும் பெண்கள்தான். கணவனுக்காக தன்னுடலை தீயில் அழித்துக்கொள்கிற செயலின் மனப்பதிவு பெண்ணுக்கு அவளின் முன்னோர் செயல்வழியே கற்பிக்கப்பட்டிருக்கிறது. வழிவழிப்பெண்களில் மூத்தவளின் குணங்களுள் ஒன்றாக தலைவனுக்காக தன்னுடலை மாய்த்துக்கொள்ளுதலும் இருந்திருக்கிறது. அவனுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்வாள். அவனுக்காகக் காத்திருப்பாள். அவனுக்காகவே தன்னை அழித்துக் கொள்வாள். உருவழிந்து போவதும், உயிரழித்துக் கொள்வதும்கூட அவனுக்கான செயலாகவே அவளிடமிருந்திருக்கிறது.

கணவன் இறந்து போனவுடன் அந்தகணமே உயிர்விடுதல் தலைக்கற்பு என இலக்கியங்கள் சொல்கின்றன. “கணவனை யிழந்தோர்க்குக் காட்டுவ தில்லென” (சிலம்பு: 20:74-75)எனச் சொல்லி சிலப்பதிகாரத்தில் பாண்டியமன்னன் நெடுஞ்செழியன் மனைவி அரசி கோப்பெருந்தேவி உயிர்விடுகிறாள். இவள் தலைக்கற்புடையவள் எனப் பாராட்டப்படுகிறாள். “கணவனைத்தவிர வேறு உறவுகளுக்கு மாற்று இருக்கிறது; ஆனால் ஒருபெண் கணவனை இழந்துவிட்டால் அந்த உறவுக்கு மாற்று இல்லை” என கோப்பெருந்தேவியின் சொல்லாக சிலப்பதிகாரம் சுட்டுகிறது.
அவனோடு அவளுடைய அழகும், அவளின் உணவும், அவளின் உறக்கமும் அவளின் அனைத்து மகிழ்வும் இல்லாமல் போய்விடுகிறது. கைம்மை நோன்பு ஏற்று வாழ்கிற நிலையென்பது இழிநிலை எனக் கருதிய பெண்களும் இருந்திருக்கிறார்கள். எனவே இறந்துபோன கணவனின் சிதையில் தன்னையும் சேர்த்து எரித்துக்கொண்டு உயிர்விடுதல் வழியாக அவளுடைய கற்பை நிரூபிக்கிறாள்.  
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு கணவன் இறந்தவுடன் தீமூட்டி இறந்துபோக நினைக்கிறாள். இவளின் இந்தச் செயலைத் தடுக்க நினைக்கிற சான்றோர்களைப் பார்த்துச் சொல்வதாக இவர்  எழுதிய புறநானூற்றுப்பாடல்,

பல்சான் றீரே;  பல்சான் றீரே
செல்க எனச் சொல்லாது, ஒழிக என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எட்  சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி யாகப்,
பரற்பெய் பள்ளிப் பாய்இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரி தாகுக தில்ல  எமக்குஎம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே.”

சான்றோர் பெருமக்களே, “உன்னுடைய தலைவன் இறந்தான். அவனுடன் நீயும் உடன்செல்” என்று சொல்லாது, அதைத் தவிர்த்து விலக்கச் சொல்கிற பொல்லாத எண்ணத்தையுடைய சான்றோர் பெருமக்களே! அணிலின் மேலுள்ள வரிபோல் வரியை உடைய வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்து எடுத்த விதை போன்று நல்ல மணம் மிகுந்த நெய் கலக்காத நீர்ச்சோறு, எள் துவையல், புளிசேர்த்த வேளைக்கீரையை ஆகியவற்றை  உண்டும், பாய் இல்லாமல் பருக்கைக்கல் மேல் படுத்தும், கைம்மை நோன்பியற்றும் பெண்டிர் அல்ல நான்.  சுடுகாட்டில் உண்டாக்கியதும் கரிய விறகால் அடுக்கப்பட்டதுமான பிணப்படுக்கை உமக்கு அரியதாக இருக்கலாம். ஆனால் பெரிய தோளையுடைய என் கணவன் மாய்ந்தமையால். அந்த ஈமத்தீயே எமக்கு இதழ் மலர்ந்த தாமரையின் தண்ணீர்ப் பொய்கைநீர் போல இன்பம் அளிப்பதாகும்.”

கணவன் இறந்துபோன நிலையில் ஒருபெண் இந்தப்பாடலை எழுதியிருக்க முடியுமா அல்லது தெளிவும் நிதானமுமாக இப்படியொரு பாடலை எழுதிய பெண் தீப்பாய்ந்து இறந்துபோயிருக்க முடியுமா என்கிற கேள்விகளுக்கு மதுரை பேராலவாயார் என்கிற புலவர் எழுதிய 247 ம் புறநானூற்றுப் பாடலின் மூலமாக தேவி பெருங்கோப்பெண்டு  தீப்பாய்ந்து இறந்தது உறுதியாகிறது. மேலும் “இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கோடுத்தே” என்கிற இவரது பாடல்வரியில், இறந்த அந்தப்பெண் இளமையானவர் என்பதும் தெரிகிறது. கணவன் இறந்தவுடன் ஒருபெண் சமூகத்தில் அடைகிற துன்பங்களை பெருங்கோப்பெண்டு  எழுதிய பாடலில் அறிய முடிகிறது. இத்தனைத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டு ஒருபெண் உயிர்வாழ்வதை விடவும்  உயிர்விடுதலே மேலானது என்கிற கருத்தைச் சொல்கிறது. கணவனை இழந்து வாழ்பவள் மன்னனின் மனைவியானாலும் அவளின் நிலையும் துன்பத்திற்குரியதாகவே இருந்திருக்கிறது. 

“நல்லோள் கணவனொடு நனியழழ் புகீஇச்
சொல்லிடை இட்ட பாலை நிலையும்” (தொல்:புறத்:19) கணவனோடு எரிமூழ்கி இறப்பவளை நல்லோள் என சங்க இலக்கியத்திற்கு முற்பட்ட தொல்காப்பியமும் இவ்வழக்கத்திற்கு இலக்கணம் சொல்லியிருக்கிறது.  இவ்விதமாக ஒரு பெண் தீப்பாய்ந்து இறந்து போகிற வழக்கம் தமிழ்நிலத்தில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சதி என்னும் தற்பலி வழக்கம் தமிழ்நிலத்துக்கு உரியதில்லை என்கிற ஒரு கருத்தும் உள்ளது. இவ்வழக்கம்  போர்ச்சமுதாயத்தில் பகையரசனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக பரவலாகியிருக்கும். மேலும் எளிய குடிகளிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தோன்றுகிறது.

தொடக்ககால பார்ப்பனச் சமூகத்திலும் இவ்வழக்கம் இல்லை, இவ்வாறு எரிமூழ்க பார்ப்பனப் பெண்ணுக்கு யாராவது உதவி செய்தால் பார்ப்பனனைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என நம்பப்பட்டது.

“உதீர்ஷ்வ நார்யபி ஜீவலோகம் கதா
சுமேத முபசேஷ ஏஹி,
ஹஸ்ததிரா பஸ்யதி திஷோ ஸத வேதம்
பத்யு ஜனித்தவம் பி ஸம்பூத.” 

என ரிக் வேதத்தில் உள்ளது. “பெண்ணே, இனி ஜீவனுள்ள உலகத்திற்குச் செல்லவும். இறந்தவனிடம் நீ ஏன் உட்கார்ந்துள்ளாய், இங்குவா, உன்னை விரும்புபவனை விவாகம் செய்து கொள்ளவும்.” என ரிக் வேதம் சொல்கிறது.

வேதகாலத்து ஆண்கள் ஆயுதங்களுடன் நெருங்கியவர்களாக இருந்தார்கள். ஒரு ஆண் இறந்துபோனவுடன் அவன் பயன்படுத்திய வில், அம்பு முதலியவற்றை இறந்தவனோடு வைத்து, அவனுடைய மனைவியையும் பக்கத்தில் படுக்கவைத்து அதன்பின் வில்லை கையிலெடுத்துகொண்டு அவன் மனைவியையும் எழுந்துவரச் சொல்லி கட்டளையிடுகிற ஒரு சடங்கு முறை இருந்திருக்கிறது. அப்படி எழுந்து வருகிற பெண்ணை வளமுடன் வாழ வாழ்த்துகிற பாடலும் இருந்திருக்கிறது. அந்த வாழ்த்துத் துதியில் ‘அக்ரே’ Rigveda X.18:7 என்ற சொல்லை ‘அக்னே’ என மாற்றிப் புரிந்துகொண்டு ரிக்வேத காலத்தில் இந்த வழக்கம் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இந்த ஒரு சொல்லின் மாற்றத்தினால் ரிக்வேதம் உடன்கட்டையேறுவதற்கு உடன்பட்டிருந்ததாக திரித்துக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இறந்தவனுடன் அவனுடைய மனைவியையும் சிதையில் வைத்து எரிக்கிற வழக்கம் தொடங்கியிருக்கும். 

இந்தியா தவிர, நோர்வேயிலுள்ள கொத்துக்கள்(Goths), கெல்த்துகள்(Celts), கோல்சுகள்(Gauls), திரேசியர்(Thracians), கசைதியர்(scythians) மற்றும் சீனாவில் சில குறிப்பிட்ட வகையினரிடமும்  கணவனுடன் சேர்ந்து இறந்துபோகிற மனைவியர் பற்றிய இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது.  உலகம் முழுக்க பல இனங்களில் இவ்வழக்கம் இருந்தமைக்குக் காரணம், இது முதலில் அரசர்களிடமும் போர்வீரர்களிடமும் இருந்திருக்கலாம். போரில் வெற்றிபெற்ற மன்னரும் அவரது படையும் தோல்வியடைந்த மன்னர் மற்றும் படைவீரர்களின் உடமைகளைக் கைப்பற்றுவது போல மனைவியரையும் கைப்பற்றுவது வழக்கம். தோல்வியடைந்தவரின் உடைமைப் பொருட்களைச் சிதைப்பது போலவே தோல்வியடைந்த நாட்டின் பெண்களையும் சிதைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. எனவே ஒரு மன்னன், சமூகத்தில் உயர்ந்தவன், போர்வீரன் போன்றோர் இறந்தால் அவன் பயன்படுத்திய பொருட்களுடன் குதிரைகள், பணியாட்கள் மற்றும் மனைவியும் அவனுடன் வைத்து எரிக்கப்படுகிற வழக்கமாக மாறியது. மன்னர்கள், போர்வீரர்கள் தவிர மற்றவர்களிடமும் இந்த வழக்கம் நாளடைவில் பரவியிருக்கக்கூடும்.

கணவனுடன் சிதையில் மரிப்பவள், அவனுடைய பாவங்கள் அத்தனையையும் தீர்த்து தூய்மை செய்தவளாகிறாள் எனவும், அவ்விதமாக இறந்த பெண் அவள் உடலிலுள்ள மயிர்களின் எண்ணிக்கையளவு காலம் (3.5 கோடி ஆண்டுகள்) சொர்க்கத்தில் அவனோடு வாழ்வாள் எனவும் நம்பப்பட்டது. மேலும் அவளுடைய தந்தை, தாய் வகையினரையும், கணவனின் குடும்பத்தினரையும் தூய்மை செய்தவளாகிறாள். அதனாலேயே உடன்கட்டை ஏறுகிற வழக்கம் வலியுறுத்தப்பட்டது. வடநாட்டின் அளவிற்கு தமிழ் நிலத்தில் கட்டாயப்படுத்தபடவில்லை என்றாலும் பரவலாக இங்கும் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கல்வெட்டுக்களும் வரலாறும் சதி என்னும் உடன்கட்டையேறுகிற வழக்கம் இருந்ததை நினைவூட்டுகின்றன. உடன்கட்டை ஏறிய பெண்ணிற்கு நடுகல், கோயில் கட்டி வழிபட்டனர். மாசதி கற்கள், மகாசதி கற்கள், மாஸ்திக்கற்கள், சதிகற்கள் என்ற பெயரில் வழங்கபடுகிற நடுகற்கள் எரிமூழ்கி இறந்துபோன பெண்களின் நினைவாக வைக்கப்பட்டவை. இக்கற்களில் இருவளையணிந்த கைகள் ஒரு கம்பத்தில் இருப்பதுபோலவும், கற்களின் சுவற்றில் இறந்த கணவன், மனைவி உருவங்களும் திங்களும் ஞாயிறும் பொறிக்கப்பட்டிருக்கும். வளையணிந்த கை அந்தப்பெண்ணின் கற்பைச் சுட்டுவதாகும். ஏழாம், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்வகைக்கற்கள் தொண்டை மண்டலத்தில் கிடைத்துள்ளன. தீப்பாஞ்ச அம்மன்,  தீப்பாஞ்சாள் கோவில், தீப்பாஞ்சமாலை என்று இவை அழைக்கப்படுகின்றன. கொங்கு நாட்டில் உள்ள வீரமாத்தி கோவில்களும் இவ்வகையானவை.

பெரும்பாலும் குலதெய்வமாக வணங்கப்படுகிற பெண் தெய்வங்கள், தங்கள் குடும்பத்திற்காக அல்லது ஒரு குழுவிற்காக தீயில் இறந்து போனவர்களாக இருப்பார்கள். திருமணமாகாத பெண்ணொருத்தியை நெருப்பிற்குள் அமிழ்த்திவிட்டு இடம்பெயர்ந்து சென்றிருக்கும் சில இனங்கள், பின்னாளில் அவளை தெய்வமாக்கி வழிபடத் தொடங்கியிருப்பதை முன்னோர்களின் வாய்வழிக் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது

இன்றைய காலகட்டத்தில் இந்த வழக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டாலும் தான் நம்புகிற ஆண்  தன்னிடமிருந்து விலகுகிறான் என்று அறிந்தவுடன் ஒரு பெண் மனதளவில் தீக்குள் பாய்ந்துவிட்டவளாகிறாள். நடுகல் வைத்து பின்னாளில் யாரேனும் கைதொழுவார்கள் என்பதெல்லாம் அல்ல, தன்னளவில் அவனுடைய இழப்பைச் சமன்செய்துகொள்ள இயலாதவளாக ஆகிவிடுகிறாள். ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் ஒரு விஜயலட்சுமி இருக்கிறாள். ஒவ்வொரு விஜயலட்சுமிக்குள்ளும் ஒரு தீப்பாஞ்சமாலை இருக்கிறாள்.



 ஒரே ஒரு பாடல் கிடைத்துள்ளது. புறநானூறு: 246

No comments: