Pages

Thursday, 30 May 2013

ஊஞ்சலாடும் ஈரம். . .



இந்த நிலம்
இப்போது
இப்படியென்று
எவருக்கும் புரிவதில்லை

பருத்திப் பூக்கள் வெடிக்கும் நிலத்தில்
வாழை காய்த்துக் குலுங்கும் நிலத்தில்
எத்தனை வெடிப்புகள் இருந்தபோதிலும்
சிறுமழை
கனமழை எதுவாகிலும்
ஈரத்தால் அத்தனை நெகிழ்ந்து போகும்
நிலத்தின் உட்பரப்பினை நெகிழச் செய்வது எது
உண்மையில் நனைதலில் நெகிழ்வது அகமா புறமா

நீரில் மிதந்துகொண்டிருக்கும்
பரந்து விரிந்த இந்நிலம்
செழித்திருக்கும் தாவரங்களின் இலைகளில் பனித்திருக்கவும்
வேர்களில் செறிந்திருக்கவும்
அறிந்திருக்கும்

நீர்க் கால்களின் அடர்வில்
நெகிழ்கிறது நிலம்

இங்கே நிலம் ஒன்று
இடங்கள் வெவ்வேறு
மேலும் கீழும் அசையும் ஊஞ்சலென
தள்ளாடுகிறது இந்த ஈரம்.

No comments:

Post a Comment