இட்டு நிரப்புதல்
இதோ
இங்கே புதராக மண்டிக்கிடக்கும்
மூங்கில்
செடியினருகே
வர
நேர்கையில்
தவறாமல் நினைத்துக்கொள்கிறேன்
இவ்விடத்தில்
முன்பிருந்த ஒற்றை பன்னீர்மரத்தை.
சின்னஞ்சிறு செடியாக
நான்தான் அதனை நட்டு வைத்தேன்
இரண்டு பருவ மழைக்காலங்களைக்
கடந்தபின்பு
அந்த மரம் பூக்கத்தொடங்கியது
அதன்பின்பான எல்லா மழைக்காலத்திலும்
பூத்து
முற்றம் நிறைத்தது
காற்றில்
வாசம் பரப்பியபடி
எதிர்பாராது
சுழன்றடித்த
சூறாவளி நாளொன்றில்
அடியோடு
சாய்ந்தது அந்த மரம்
மனதையே
பிடுங்கி எறிவதுபோல
அத்தனைத் துயரம் அந்தக்காட்சி
வேரோடிக்கிடந்த
நிலமெங்கும்
பன்னீர்த்துளிகளென
சின்னஞ்சிறிய செடிகள் துளிர்க்கத்தொடங்கின
என்ன காரணத்தினாலோ
தழைக்கத்தழைக்க
நானே
பிடுங்கி எறியத் தொடங்கினேன்
இன்னொரு
மழைப்பருவத்தில்
நானேதான் நட்டு வைத்தேன்
இந்த மூங்கில் மரத்தையும்
ஒன்றை
இன்னொன்றால்
இட்டு
நிரப்பியபோதிலும்
ஒவ்வொரு மழைக்காலத்திலும்
மனதுக்குள் பூத்துக்கொண்டிருக்கும்
பன்னீர்ப்பூக்களை
என்ன செய்ய.
%