Tuesday, 2 September 2025




 சங்க இலக்கியம்-உடல் மனம் மொழி :

இது என்னுடைய 17 வது நூல்.

என் முனைவர் பட்டத்திற்காக சங்க இலக்கியத்தில்  ஆண் மையக் கருத்துருவாக்கம்எனும் தலைப்பில் மேற்கொண்ட  ஆய்வினைச் செம்மைப்படுத்தி விரித்து எழுதியுள்ளேன்.

 

இந்த ஆய்வு இனக்குழுத் தோற்றம் முதல் அது தாய்வழிச் சமூகமாக நிலைபெறுவது   வரையிலான வரலாற்றை சங்ககாலத்தின் பின்னணியில் சுருக்கமாக  விவரிக்கிறது.

 

நிலத்தின் மீதான ஆணின் உரிமை பெண்ணின் உடல் மீதான அதிகாரமாக எவ்வாறு மாற்றம் பெற்றது, மொழியின் துணைகொண்டு பெண்ணின் மனத்தைத் தன்னகப்படுத்துவதன் வாயிலாக பெண்ணுடல் ஆணுக்கு உகந்ததாக எவ்விதம் வடிவமைக்கப்பட்டது என்பனவற்றை ஆராய்வதோடு இனம், இனக்குழு, சிற்றரசு, பேரரசு, குடும்பம், சாதி, கடவுள் வழிபாடு, மதங்களின் தோற்றம், இலக்கண இலக்கிய உருவாக்கம்  அவற்றில் வாணிபம்பயணங்கள், போர், கல்வி, பண்பாடு, தொன்மங்கள், உளவியல் போன்ற பல்வேறு காரணிகளின் பங்கு முதலியவற்றை விவரிக்கும் தன்மையில் இந்நூல் அமைந்துள்ளது.

 

இந்த நூல் உருவாக்கத்தில் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இதை அழகிய வடிவில் நூலாக வெளியிடும்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கும் என் நன்றி.

Tuesday, 19 August 2025

 


படக்கதை

அவ்வப்போது எடுத்துக்கொள்கிற

புகைப்படங்கள் எல்லாவற்றையும்

ஒரு தொகுப்பாக

சேமித்து வைத்துக்கொள்கிற வழக்கம்

என்னிடமில்லை

மேலும்

ஒரு புகைப்படத்திற்காக  

அணியும் உடையின்மீதும்

அத்தனை

கவனம் கொள்வதில்லை 

 

அன்றன்று அணிபவையே 

அன்றன்றைய வண்ணம் 

அன்றன்றைய எண்ணமும்கூட

 

புகைப்படங்களுக்கென

பிரத்தேயகமாக உடைகளைத்

தெரிவு செய்து

உடுத்திக்கொண்ட நாட்களும்

எனக்கிருந்தன

என்பதை

தற்செயலாகக் கண்ணில்பட்ட

பழுப்புநிறப் புகைப்படமொன்று

நினைவுபடுத்தியது

 

எதற்குப்பதிலாக

நாம்

எவற்றையெல்லாம்

இழந்திருக்கிறோம்

அடைந்திருப்பவையெல்லாம்

ஆசைப்பட்டவைதாமாவென

அரிதாகத்தென்பட்ட 

அந்தப்புகைப்படம்

யோசிக்கவைக்கிறது

 

மனதின் ஆழத்தில்

உறைந்திருக்கும்

ஒரு தருணத்தை

அல்லது

முகச்சாயலில்

படிந்திருக்கும் ஒரு மனநிலையை

மீண்டும்

மேலெழச் செய்துவிடுகிறது

ஒரு

பழையப் புகைப்படம்

மிக எளிதாக.

 ***

Sunday, 17 August 2025

 


அவளொரு ஆரண்யம் 


வான் பொய்ப்பினும்
தான் பொய்க்காத் 
தன்மை கொண்டது
அக் காடு
கோடையோ, குளிரோ
பருவம் எதுவாயினும்
பசித்த வாய்க்கு
தேனும் ஊணும்
தேடாது கொடுக்கும்

 

வெங்கோடை
ஒன்றில் 
பற்றிக்கொண்ட தீயில் 
வெந்து கிடந்த மரங்களிடம் சென்று
சிறுபறவையொன்று
தனக்காகத்
துளிர்க்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டது

 

அந்த வனம் முழுவதும்
ஒரு பறவையால் உருவாகியது 
அந்தப் பறவைக்கூட்டம் முழுவதையும்

வளர்த்தெடுத்தவை
முதுமரங்கள்

 

காற்றின் சிறுதீண்டலுக்கு
பழுத்த இலைகளை உதிர்க்கும் 
பெருமரமும் 
எதிர் நிற்கும் 
யாவற்றையும் புரட்டித் திருப்பும் 
பெரும் சூறையி்ன் நடுவேயும்
வீழ்ந்துவிடாது பற்றிக்கொள்ளும் 
பசுங்கொடியும் 
ஒன்றில் ஒன்றென இழைந்திருக்கும் 
அதன் சூட்சுமம் அறிந்தபோது

இயற்கையின்
முடிவுறாத திருவிழாவில்
தானுமொரு ஆரண்யமென 
உணரத் தொடங்கினாள்.

***

 

Saturday, 16 August 2025

 

சாட்சியம் 

 

காலங்காலமாக
தன்னைத் தழுவிக்கிடக்கும்
கரையிடம்கூட

சொல்லத் தயங்கிய
இரகசியமொன்றை
கொண்டிருந்த கடல்,
தாளாமல் தனக்குள் தளும்பிய கணத்தில்
மேவியெழுந்த  காற்றின் காதுகளில் 
மெல்ல முணுமுணுக்க,
வட்டமிட்டுக் கொண்டிருந்த
வலசைப் பறவைகளோ
அதனை
வானத்திற்கு ஏந்திப்போக,
நீந்தவோ  பறக்கவோ
அறியாது
சாட்சியாக நிற்கும் பெண்ணின்
காட்சி முழுவதும் படர்கிறது

அது.

%

Thursday, 7 August 2025

 

காவியாவும் அர்ச்சனாவும்

 இப்போதும்  

அவர்கள் புத்தகம் வாசிக்கிறார்கள்

அவரவர் அறையில்

அவரவர் விருப்பத்தில்

தேர்ந்து டிவி பார்க்கிறார்கள்
அத்தனை ஒழுங்கு அவர்களின் அறை

முன்பு ஒரு சமயம்
"
அவ என்னைக் கிள்ளிவைக்கிறா'
அவ என்னை வம்பு செய்கிறா "
காவியாவும் அர்ச்சனாவும்
சேர்ந்திருக்கும் பொழுதுகள்
இப்படித்தான்

ஒருநாள் இவர்கள் ஒன்றாக இருந்தால்
ஒன்பது நாள் ஒழுங்கு செய்யும்படி
வீடு அப்படிக் கலைந்துக் கிடக்கும்
நிமிடத்திற்கொருமுறை ஓயாத சண்டை
நிமிடத்திற்கொருமுறை சமாதானமும்
நிமிடத்திற்கொருமுறை அணைப்பும்

இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்.

**

"இப்பொழுது வளர்ந்து விட்டாள்" கவிதைத் தொகுப்பிலிருந்து.. 

 

Wednesday, 6 August 2025

 

என்னைப்போல் ஒருத்தி

வனத்தின் யட்சியென
மனங்கொண்டிருப்பவள்

மாலைக்கதிர்
மயங்கிச்சரியும்

கவனிப்பார் எவருமற்ற
தாமரைக்குளத்தில்
உவந்து
தன் பாதம் நனைக்க
காலாதீதமாய்
கருவறையில்
உறைந்திருக்கும்
மீனாட்சியும்
உள்ளம் குளிர்கிறாள்

தன்னைப்போல்

ஒருத்தியைக்கண்ட

அக்கணத்தில்.

**

Tuesday, 5 August 2025

 



நீலமும் இன்னபிற நிறங்களும்  

 

கடலும்

வானமும்

நீலமல்ல

 

நம் மனம் நிகழ்த்தும்

மாய மென்பதை

நுரைத்த அலைகளும்

கருத்த மேகமும்

உணர்த்த

 

மண்ணில்

காணும்

நிறமெல்லாம்

நிஜமல்ல

அவை

கண்ணின் கற்பிதங்களென

ஓசையின்றி

ஒலிக்குமொரு குரல்

உள்ளிருந்து உரைத்திடும்

அழுத்தமாக

**