சிவந்த விரல் கொண்டு பாதி முகம் மூடுகிறேன்
நாணிக் கண் புதைக்கிறேன்
நிமிர்ந்த முலையினுக்கு செங்குழம்பிட்டு நிற்கிறேன்
அவன் வரும் வேளையில்
அதிகாலைத் துயில் எழுகிறான்
அடர்ந்த கானகம் செல்ல ஆயத்தம் ஆகிறான்
விடைபெறுகிறான் வேட்டைக்கென
ஒருகண் என்மீதும்
இன்னொருகண் புரவியின் மீதும்
காதலைத் தவிர்த்து
காதலுக்காக என்னை விட்டு அகலுகிறான்
அவன் வரும் வரையில்
நான் பூச்சூடவில்லை
நீராடவும் இல்லை
உணவும் மறந்து நிற்கிறேன்
காலை மாலை நள்ளிரவெனக்
காத்து நிற்கிறேன்
சொல்லிச் சென்ற நாளுக்காக
திரும்புகிறான்
நான் வெண்ணிற உடை உடுத்தி வரவேற்கிறேன்
அவனைப் பொறுத்துக் கொள்கிறேன்
முன்பொருநாள்
நான் சிவப்புநிற உடையில் இருந்தபோது
என்னைவிட்டு அகன்றதையும் சேர்த்தே .
No comments:
Post a Comment