Wednesday, 29 August 2012

காற்றில் மிதக்கும் துயரம் . . .



என்ன செய்வது
கரங்களில் மயங்கிச் சரிந்த மனதினை

என்ன செய்வது
மனதில் மயங்கிச் சரிந்த உடலினை

என்ன செய்வது
துயரத்தில் தோய்ந்த காதலை

ஒரு புன்னகை
அதற்கு ஈடான ஒரு சொல்
அல்லது
நெருக்கத்தை உணரவைக்கும்
ஏதேனும் ஒன்று

அன்பைப் பெற காத்திருக்கையில்
மௌனத்தின் ஊடே
கடந்து செல்கின்ற காற்றில்
மிதந்து கொண்டிருக்கிற காதல்
துயரமாக
கண்களில் வழிகிறது.

Tuesday, 28 August 2012

பெண். . .



இந்த காற்றைக் கண்டெனக்குப் பொறாமை
எத்தனை சுதந்திரமாய் வீசுகிறது
அல்லது
வீசாமல் இருக்கிறது

இந்த நிலவைக் கண்டு பொறாமை
கடலைக் கண்டு பொறாமை
நிலத்தைக் கண்டு பொறாமை
பரம்பொருளான அனைத்தின் மீதும் பொறாமை

இயற்கை
இயற்கையாய் இருக்கின்றது
வீசுகிறது
சுடுகிறது
பொழிகிறது
கொல்கிறது

நான் ௬ட இயற்கை தான்
ஒன்றும் இயலவில்லை
குளிர்கிறேன்
வெப்பமுறுகிறேன்
சொல்ல உரிமையில்லை
பெற்றெடுக்கிறேன்
கொண்டாட உரிமையில்லை

இந்த
பஞ்சபூதங்களாய் இருக்கிறேன்
எனக்கென
சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை .

Monday, 27 August 2012

பரிமாணம். . .



இசையென்றாய்
பாடலென்றாய் நல் அமுது என்றாய்
நிலவு என்றாய்
நீங்காத கனவு என்றாய்
கனவின் தேவதையென்றாய்
மலை என்றாய்
மலை முகடு என்றாய்
மலை முகட்டை உரசிச் செல்லும் மேகம் என்றாய்
மேகம் குளிர்ந்து பெய்யும் மழை என்றாய்
மழை பெருகி ஓடும் நதி என்றாய்
கடல் என்றாய்
கடலின் அலை என்றாய்
காதலின் நெருப்பு என்றாய்
என்றாய் என்றாய் என்றாய்
நான் மயங்கி சரிந்தேன்
பெண் என்பதை மறந்தேன்
நான் ஆதிசக்தி என்பதையும் மறந்தேன்.

Sunday, 26 August 2012

இருள் விழிகள். . .




கண்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன
கண்களுக்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன
மலர்களும் கண்கள் போலத்தான்
அர்த்தங்கள் நிரம்பியவை
கண்கள் மலர்ந்ததா
மலர்கள் விழித்தா என
நள்ளிரவில் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள்
மலர் மலரும்
கண்கள் திறக்கும் என்றபோதும்
தகுதியுள்ளவர் யார்
தகுதியற்றவர் யார் என
கண்களுக்கும் தெரியாது
மலர்களுக்கும் தெரியாது

அவை மூடிக் கிடக்கையில்.

Saturday, 25 August 2012

நினைவின் பயணம். . .



என் நினைவுகளோடு
இருக்கும்
நீ
என்னுள் கரைகின்றாய்

காத்திருக்கின்றாய்

அருவியின் ஓசையாய்
மனம்
அதிர்வது
புரிகிறது எனக்கு

அது
என் மீதும்
படரத்தான் செய்கிறது

உன் நினைவில்
வெம்மையில்
உருகுவது அறியாமல்

நான்
நதியில்
கரைவதைப் பார்க்கின்றாய்

தூரதேசத்துப் பறவையாய் ஆனாலும்
கடலை
விழுங்கி
உனையடைவேன்

ஒரே
ஒரு சனத்தில்.

மீட்சி. . .



மலை முகட்டிலிருந்து
வழியும்
நீர் வீழ்ச்சியாய்

ப்ரியங்களைப் பொழிகிறாய்

இலக்கின்றிப் பயணிக்கும்
காற்றைப் போல

உன் அன்பு
பள்ளத்தாக்கை அடைகையில்

கால்களும் கைகளும்
செய்வதறியாது திகைக்க

முத்தங்கள்
ஊற்றெடுக்கும் நிலத்தில்

கடலெனப் பெருகிய
காதல்
உன்னை மீட்கிறது .

Monday, 20 August 2012

செய்திகளற்ற பகல்பொழுது . . .



தாபல்காரரின் வருகையொட்டி
கதவும் ஜன்னல்களும்
திறந்து கொள்கிறான்
துயிலா இமைகளைப் போல

தெருவில்
நிழல்தராத பகல்
அவனது துயரத்தைக் கண்டபடி கடந்து செல்கிறது

அவளின் துயரம்
மேலும் பெருகும்விதமாக
இவள் பெயர் தாங்கியிராத
கடிதங்களைச் சுமந்தபடி
அவளைக் கடந்து செல்கிறார் தபால்காரர்

அருகாமை வீடுகளில் ஒலிக்கும்
குரல்கள்
அவளது இருப்பை
உறுதி செய்கின்றன

தனக்கு வராத கடிதங்களைப் பற்றிய
கற்பனைகளுடன்
மீண்டும் ஒரு நாளுக்காய்
காத்திருக்கத் துவங்குகிறாள் .

Thursday, 16 August 2012

வெறும் பெயர். . .



பெயரில்
ஒன்றுமில்லையென  நினைத்திருந்தேன்

கிளி
புறா
மயில்
மான்
இவைகளுக்குப்  பெயர்  உண்டா

வானம்
மலைத்தொடர்
மேகம்
பஞ்சுப்  பனி
மழை

பணத்தட்டுப்பாடு  இல்லாத
உல்லாசப்  பயணம்

மனத்தட்டுப்பாடில்லாத
மனம்

இவை தராத
மகிழ்வை
வெட்கத்தை

ஒரு
பெயர்

வெறும்
ஒரு பெயர்

கொடுக்கும் என
எனக்குத்  தெரியவே  தெரியாது .